அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்பு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும், தேமுதிக நிர்வாகிகளும், திரையுலகப் பிரபலங்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். மக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் தேமுதிக அலுவலகம் முன்பு திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து கூட்டம் அதிகமாக வரவே, விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணிக்கு மேல் தீவுத்திடலில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. அங்கு பல்லாயிரக்கணக்கான தொடண்டர்கள் குவிந்து விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதுபோக, தொடர்ந்து வெளியூர்களில் இருந்து மக்கள் தீவுத் திடலை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். தீவுத்திடல் எங்கு திரும்பினாலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இந்த நிலையில், தீவுத்திடல் மற்றும் அதனை சுற்றியுள்ள சாலைகள் வழியாக செல்வதை தவிர்க்க வேண்டும் என வாகன் ஓட்டிகளுக்கு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். சென்னை காமராஜர் சாலையில் இருந்தும், மன்றோ சிலை மற்றும் சென்ட்ரல் வழியாகவும் தீவுத்திடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், வெளி மாவட்டங்களில் இருந்து வரும் தொண்டர்களின் வாகனங்களுக்கு அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை வரை மட்டுமே அனுமதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இலகுரக, இருசக்கர வாகனங்கள் பெரியார் சிலை, சுவாமி சிவானந்தா எம்.எல்.ஏ.விடுதி சாலை வழியாக செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.