Skip to main content

சென்னையில் ஓய்வுபெற்ற நீதிபதி வீட்டில் கொள்ளை... நேபாள கும்பல் கைது!

Published on 05/04/2022 | Edited on 05/04/2022

 

Retired judge's house in Chennai robbed ... Nepali gang arrested!

 

சென்னை அண்ணா நகரில் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் நேபாளத்தைச் சேர்ந்த கொள்ளை கும்பலை ஹைதராபாத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

ஓய்வுபெற்ற நீதிபதி ஞானப்பிரகாசத்திற்கு சொந்தமான வீடு ஒன்று சென்னை அண்ணா நகரில் இருக்கிறது. மதுரவாயலில் குடும்பத்துடன் தங்கி இருந்த ஓய்வுபெற்ற நீதிபதி வாரத்திற்கு ஒருமுறை சென்னை அண்ணாநகரில் உள்ள வீட்டிற்கு வந்து பராமரித்து விட்டுச் செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த 29 ஆம் தேதி வீட்டினுடைய கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்க்கையில் வீட்டிலிருந்த தங்கநகை, பணம் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளதால் இதுதொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தினர். அருகிலிருந்த வீடுகளில் கிடைத்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணையைத் தீவிரப்படுத்தியபோது தொடர்ந்து மூன்று நாட்களாக வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட கொள்ளையர்கள் சிலர் வந்து சென்றது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருந்தது.

 

கடந்த 22 ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் 5 சவரன் நகை மற்றும் 5 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். அப்பொழுது வீட்டிலிருந்த சிசிடிவி கேமரா இணைப்புகளைத் துண்டித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சிசிடிவி கேமரா இல்லாததை சாதகமாக்கிக் கொண்டு மீண்டும் அந்த வீட்டிற்குச் சென்று மது அருந்தி விட்டு ஒருநாள் அங்கேயே தங்கி இருந்துள்ளனர். அதேபோல் 24ஆம் தேதியும் வீட்டிற்கு வந்து சில பொருட்களை திருடி சென்றுள்ளனர். ஆனால் அருகில் இருந்த குடியிருப்புகளில் கிடைத்த  சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கொள்ளையடித்த கும்பலை தேடி வந்தனர். கொள்ளையடித்த நபர்களில் ஒருவர் சைக்கிள் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அந்த சைக்கிள் சென்ற இடத்தை சிசிடிவி காட்சிகள் மூலம் பின் தொடர்ந்து செனாய் நகரில் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் தங்கியிருந்த இடத்திற்குச் சென்ற போலீசார் அங்கு பூபேந்திரா என்ற  நபரை பிடித்து விசாரித்ததில் மொத்தமாக நான்கு பேர் நேபாள நாட்டைச் சேர்ந்தவர்கள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. நேபாள நாட்டைச் சேர்ந்த கணேஷ், பூபேந்திரா, சந்தோஷ் பட்ராய், லாலு ஆகிய நான்கு ஆகியோர் கைது செய்யப்பட்டு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கொள்ளையில் சம்பந்தமுடைய மேலும் 2 பேரை ஹைதராபாத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

“தமிழக அரசுக்கு நன்றி” - குகேஷ் நெகிழ்ச்சி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Thank you to the Government of Tamil Nadu Gukesh 

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்த தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் ஆவார்.

அதே சமயம் செஸ் வீரர் குகேஷுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “அபாரமான சாதனை படைத்த குகேஷுக்கு வாழ்த்துகள். 17 வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் செஸ் தொடரை வென்ற இளம் வீரர் என்ற வரலாற்றை படைத்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக சீனாவின் டிங் லிரனுக்கு எதிரான போட்டியிலும் குகேஷ் வெல்ல வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பிறகு கனடாவில் இருந்து சென்னை வந்த செஸ் வீரர் குகேஷூக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “இந்த வெற்றி எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. இந்த தொடரில் முதல் இடம் பிடிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. சென்னை கிராண்ட் மாஸ்டர் தொடரை நடத்திய தமிழக அரசுக்கு நன்றி. அதாவது கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல சென்னை கிராண்ட் மாஸ்டர் தொடர் உதவியாக இருந்தது. உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி - 2023, சென்னை லீலா பேலஸில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. இந்தப் போட்டியில் தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.