Skip to main content

பல வருடப் பிரச்சனையை ஒரே நாளில் தீர்த்து வைத்த கோட்டாட்சியர்; குவியும் பாராட்டு

Published on 18/03/2023 | Edited on 18/03/2023

 

 Revenue Commissioner constructed road single day town that has no roads many years

 

புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியராக முருகேசன் வந்த பிறகு பாதையில்லாமல் தவித்த மக்களுக்கும் தீர்வுகள் கிடைப்பதை பெருமையாகப் பேசுகிறார்கள்.. நூறாண்டு பாதைப் பிரச்சனைகளுக்கும் ஒரு சில நாட்களில் பாதை அமைத்து புதிய பாதையில் வெற்றிநடை போட வைத்து வருகிறார்.

 

கந்தர்வக்கோட்டை தொகுதியில் தொடங்கி ஆலங்குடி தொகுதியில் குளமங்கலம், சேந்தன்குடி என பல கிராமங்களில் பல ஆண்டு பாதைப் பிரச்சனையை அசால்ட்டாக தீர்த்து வைத்தவர், வெள்ளிக்கிழமை கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் கிராமத்தில் பல வருட பிரச்சனையை முடித்து புதிய பாதை அமைத்திருக்கிறார்.

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் கிராமத்தில் தெற்கு பகுதியில் இனாம், ஜமின் கிராமங்களின் எல்லையில் பல வருடங்களாக பாதை வசதி இல்லாமல் ஏராளமான குடும்பங்கள் வசித்து வந்தனர். அதனால் தங்கள் குடியிருப்பு பகுதிக்கு பாதை வசதி வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமுவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். ஒரு மாணவியும் மாவட்ட ஆட்சியரிடம் தனியாக ஒரு கோரிக்கை மனு அனுப்பி இருந்தார்.

 

இந்த மனுக்கள் சம்பந்தமாக புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில் ஆலங்குடி வட்டாட்சியர் செந்தில்நாயகி, கீரமங்கலம் வருவாய் ஆய்வாளர் ரவி, செரியலூர் கிராம நிர்வாக அலுவலர் அருள்வேந்தன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் சம்பந்தப்பட்ட பகுதிக்குச் சென்று ஆய்வு செய்துள்ளனர். அந்தப் பகுதியில் ஏற்கனவே அரசு கணக்குகளில் பாதை இருந்தது தெரிய வந்தது.

 

 Revenue Commissioner constructed road single day town that has no roads many years

 

நிலவியல் பாதை இருப்பதை அறிந்த கோட்டாட்சியர் முருகேசன் அந்தப் பகுதியில் உள்ள நில உரிமையாளர்களிடம் பேசி பட்டா நிலமாக இருந்தாலும் நிலவியல் பாதை என்பது பதிவாகி உள்ளதால் அதனை யாராலும் தடுக்க முடியாது. அதனால் நிலவியல் பாதையை எடுக்கப் போகிறோம் என்று விளக்கமளித்ததுடன் வெள்ளிக்கிழமை வருவாய் துறை அதிகாரிகள், 2 பொக்லைன்களுடன் வந்து வரைபடத்தை பார்த்து நில அளவை செய்து புதிய பாதை அமைத்துள்ளார். சில இடங்களில் கிளம்பிய எதிர்ப்புகளையடுத்து அவர்களிடம் சமாதானமாக பேசி பாதை அமைக்கப்பட்டது. இரவு 9 மணி வரை இருந்து பணிகள் முழுமையாக முடிவடைந்த பிறகே சக அதிகாரிகளுடன் அங்கிருந்து கிளம்பினார்.

 

பல வருடப் பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு கண்டு புதிய பாதை அமைத்துக் கொடுக்க உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, களத்தில் நின்று பாதையை அமைத்த கோட்டாட்சியர் முருகேசன் மற்றும் வருவாய்த்துறையினர், காவல் ஆய்வாளர் பாஸ்கரன் உள்ளிட்டவர்களுக்கு அப்பகுதி மக்கள் கண்ணீர் மல்க நன்றி கூறினார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.