Skip to main content

ரிக் லாரி அதிபர் மனைவி, மகளுடன் விஷ மாத்திரை தின்று தற்கொலை! கடன் சுமையால் விபரீத முடிவு!!

Published on 03/12/2019 | Edited on 03/12/2019

திருச்செங்கோடு அருகே, கடன் சுமையால் ரிக் லாரி அதிபர் தனது மனைவி, மகளுடன் விஷ மாத்திரை தின்று தற்கொலை செய்து கொண்டார்.


நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த எலச்சிபாளையம் அருகே உள்ள கூத்தம்பூண்டி சாயக்காடு பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (54). ரிக் லாரி அதிபர். இவருடைய மனைவி நிர்மலா (47). இவர்களுடைய மகள் சவுமியா (21). நவீன்குமார் என்ற மகனும் உள்ளார்.


சவுமியா, கோவை சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், மோகனுக்கு ரிக் லாரி தொழிலில் பலத்த நட்டம் ஏற்பட்டதால், கடன் நெருக்கடிக்கு ஆளானார். இதனால் அவர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். அதிலும் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கவில்லை. இதனால் கடும் மன உளைச்சலில் இருந்து வந்தார்.

RICK TRUCK BUSINESS MAN FAMILY INCIDENT POLICE INVESTIGATION NAMAKKAL DISTRICT

கடன் கொடுத்தவர்கள் அவரிடம் பணத்தைத் திருப்பிக் கேட்டு அடிக்கடி குடைச்சல் கொடுத்து வந்தனர். இதனால் அவர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்தார். கல்லூரியில் இருந்து விடுமுறைக்கு வீட்டிற்கு வந்திருந்த மகள் சவுமியாவிடமும் கூறியுள்ளார். 


இந்நிலையில், திங்கள்கிழமை (டிச. 2) அதிகாலையில் மோகன், நிர்மலா, சவுமியா ஆகியோர் தென்னை மரங்களில் பூச்சிகளை அழிப்பதற்காக பயன்படுத்தக்கூடிய விஷ மாத்திரைகளை தண்ணீரில் கலக்கிக் குடித்தனர்.


உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மோகன், தனது தம்பி அன்பழகன் என்பவருக்கு செல்போன் மூலம் நாங்கள் மூவரும் விஷம் குடித்துவிட்டோம். நாங்கள் இறந்தவுடன் இறுதிச்சடங்குகளை நல்லபடியாக செய்துவிடு என்று தகவல் சொல்லி இருக்கிறார். 


இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அன்பழகன் விரைந்து அவருடைய வீட்டுக்கு வந்தார். கதவு உள்பக்கம் தாழிடப்பட்டு இருந்தது. கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றார். 


அங்கே அவருடைய அண்ணி நிர்மலா இறந்து கிடந்தார். அண்ணன் மோகன், அவருடைய மகள் சவுமியா ஆகியோர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். இருவரையும் மீட்டு, திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே மோகன் இறந்தார். தனியார் மருத்துவமனையிர் சேர்க்கப்பட்ட சவுமியாவும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 


மோகனின் மகன் நவீன்குமார், பிஎஸ்சி வேளாண்மை படிப்பை முடித்துவிட்டு, மஹாராஷ்டிரா மாநிலத்தில் வேலை செய்து வந்ததால், அவர் மட்டும் இந்த பெரும் துயரத்தில் இருந்து தப்பினார். 


இதுகுறித்து தகவல் அறிந்த வேலகவுண்டன்பட்டி காவல்துறையினர் சடங்களைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடன் சுமையால் ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.