
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருச்சி, தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கன்னியாகுமரி, கடலூர் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு முடுக்கிவிட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு காவல்துறை தலைவர் முனைவர் சைலேந்திர பாபு தெரிவித்துள்ளதாவது, "சென்னை, தஞ்சை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் தயார் நிலையில் மாநில பேரிடர் மீட்புப்படைகள் உள்ளனர். அதேபோல், மாநிலம் முழுவதும் சுமார் 75,000 காவலர்கள் மீட்புப் பணிக்கு தயார் நிலையில் உள்ளனர். 350 கடலோர காவல்படை வீரர்கள் சிறு படகுகளுடன் தயார் நிலையில் உள்ளனர். 250 பேர் கொண்ட சிறப்பு அதிரடிப்படைக் குழுவினர் நிலச்சரிவு போன்ற இடர்பாடுகளை சரி செய்வர். அவசர உதவிக்கு 044- 28447701, 044- 28447703 என்ற காவல் கட்டுப்பாட்டு அறை எண்ணிற்கு அழைக்கலாம். 044- 23452380, 044- 23452359 என்ற எண்களிலும் அவசர உதவிக்கு தொடர்புக் கொள்ளலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, திருவாரூர் மாவட்ட காவல்துறை எஸ்.பி. கூறுகையில், "கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, முத்துப்பேட்டை உள்ளிட்டப் பகுதிகளில் தயார் நிலையில் மீட்புப்படை உள்ளன" எனத் தெரிவித்தார்.