Skip to main content

விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும்... ஒன்றியக் குழுக் கூட்டத்தில் தீர்மானம்! 

Published on 29/10/2020 | Edited on 29/10/2020

 

Resolution of the Union Committee to create a new district headed by Vriddhachalam

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்ட அரங்கில், ஒன்றியக் குழு கூட்டம் நடைபெற்றது. ஒன்றியக் குழுத் தலைவர் செல்லத்துரை தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு துணைத்தலைவர் பூங்கோதை முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமாரி வரவேற்றார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவா தீர்மானங்களை வாசித்தார். இதில் வரவு, செலவு கணக்குகள் கவுன்சிலர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.

 

இக்கூட்டத்தில் பேசிய பா.ம.க உறுப்பினர் செல்வராஜ், "குப்பநத்தம் - நறுமணம் ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிநிற்கும் மழைநீரை அகற்றி, மழைக்காலங்களில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். இதேபோல் மற்றொரு பா.ம.க உறுப்பினர் சரவணன் பேசும்போது, "எ.வடக்குப்பம் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டதில் இருந்து இதுவரை போக்குவரத்திற்குப் பயனின்றி கிடக்கிறது. உடனடியாக அதில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றி, மேலும் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். 

 

தி.மு.க உறுப்பினர் பச்சமுத்து பேசும்போது, "தீர்மான நகலைப் படித்ததும் மனத்துயரம் தான் ஏற்படுகிறது. எங்கள் பகுதியில் கட்டிடம் இடிக்கும் பணி கூட எங்களுக்குத் தெரியவில்லை. வரவு, செலவு கணக்குகளை முழுமையாகத் தெரியப்படுத்த வேண்டும். இருப்பு உள்ள நிதியை முழுமையாகத் தெரியப்படுத்த வேண்டும். அனைத்து கவுன்சிலர்களுக்கும் முறையான நிதி ஒதுக்க வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டார். 


உறுப்பினர்களின் கேள்விக்குப் பதிலளித்த வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமாரி, "உறுப்பினர்களின் கோரிக்கைகள், வேண்டுகோள்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் கூறினார்.

 

இக்கூட்டத்தில் ஒன்றியக் குழு தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட 14 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். ஐந்து கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. கூட்டத்தின் முடிவில் 16 ஆவது வார்டு ஆலிச்சிக்குடி ஒன்றிய கவுன்சிலர் செந்தில்குமார் அனைத்து கவுன்சிலர்களுக்கும் உரிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை எனக் கூறி தீர்மான நகலில் கையெழுத்திடாமல் வெளியேறினார். 

 

கூட்டத்தில், "கடலூர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும்" என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.