/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ips_43.jpg)
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் உள்ள பழவேற்காடு ஏரியின் முகத்துவாரம் ஆண்டுதோறும் அடைபட்டு மீனவர்கள் கடலுக்குள் தங்கள் படகுகள் மூலம் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த பிரச்சனையை நிவர்த்தி செய்திடக் கோரி பழவேற்காடு மீனவ மக்கள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இக்கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசால் ரூ.26.85 கோடி மதிப்பீட்டில் பழவேற்காடு ஏரி முகத்துவாரம் தூர்வாரி அலைதடுப்பு சுவர்கள் அமைத்து நிலைப்படுத்தப்படும் பணியை மேற்கொள்வதற்கு தமிழக அரசு சார்பில் நிர்வாக ஒப்புதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை அமைச்சகம் மத்திய சுற்றுச்சூழல் அனுமதி 14.02.2022 அன்று பெறப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை அமைச்சகம் வழங்கிய சுற்றுச்சூழல் அனுமதியில் குறிப்பிட்ட நிபந்தனைகள் மற்றும் சட்ட விதிகளில் உள்ளவாறு தேசிய வனவிலங்கு வாரியத்தின் அனுமதி பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, தேசிய வனவிலங்கு வாரியத்தின் அனுமதி பெறும் பொருட்டு, மாநில வனவிலங்கு வாரியத்திற்கு கருத்துரு, மீன்வளம் மற்றும் மீன்வளத்துறை மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தலைமையில் 26.09.2023 அன்று நடைபெற்ற மாநில வனவிலங்கு வாரியக்கூட்டத்தில், பழவேற்காடு ஏரி முகத்துவாரம் தூர்வாரி, அலைதடுப்பு சுவர்கள் அமைத்து நிலைப்படுத்தப்படும் பணி மேற்கொள்ள மாநில வனவிலங்கு வாரியத்தால் தேசிய வனவிலங்கு வாரியத்திற்கு அனுமதி கோரி பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தேசிய வனவிலங்கு வாரியத்தின் அனுமதி பெறப்பட்டவுடன், பழவேற்காடு ஏரி முகத்துவாரம் தூர்வாரி, அலைதடுப்பு சுவர்கள் அமைத்து நிலைப்படுத்தப்படும் பணி, தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் உடனே துவங்கப்பட்டு, விரைந்து முடிக்கப்பட்டு மீனவ மக்களின் உபயோகத்திற்கு கொண்டு வரப்படும் என, தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)