Skip to main content

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு வலுக்கும் எதிர்ப்பு - அதிர வைத்த மக்கள் போராட்டம்!

Published on 25/03/2018 | Edited on 26/03/2018
Tuticorin Against Sterlite Copper Plant




தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், அதன் விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மாபெரும் கண்டன போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என பல்லாயிரகணக்கான மக்கள் பங்கேற்று தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளனர்.

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசுப்படுவதாகவும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்தனர். எதுவும் பயன் அளிக்கவில்லை.

 

Tuticorin Against Sterlite Copper Plant



இதனிடையே, கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், வேதாந்தா குழுமம் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க முயற்சியிலும் ஈடுபட்டது. இதற்கான அனுமதி கிடைக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்ட பணிகளையும் மேற்கொண்டது. எனவே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்த மக்கள், ஆலையால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் உயிர்வாழ தகுதியற்ற நிலை ஏற்படும் என்பதை வலியுறுத்தி கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி முதல் பலகட்டங்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்ல முடிவு செய்த மக்கள், நீதிமன்ற அனுமதி பெற்று மாபெரும் கடையடைப்பு, பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டனர். அதன்படி, தூத்துக்குடியில் நேற்று காலை முதல் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் 10,000 கடைகள், வணிக நிறுவனங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுனர். மேலும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்குச் செல்லவில்லை.

 

Tuticorin Against Sterlite Copper Plant


 


இதைதொடர்ந்து, மாலையில் சிதம்பர நகர் பேருந்து நறுத்தம் அருகே திரண்ட பொதுமக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஏதிராக நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் பங்கேற்றனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், அதன் விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்திறக்கு, எந்த ஒரு தலைமையும் இல்லாமல், அரசியல் பின்புலம் எதுவும் இல்லாமலும் பல்லாயிரகணக்காண மக்கள் தன்னெழுச்சியாக ஒன்று திரண்டு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான மெரினா போராட்டத்திற்கு பின்னர் ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு எதிராக மீண்டும் ஒர் மக்கள் தன்னெழுச்சி போராட்டமாக அமைந்ததால், தூத்தக்குடி மக்களின் போராட்டத்தை ஒட்டு மொத்த தமிழகமே திரும்பி பார்த்தது.

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Tuticorin incident Court action order

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (27.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” என பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

‘ஸ்டெர்லைட் ஆலை எந்த உத்தரவையும் மதிப்பது இல்லை’ - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு குற்றச்சாட்டு

Published on 14/02/2024 | Edited on 14/02/2024
Tamil Nadu Govt Sterile plant does not respect any order

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையால், அந்தப் பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, கடந்த 2018ம் ஆண்டு மே 22ம் நாள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என 13 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் பலத்த காயங்களை அடைந்தனர். இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை மூடத் தமிழக அரசு உத்தரவிட்டது. 

இதனையடுத்து, ஸ்டெர்லைட் மீதான தடை உத்தரவை நீக்கி மீண்டும் திறக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று (14-02-24) உச்சநீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், ‘ஸ்டெர்லைட் ஆலை, அரசின் உத்தரவையும், நீதிமன்ற உத்தரவையும் மதிப்பதும் இல்லை. அமல்படுத்துவதும் இல்லை. நீதிமன்ற உத்தரவுகளை ஸ்டெர்லைட் நிர்வாகம் பலமுறை மீறியுள்ளது. விதி மீறல்களில் ஈடுபட்டதற்காக ஸ்டெர்லைட் ஆலைக்கு ஏற்கனவே ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது’ என்று வாதிடப்பட்டது.

இதனையடுத்து உச்சநீதிமன்றம் கூறியதாவது, ‘ஆலை பாதுகாப்பாக செயல்படுகிறதா என்று எந்த ஆய்வும் நடத்தாமல் உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய இயலாது. அரசும், ஸ்டெர்லைட் நிர்வாகமும் ஒப்புக்கொண்டால் நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்யலாம். அதன் பிறகு ஆலையை திறப்பதா? வேண்டாமா? என்பது தொடர்பாக முடிவு செய்யலாம்’ என்று தெரிவித்தது.