Skip to main content

மதுரையில் வருவாய்த்துறையினர் தொடர் போராட்டம்!

Published on 11/12/2024 | Edited on 11/12/2024
Revenue department in Madurai continues struggle

மதுரை மாவட்டம் வெளிச்சநத்தம் என்ற கிராமத்தில், கடந்த 1996ஆம் ஆண்டு, விசிக சார்பில் அக்கட்சியின் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டது. சுமார் 25 அடி உயரம் கொண்ட இந்த கொடிக்கம்பத்தில் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கொடியை ஏற்றி வைத்தார். இத்தகைய சூழலில் தான் 28 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது இந்த கொடிக் கம்பம் 45 அடி உயரமாக மாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. இந்த புதிய கொடிக் கம்பத்தில் கொடியை ஏற்றுவதற்கான நிகழ்ச்சி கடந்த 8ஆம் தேதி (08.12.2024) திட்டமிடப்பட்டிருந்தது.

இருப்பினும் இந்த கொடிக் கம்பத்திற்கு மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் முதலில் அனுமதி மறுக்கப்பட்டது. அதாவது 25 அடி உயரமுள்ள கொடிக் கம்பத்திற்கு மட்டுமே அனுமதி தரப்பட்டுள்ளது. தற்போது 45 அடி உயரமாக வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பத்திற்கு அனுமதி இல்லை என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து விசிக தொண்டர்கள் கடந்த 7ஆம் தேதி (07.12.2024) இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

இருப்பினும் 45 அடியாக உயர்த்தப்பட்ட விசிக கொடிக் கம்பத்தில் கொடியேற்ற அனுமதி அளிக்கப்பட்டது.  சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அனுமதி வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி கடந்த 8ஆம் தேதி அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. இந்த புதிய கொடிக் கம்பத்தில் கொடியை ஏற்றி வைத்தார். இத்தகைய சூழலில் தான் விசிகவின் 45 அடி நீளம் கொண்ட கொடிக்கம்ப விவகாரத்தில் முறையாகப் பணியை மேற்கொள்ளாமல் கொடிக்கம்பம் நடுவதை தடுக்கத்தவறிய காரணத்திற்காக சத்திரப்பட்டி வருவாய் அலுவலர் அனிதா, காவனூர் கிராம நிர்வாக அலுவலர் பரமசிவம், வெளிச்சநத்தம் கிராம நிர்வாக உதவியாளர் பழனியாண்டி ஆகிய மூவரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் வருவாய்த் துறை அலுவலர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை எதிர்த்து இன்று (11.12.2024) முதல் வருவாய்த்துறையினர் தொடர் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நடத்தி அதில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்