தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவின் காரணமாக சிகிச்சை மேற்கொள்ள தனது மகன் மற்றும் மனைவியுடன் அமெரிக்கா சென்றிருந்தார். அதனால் அவரால் திமுக தலைவர் கலைஞருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வர இயலவில்லை. ஆனாலும், வீடியோ மூலம் தனது இரங்கலை தெரிவித்திருந்தார். கலைஞரைப்பற்றி பேச முடியாமல் அந்த வீடியோவில் விஜயகாந்த் அழுதார்.
இந்நிலையில், விஜயகாந்த் சிகிச்சை முடிந்து அமெரிக்காவில் இருந்து திரும்பினார். இன்று அதிகாலை 3 மணியளவில் மெரினாவில் அண்ணா சதுக்கத்தில் உள்ள கலைஞர் நினைவிடத்திற்கு மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷுடன் சென்றார். பிரேமலதாவும், சுதீஷும் அவரை கைத்தாங்கலாக அழைத்து வந்தனர். கலைஞரின் நினைவிடத்தில் மலர்தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.