Skip to main content

கலை இலக்கியப் பெருமன்றத்தின் வெள்ளி விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!!

Published on 31/05/2021 | Edited on 31/05/2021

 

Art Literacy meeting silver jubilee; Resolutions passed

 

மனித இனம் உருவாகும்போதே தமிழ் சமூகமும் தமிழ் இலக்கியமும் தோன்றியுள்ளதற்கான பல ஆய்வு ஆதார நிலைகள் தொடர்ந்து வெளிவந்துகொண்டே உள்ளன. எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் ஆகியோர் அமைப்பு ரீதியாக சென்ற நூற்றாண்டில்தான் இணைந்து செயல்பட தொடங்கினார்கள். அப்படி தமிழ் இலக்கியவாதிகளை, எழுத்தாளுமைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட அமைப்புதான் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். ‘இலக்கிய பேராசான்’ என்றழைக்கப்பட்ட பொதுவுடமை இயக்க தலைவர் ப. ஜீவானந்தம் தலைமையில் இந்த அமைப்பு 1961இல் உருவாக்கப்பட்டது. 

 

மறைந்த பாலதண்டாயுதம், ஜெயகாந்தன், கே.சி.எஸ். அருணாச்சலம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், குன்றக்குடி அடிகளார், தா. பாண்டியன், தொ.மு.சி. ரகுநாதன், தனுஷ்கோடி ராமசாமி, வாய்மைநாதன், தத்துவ ஆய்வாளர் வானமாமலை, தி.க.சி, நாட்டுப்புறக் கலைஞர் கே.ஏ. குணசேகரன், கைலாசமூர்த்தி, ஹைகூ கவிஞர் ரசூல் என நூற்றுக்கணக்கான இலக்கிய ஜாம்பவான்கள் இயங்கிய அமைப்பு, தற்போதும் நாவலாசிரியர் பொன்னீலன் உட்பட பல இலக்கிய தலைமை பண்பு கொண்டவர்களால் இயங்கும் அமைப்பு தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம். தற்போது அதன்  60 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து வைர விழாவின் தொடக்க நிகழ்ச்சி சென்ற 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை இணையவழியில் நடைபெற்றது.

 

பெருமன்றத்தின் மாநிலத் தலைவர் சி. சொக்கலிங்கம் தலைமை வகிக்க, பொதுச் செயலாளர் முனைவர் இரா. காமராசு வரவேற்றுப் பேசினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா. முத்தரசன், முற்போக்கு எழுத்தாளர் சம்மேளனத்தின் தேசியத் தலைவர் எழுத்தாளர் பொன்னீலன், பெருமன்றத்தின் முதல் செயற்குழுவின் உறுப்பினர் எழுத்தாளர் மு. பழனியப்பன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். ஆய்வாளர் ஆ. சிவசுப்பிரமணியன் சிறப்புரை நிகழ்த்தினார். பெருமன்றத்தின் நிறுவனர் ப. ஜீவானந்தம் உள்ளிட்ட முன்னோடிகளுக்குப் புகழஞ்சலியும் செலுத்தப்பட்டது. மறைந்த பத்திரிகையாளரும் முற்போக்கு எழுத்தாளருமான இரா. ஜவஹர் அவர்களுக்கு  மௌன அஞ்சலியும் வீர வணக்கமும் செலுத்தப்பட்டது.

 

Art Literacy meeting silver jubilee; Resolutions passed

 

இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து 250 பேர் ஜூம் (zoom) செயலி வழியே பங்கேற்றனர். மேலும், ஃபேஸ்புக் பக்கம் மூலம் நேரலையும் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் சில முக்கிய தீர்மானங்களையும் தோழர்கள் நிறைவேற்றினார்கள், அதை அமைப்பின் மாநிலச் செயலாளர் இரா. காமராசு நம்மிடம் கூறினார். அவை “பிற மாநிலங்களில் இருப்பதைப் போல தமிழ்நாட்டிலும் மாநில இலக்கிய அமைப்பு (மாநில சாகித்திய அகாதெமி) ஒன்றை தமிழ்நாடு அரசு நிறுவி, ஆண்டுதோறும் சிறந்த இலக்கிய ஆளுமைகளுக்கு விருது வழங்கிச் சிறப்பிக்க வேண்டும். தற்போது புத்தாண்டின்போது இலக்கியத்தின் பல பிரிவுகளில் வழங்கப்படும் பரிசுகள் தொடர வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அரசு நூலகங்களுக்குப் ‌புத்தகங்கள் வாங்கச் செய்வதற்கு கூடுதல் தொகை ஒதுக்கீடு செய்து பதிப்பகங்கள் வளர்ச்சி அடைய உதவ வேண்டும். இதற்கான நூலக ஆணை நேர்மையான முறையில் வழங்கப்பட வேண்டும்.

 

கரோனா பெருந்தொற்று காலத்தில் நிகழ்ச்சிகளின்றி வறுமையில் வாடும் அனைத்துக் கலைஞர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்பட வேண்டும். கல்லூரி, பல்கலைக்கழகங்களில் நிரப்பப்‌படாமல் இருக்கும் காலிப் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும். கிராமப்புற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிராக, பல்கலைக்கழக மானியக் குழு முன்மொழிந்துள்ள நாற்பது விழுக்காடு இணையவழிக் கல்வி மற்றும் பட்டப்படிப்பிற்கு நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் ‌என்ற பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய அறிவிப்பையும் அரசு திரும்பப் பெற வேண்டும். மாநில அரசின் புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு மற்றும் நீட் தேர்வு ஒழிப்பு நிலைப்பாட்டைப் பெருமன்றம் வரவேற்கிறது. தமிழ்நாடு அரசின் சமச்சீர் பாடத்திட்டத்திலுள்ள மதச்சார்பின்மைக்கு எதிரான, தவறான பகுதிகளை நீக்க வேண்டும். இப்படி எட்டு தீர்மானங்களை நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைத்துள்ளோம்” என்றார். 

 

தொன்மையான தமிழ் மொழிக்கும் இலக்கியத்திற்கும் ஈடற்ற உழைப்பைச் செலுத்திவரும் இலக்கிய ஆளுமைகளின் அமைப்புகள் தொடர்ந்து பயணிக்க வேண்டும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அன்னைத் தமிழ் அரியணை ஏறுமா?” - ராமதாஸ்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Ramadoss questioned Will Tamil ascend the throne?

தமிழ்நாடு அரசின் சார்பில் 2வது உலகத் தமிழ் செம்மொழி மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் நடத்தப்படும் எனத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், செம்மொழி மாநாட்டிற்கு முன்பாக கல்வி, வணிகம், நீதிமன்றங்களில் அன்னைத் தமிழ் அரியணை ஏறுமா? என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக, ராமதாஸ் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தமிழ்நாடு அரசின் சார்பில் இரண்டாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் சென்னையில் நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். நல்லது. அதற்குள்ளாகத் தமிழ்க் கட்டாயப் பாடம், தமிழ் பயிற்று மொழி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழ்ப் பெயர்ப்பலகைகள் ஆகியவற்றை சாத்தியமாக்கி  அன்னைத் தமிழை அரியணையில் ஏற்றுமா தமிழக அரசு?” என்று தெரிவித்துள்ளார்.

Next Story

எழுத்துப் பிழையுடன் அரசு பெயர்ப் பலகைகள்; கவனிக்குமா தமிழ் வளர்ச்சித்துறை?

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Spelling mistake on government office name boards

தமிழகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அதுவரை நடைமுறையில் இருந்து வந்த வீட்டுவசதித் துறையை, 'வீட்டுவசதி  மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை' என்று பெயர் மாற்றியது. அதேபோல, குடிசை மாற்று வாரியத் துறையை, 'தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்' என்று பெயர்களை மாற்றி அமைத்தது. ஆனால் இந்த இரு துறைகளின் பெயர்களிலும் இடம்பெற்றுள்ள, 'நகர்ப்புறம்' என்ற சொல்லை, 'நகர்ப்புரம்' என்று குறிப்பிட்டுள்ளனர். அரசின் இணையதளத்திலும் அவ்வாறே பிழையுடன் 'நகர்ப்புரம்' என்றே பதிவு செய்துள்ளனர். அதாவது, வல்லின 'றகரம்' வர வேண்டிய இடத்தில்,  இடையின 'ரகர' எழுத்தைக் குறிப்பிட்டு, 'நகர்ப்புரம்' என்று பிழையுடன் குறிப்பிடப்பட்டு இருந்தது.

முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 11.12.2021 ஆம் தேதி சேலத்தில் கலந்து கொண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும்கூட, 'நகர்ப்புரம்'  என்று குறிப்பிட்டே பதாகைகள் வைக்கப்பட்டு இருந்தன. செய்தி மக்கள் தொடர்புத் துறை அச்சிட்டு இருந்த அழைப்பிதழிலும் 'நகர்ப்புரம்'  என்று பிழையுடனே குறிப்பிட்டு இருந்தனர். இதுகுறித்து நக்கீரன் இணைய ஊடகத்தில் 20.12.2021ஆம் தேதி செய்தி வெளியிட்ட பிறகு, அரசு இணையதளத்தில் இருந்து பிழையான சொல்  திருத்தம் செய்யப்பட்டு 'நகர்ப்புறம்' என்று மாற்றப்பட்டது.

இது இப்படி இருக்க, சேலம் குமாரசாமிப்பட்டியில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டட முகப்பின் இடப்பக்கத்தில், 'நகர்புர' சமுதாய சுகாதார மையம் என்றும், வலப்பக்கத்தில் 'நகர்ப்புர' ஆரம்ப சுகாதார நிலையம் என்றும், நுழைவு வாயில் முன்பு உள்ள முகப்பு  சுவரில் உள்ள கருப்பு நிற பளிங்கு கல்வெட்டில், 'நகர்புற' சமுதாய சுகாதார மையம் என்றும் எழுத்துப் பிழைகளுடன் பெயர்ப் பலகை வைத்துள்ளனர். வல்லின றகர எழுத்துடன் குறிப்பிடப்படும் புறம் என்ற சொல்லுக்கு திசை, பக்கம், வெளியே, காலம், வீரம், புறநானூறு என பல பொருள்கள்  உள்ளன. இங்கே நகர்ப்புறம் என்பது அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் பெற்ற நிலப்பரப்பைக் குறிக்கும். அதாவது, இடவாகுபெயராக  வருவது, புறம் ஆகும். நகர் + புறம் = நகர்ப்புறம் எனலாம். ஆகையால், நகர்ப்புறம் என்றே பெயர்ப் பலகையில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

அதேபோல, இடையின 'ரகற' எழுத்துடன் குறிப்பிடப்படும் புரம் என்ற சொல்லுக்கு நகரம், ஊர் என்று பொருள்கள் உள்ளன. இது ஒரு  பெயர்ச்சொல்லாகும். வணிகர்கள் வாழும் பகுதியை நகர் என்கிறார்கள் மொழியியல் ஆய்வாளர்கள். காஞ்சிபுரம் என்றால் காஞ்சி நகர் என்றும், விழுப்புரம் என்றால் விழுமிய நகர், பல்லவபுரம் என்றால் பல்லவ நகர் என்றும் பொருள்படும்.  எனில், நகர்ப்புரம் என்று குறிப்பிட்டால் அதன் பொருள் 'நகர்நகர்' என்றாகி விடும். ஆக, நகர்ப்புரம் என்று குறிப்பிடுவது முற்றிலும் பிழையானது.

Spelling mistake on government office name boards

இது ஒருபுறம் இருக்க, சேலம் குமாரசாமிப்பட்டியில் நகர்ப்புற சுகாதார மையத்தில் பெயர்ப்பலகை எழுதுகையில், அதிகாரிகள் நகர்ப்புறம்  அல்லது நகர்ப்புரம் என்பதில் கடைசி வரை பெரும் குழப்பத்துடன் இருந்திருக்கக்கூடும். ஓரிடத்தில் 'நகர்புரம்' என்றும், மற்றொரு இடத்தில் 'நகர்ப்புரம்' என்றும், நுழைவு வாயில் பகுதியில் 'நகர்புறம்' என்றும் விதவிதமாக  எழுதியுள்ளனர். நகர் + புறம் என்றாலும் சரி; நகர்+புரம் என்றாலும் சரி; சேர்த்து எழுதும்போது இரண்டு சொல்லுக்கும் இடையில் 'ப்' என்ற  ஒற்றெழுத்து மிகும். இலக்கண விதிப்படி சொல்வதெனில், வருமொழியில் ககரம், சகரம், தகரம், பகரம் ஆகிய எழுத்துகளில் தொடங்கும் சொற்கள் இருந்தால், அவ்விரண்டு சொற்களுக்கும் இடையில் க், ச், த், ப் ஆகியவற்றுக்கு இனமான ஏதேனும் ஓர் ஒற்றெழுத்துத் தோன்றும்.

இது மட்டுமின்றி, சேலம் பெரமனூர் நாராயணசாமி தெருவில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாகப் பொறியாளர்  அலுவலக பெயர் பலகையிலும் நகர்ப்புறம் என்பதை 'நகர்ப்புரம்' என்று எழுத்துப் பிழையுடன் வைத்துள்ளனர். இப்படி பிழையான பெயர்ப் பலகைகளை அன்றாடம் காண்போருக்கு, ஒரு கட்டத்தில் அந்தச் சொல்தான் சரியாக இருக்குமோ என்ற முடிவுக்கும் வந்து விடும் அபாயம் இருக்கிறது. இது தொடர்பாக நாம் சேலம் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் ஜோதியிடம் கேட்டபோது, ''இடையின ரகர எழுத்துடன்  'நகர்ப்புரம்' என்று எழுதுவது பிழையானதுதான். சேலம் குமாரசாமிப்பட்டி சுகாதார நிலைய பெயர்ப்பலகையில் நகர்ப்புறம் என்றுதான் எழுத  வேண்டும். இது தொடர்பாக நீங்கள் ஒரு கடிதம் எழுதினால் எங்கெங்கு பிழைகள் இருக்கிறதோ அங்கெல்லாம் திருத்தி எழுதி விடுகிறோம்,'' என்றார்.     

Spelling mistake on government office name boards

அவரை தொடர்பு கொண்டபோது, 'ஐயா' என்றே அழைத்தவர், முழு உரையாடலையும் மொழி கலப்பின்றி பேசினார். பதவிக்குத் தகுந்த அணுகுமுறை சரிதான் என்றாலும் கூட, இதற்கெல்லாம் அரசுக்குக் கடிதம் எழுதினால்தான் பிழைகள் திருத்தப்படும் என்பது சற்று முரணாக இருந்தது. ஒரு தவற்றைச் சுட்டிக்காட்டிய பிறகு அரசு அலுவலர்கள் அதை சரிசெய்வதே சிறந்தது. நகர்ப்புறமா? அல்லது நகர்ப்புரமா? என்ற குழப்பம் இன்னும் தமிழக அரசுக்கே தீர்ந்தபாடில்லை போலிருக்கிறது. நடப்பு ஆண்டுக்கான நிதிநிலை  அறிக்கையிலும் நகர்ப்புறம் என்று வர வேண்டிய எல்லா இடங்களிலும் நகர்ப்புரம் என்றே பிழையுடன் குறிப்பிட்டு இருந்தனர்.

செவ்வியல் செறிவுடன் கூடிய தமிழ் மொழி, ஏற்கெனவே வேகமாகச் சிதைந்து வருகிறது. அதை அழிந்து விடாமல் காப்பதே நம் கடமை.  நாடாளுமன்றத் தேர்தலைக் காரணம் காட்டி, காலம் தாழ்த்தாமல் மேற்படி பிழைகளைத் தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் சேலம் மாநகராட்சி  அலுவலர்கள் விரைந்து சரிசெய்திட வேண்டும்.