பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு செல்லும் என்ற விவகாரம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இத்தீர்ப்பு தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும் பொருட்டு சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பங்கேற்ற கட்சியினர், கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய திருமாவளவன், “தமிழ்நாடு அரசு 50% இட ஒதுக்கீட்டை மீறலாம் என்று இந்தத் தீர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இட ஒதுக்கீட்டில் 50% தாண்டக்கூடாது என்ற வரம்பு இருந்தும் கூட அதையே இந்த 5 நீதிபதி அமர்வு கொண்ட உச்சநீதிமன்றம் மீறியுள்ளது. பொதுப்பிரிவிலிருந்து 10% எடுத்திருக்கிறது. அப்படிப் பார்க்கிறபோது 60% ஆக இட ஒதுக்கீடு உயர்ந்துவிட்டது.
அப்படி இருக்கும் சூழலில் ஓபிசி க்கான இட ஒதுக்கீட்டையும் உயர்த்த வேண்டும். ஏற்கனவே டேட்டா இருக்கக்கூடிய சமூகமாக எஸ்.சி இருப்பதனால் அவர்களுக்கு 18% இருந்து 20% ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையையும் இந்தக் கூட்டத்தில் முன் வைத்துள்ளோம்” எனக் கூறினார்.