Skip to main content

பற்கள் பிடுங்கிய பல்வீர்சிங் வழக்கு; டெல்லி நீதிமன்றத்திற்கு மாற்ற கோரிக்கை

Published on 18/12/2023 | Edited on 18/12/2023
Request to transfer Balveer Singh tooth extraction cause to Delhi court

பயிற்சி முடித்த உடனேயே நெல்லை மாவட்டத்தின் அம்பை சப்-டிவிசனின் ஏ.எஸ்.பி.யாக கடந்த வருடம் அக்டோபர் மாதம் நியமிக்கப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பல்வீர்சிங். தான் பணியாற்றுகிற மாவட்டத்தின் தனது உயரதிகாரியும் ஐ.பி.எஸ். ரேங்க் என்றால் ஒத்துப்போவார். மாறாக அவர் ரேங்க் புரமோட்டர்டு ஐ.பி.எஸ். என்றால், அவர்களிடம் தான் ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி என்கிற கெத்தை காட்டும் குணம் கொண்டவர் பல்வீர்சிங் என்கிறார்கள், அவரைப் பற்றி அறிந்தவர்கள்.

அம்பை சப்-டிவிசனில் வருகிற அம்பை நகரம், கல்லிடைக்குறிச்சி வி.கே.புரம் காவல் சரகத்திற்கு வரும் புகார்களில் தொடர்புடையவர்கள், சாதாரணமான புகார் என்றாலும் அது தொடர்பான விசாரணைக்கு வருபவர்களை ஏ.எஸ்.பி. பல்வீர்சிங்கே நேரடியாக ஹேண்டில் செய்திருக்கிறார். கடுமையாக நடந்து கொள்வாராம். காவல் நிலையத்தின் தனியறையில் விசாரணை என்ற வகையில் அவர்களை அடைத்து வைத்து உதவிக்கு காவல்நிலைய அதிகாரிகளின் துணையுடன், விசாரணை நடத்துகிற பல்வீர்சிங் ஒரு கட்டத்தில் மூர்க்கமாகி அவர்களின் வாயில் சின்னச் சின்ன கற்களைப் போட்டு திறக்கக்கூடாது. வாய் மூடியே இருக்க வேண்டும். பற்களைக் கடிக்கணும் என லத்தி அடியில் பயமுறுத்த, கதறும் அவர்களைத் திமிற விடாமலிருக்க காவல்நிலைய சக காவலர்கள் அவர்கள் கைகால்களை முறுக்கிக்கொள்ள, வைக்கிற லத்தியடியில் வேதனை தாங்காமல் பற்களைக் கடிக்கிறபோது, கற்களால் வாயில் ஏற்படும் காயங்கள் பற்களை ஆட வைத்துவிடுமாம், பின்னர் கட்டிங் பிளேயரால் ஆடுகிற பற்களைப் பிடுங்கி வெளியே எடுத்துவிடுவதுண்டாம்.

Request to transfer Balveer Singh tooth extraction cause to Delhi court

மனித சமூகம் கேள்விப்படாத இந்த மூர்க்கத்தனமான சித்ரவதையால், விசாரணைக்கு வந்த ஒவ்வொருவரிடமும் ஒன்றுக்கும் மேற்பட்ட பற்கள் பிடுங்கப்பட்டனவாம். அளவுக்கதிகமான வலியால் கதறமுடியாமல் வாயில் ரத்தம் கொப்பளிக்க வெளியேற்றும் அவர்களை, நடந்ததை வெளியே சொன்னா, வேற கேஸ்ல வெளியவரமுடியாத அளவுக்கு உள்ள தள்ளிறுவோம் என மிரட்டப்படுவதால், போலீஸாச்சே, என்ன வேணாலும் பண்ணுவாக என்ற பயத்தில் பலர் சொல்லாமலும், காதும் காதும் வைத்தமாதிரி பற்களின் ரத்த காயங்களுக்கு சிகிச்சை எடுத்துள்ளனர். இந்த ரூட்டில் நடந்தவைகள் வெளியே வராமல் போனதின் விளைவு ஏ.எஸ்.பி.யின் பற்கள் பிடுங்குகிற கொடூரங்கள் விரிவடைந்திருக்கின்றன. அம்பை, வி.கே.புரம், கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட காவல்நிலையங்களில் அந்தந்த காவல் நிலையங்களின் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ. உள்ளிட்ட அதிகாரிகளின் துணையோடு பற்களைப் பிடுங்குகிற ஆபரேஷன் நடந்திருக்கின்றனவாம்.

ஆனால் இந்த ஆபரேஷனில் பாதிக்கப்பட்ட ஜமீன் சிங்கம்பட்டியின் சுபாஷ், இந்த பல்பிடுங்கல் சம்பவத்தில் தன்னுடைய 8 பற்கள் சிதிலமாகி சிகிச்சை எடுத்தும் வேதனையில் தவித்ததை அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்களே நேதாஜி சுபாஷ் சேனையின் தலைவரும், வழக்கறிஞருமான மகாராஜனிடம் தெரிவிக்க, ஏரியாவுக்கு வந்த அவர் நடந்தவைகளை அறிந்தும், பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தும் பதறியிருக்கிறார்.

வழக்கறிஞர் மகாராஜன் இதனை விசாரிக்கப் போய் அதே கிராமத்தின் சூர்யா, லட்சுமி சங்கர், வெங்கடேஷ், வி.கே.புரத்தின் மட்டன் கடை சகோதரர்களான மாரியப்பன், செல்லப்பா, மாயாண்டி, ஆட்டோ டிரைவர் வேதநாராயணன் என்று வரிசையாகப் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நேர்ந்ததை வெளிப்படுத்தி கதறியிருக்கிறார்களாம்.

இதனையடுத்தே விஷயத்தை நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் வரை கொண்டு போக, அவரிடம் விரிவான புகார்களையும் கொடுத்திருக்கிறார்கள். பதற்றமடைந்த ஆட்சியர் சம்பவத்தை விசாரித்து அறிக்கை தர சேரன்மகாதேவி சப் கலெக்டரான முகம்மது சபீர் ஆலத்திற்கு உத்தரவிட்டிருக்கிறார். பற்கள் பிடுங்கப்பட்ட இந்தக் கொடூரத்தில் 14 பேர்களுக்கும் மேல் பாதிக்கப்பட்டது கடந்த மார்ச்சின் போது வெளியேறி தமிழகத்தையே உலுக்கியது.  இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் உள்துறை செயலாளரான அமுதாவை விசாரிக்கும்படி உத்தரவிட, அவரும் சம்பவ இடம் வந்து பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றிருக்கிறார். அவரது அறிக்கையையடுத்து காரணமான ஏ.எஸ்.பி. பல்வீர்சிங் மார்ச் 29 அன்று சஸ்பென்ட் செய்யப்பட்டார். தொடர்ந்து அவருக்குத் துணைபோன இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, பெருமாள், ஏட்டு போகபூமன், சந்தனகுமார், மணிகண்டன். எஸ்.ஐ. சக்தி நடராஜன் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு கொண்டு வரப்பட்டார்கள்.

Request to transfer Balveer Singh tooth extraction cause to Delhi court

இந்நிலையில் வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. வேத நாரயணன், வெங்கடேஷன் சூர்யா, மற்றும் அருண்குமார் ஆகிய நான்கு பேர்களின் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி போலீசார், A1 ஏ.எஸ்.பி. பல்வீர்சிங், மற்றும் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, எஸ்.ஐ. இசக்கிராஜா, கார்த்திக், சதாம் உசேன் ராஜ்குமார், ஆபிரகாம் ஜோசப், ராமலிங்கம் உள்ளிட்ட காவல்துறையினர் 15 பேர் மீதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையை நெல்லை முதலாவது ஜே.எம். கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

டிச. 15 அன்று விசாரணை என்பதால் அன்றையதினம் மாஜிஸ்திரேட் திரிவேணி முன்னிலையில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஆஜராகினர். மீடியாக்கள் இருப்பதால் தவிர்க்கும் பொருட்டு வி.ஐ.பி.க்களின் வாயில் வழியாக உள்ளே வந்தார் பல்வீர்சிங். புகார் தாரர்களின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மகாராஜன், குற்றம் சாட்டப்பட்டவர்களை ஜாமீனில் விடுதலை செய்யக்கூடாது. சி.பி.சி.ஐ.டி.யினர் முறையாக விசாரணை நடத்தப்படவில்லை. பல் பிடுங்கியதற்கு ஆதாரமான கட்டிங் பிளேயர், ரத்தக்கறை படிந்த ஆடைகள், அவர்களை அழைத்துவர பயன்படுத்தப்பட்ட தனியார் வாகனம் போன்றவைகளை பறிமுதல் செய்யவில்லை, என்றும் இவர்களை கைது செய்து பல்பிடுங்கப் பயன்படுத்திய ஆயுதங்களை பறிமுதல் செய்யவேண்டும் என்று வாதிட்டார். விசாரணைக்குப் பிறகு மாஜிஸ்திரேட் திரிவேணி 15 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Request to transfer Balveer Singh tooth extraction cause to Delhi court
வழக்கறிஞர் மகாராஜன்

இதுகுறித்து வழக்கறிஞர் மகாராஜன், “வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்காமல் தடயங்களை மறைத்தது பெரிய குற்றம். 201 ஐ.பி.சி.யின் ஜாமீனில் வெளியே வரமுடியாத பிரிவு. குற்ற வழக்குகளில் கைது நடவடிக்கையை மேற்கொள்ளும் போலீசார், இதில் ஏ.எஸ்.பி. உள்ளிட்டவர்களைக் கைது செய்யவே இல்லை. இது சீரியஸ் அஃபென்ஸ். இந்த மாநிலத்தில் விசாரணை நடத்தப்பட்டால் பாதிப்பிற்குள்ளான அனைவரும் சுதந்திரமாக வரமுடியாது. எப்படி சாட்சி சொல்ல வரமுடியும். வழக்கு விசாரணை நேர்மையாக நடக்க வேண்டுமென்றால் இந்த வழக்கை வேறு மாநில நீதிமன்றத்திற்கு மாற்றவேண்டும். அவர்களின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும். இந்த வழக்கு நேர்மையாக நடக்கும் என்ற நம்பிக்கை இல்லை. எனவே இந்த வழக்கு விசாரணையை டெல்லிக்கு மாற்ற நாங்கள் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்ய உள்ளோம்” என்றார் அழுத்தமாக.

ஏ.எஸ்.பி. பல்வீர்சிங் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துரைராஜோ, “வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. எனவே எதிரியை கைது செய்யவேண்டிய அவசியமில்லை. அவர்கள் பொறுப்பான அதிகாரிகள். எங்கும் போகவில்லை. வழக்கு விசாரணைக்கு இடையூரோ, சாட்சிகளை கலைப்பது போன்றவைகளுக்கு இடமில்லை. அவர்கள் பணியில்தான் உள்ளனர். இது பொய் வழக்கு என்று நாங்கள் நிரூபிப்போம்” என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

“என்னை அழிக்க நடவடிக்கை” - உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பதில்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Arvind Kejriwal's response in the Supreme Court on Action to destroy

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி(21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அன்றைய தினமே (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை ‘சட்டவிரோத கைது’ என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கெஜ்ரிவால் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து கடந்த 9 ஆம் தேதி (09.04.2024) உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தன்னைக் கைது செய்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 10 ஆம் தேதி (10.04.2024) மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். 

இதனையடுத்து, இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 15ஆம் தேதி விசாரனைக்கு வந்த போது, ‘தன்னை தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து தடுப்பதற்காகவே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை பதிவை செய்து கொண்ட நீதிமன்றம், இந்த வழக்கு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீஸுக்கு பதிலளித்த அமலாக்கத்துறை, ‘அரவிந்த் கெஜ்ரிவால் தான் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக நாங்கள் கருதுகிறோம். எங்களுடைய விசாரணைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஒத்துழைப்பு தரவில்லை. அதனால், இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்து கோரிக்கையை முன்வைத்தது. 

 Arvind Kejriwal's response in the Supreme Court on Action to destroy

இந்த நிலையில், அமலாகக்த்துறை அளித்த அந்த பதிலுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் , ‘அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறையை மத்திய அரசு பயன்படுத்துகிறது. தேர்தல் நேரத்தில் அரசியல் செயல்பாடுகள் உச்சத்தில் இருக்கும். அந்த நேரத்தில் அவர்களுக்கு சமமான அரசியல் எதிரியான அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ததன் மூலம், தேர்தல் சமநிலையை குலைக்க மத்திய அரசு முயல்கிறது.

அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து கட்சிப் பணிகளை முடக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. கெஜ்ரிவால் கைது மூலம் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் முறை என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இந்த கைது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும். அதுமட்டுமல்லாமல், அரவிந்த் கெஜ்ரிவால் என்ற தனி மனிதனையும், ஆம் ஆத்மி கட்சியையும் அழிப்பதற்கான யுக்தியாகத் தான் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால், கெஜ்ரிவாலை உடனடியாக சிறையில் இருந்து விடுவிப்பதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

Next Story

“உழவர்களுக்கு எதிரான அரசு வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை” - அன்புமணி கண்டனம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
  day when the anti-farmer government will fall is not far says Anbumani

கொள்முதல் நிலைய ஊழலை எதிர்த்ததற்காக கைது செய்வதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செங்கல்பட்டு மாவட்டம் படாளம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தொடர்ந்து நடைபெறும் ஊழல்களை தட்டிக் கேட்டதற்காக உழவர் சங்க நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உழவர்களின் உரிமைக்காகவும், ஊழலுக்கு எதிராகவும் போராடிய அவர்கள் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது.

செங்கல்பட்டு மாவட்டம் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த மணி என்பவர் பாலாறு படுகை விவசாயிகள் சங்கத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவம் என்பவரும் அவருடன் இணைந்து உழவர்கள் நலனுக்காக பாடுபட்டு வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 24 ஆம் நாள் படாளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் செய்த குற்றம், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  உழவர்களிடமிருந்து மூட்டைக்கு ரூ.60 வரை கையூட்டு பெறப்படுவதையும், அவ்வாறு கையூட்டு வாங்கும் சக்திகளுக்கு காவல்துறையினர் துணை போவதையும் கண்டித்து பல ஆண்டுகளாக குரல் கொடுத்தும், போராட்டம் நடத்தியும் வருவது தான்.

திமுக ஆட்சியில் இருந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  ஊழல் என்பது மட்டும் தீராத வியாதியாக தொடர்கிறது. படாளம், பழையனூர் ஆகிய கிராமங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை விற்கச் செல்லும் உழவர்களிடம் மூட்டைக்கு ரூ.60 வரை கையூட்டு பெறப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதைத் தொடர்ந்து அந்த நிலையங்களுக்கு கடந்த மார்ச் 19 ஆம் தேதி சென்ற மணி, பரமசிவம் ஆகியோர் உழவர்களிடம் கையூட்டு பெறப்படுவது குறித்து விசாரணை நடத்தினர். ஆனால், அவர்களின் வினாக்களுக்கு விடை அளிக்காத நெல் கொள்முதல் நிலையப் பணியாளர் செல்வம் என்பவர், மணியும், பரமசிவமும் தம்மை மிரட்டியதாக படாளம் காவல்நிலையத்தில் மார்ச் 20&ஆம் தேதி புகார் அளித்தார். அதன் மீது மார்ச் 24&ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த படாளம் காவல்நிலைய அதிகாரிகள், அதன் பின் ஒரு  மாதத்திற்கும் மேலாகியும் எந்த விசாரணையும் நடத்தவில்லை; எந்த விதமான மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கிடையே செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்டம்  ஒழுங்கு சீர் கெட்டதையும், கையூட்டு வாங்கும் அதிகாரிகளுக்கு காவல்துறையினர் துணை நிற்பதையும் கண்டித்து கடந்த 24 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரில் மணி, பரமசிவம் உள்ளிட்டோர் தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற மணி, பரமசிவம் ஆகியோரை விசாரணை என்ற பெயரில்  படாளம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், இருவர் மீதும் ஒரு மாதத்திற்கு முன் பதிவு செய்த வழக்கில் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். உழவர்களின் உரிமைக்காக போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்ததை விட கொடிய பழிவாங்கும் நடவடிக்கை இருக்க முடியாது. பழிவாங்கும் போக்கை கைவிட்டு, உழவர் சங்க நிர்வாகிகள் இருவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமூகம் உழவர்கள் தான். அவர்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, நன்றி மறந்து உழவர்கள் மீது அடக்குமுறைகளையும், அத்துமீறல்களையும் கட்டவிழ்த்து விட்டு வருகிறது. நிலவுரிமையை பாதுகாப்பதற்காக போராடிய மேல்மா உழவர்களை கைது செய்தும், அவர்களில் 7 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தும் கொடூர முகத்தைக் காட்டிய தமிழக அரசும், காவல்துறையும் இப்போது ஊழலை எதிர்த்து போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்து அதன் இன்னொரு முகத்தைக் காட்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, போதை மருந்து நடமாட்டம் போன்ற குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அவற்றிற்கு காரணமான  குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டிய தமிழக அரசு, அப்பாவி உழவர்களையும், கிளி சோதிடர்களையும், வெயிலின் தாக்கத்தை உணர்த்த சாலையில் ஆம்லேட் போட்ட சமூக ஆர்வலர்களையும் கைது செய்து கொண்டிருக்கிறது. இதிலிருந்தே தமிழ்நாட்டில் நடப்பது யாருக்கான அரசு என்பதை உணர முடியும்.

ஒட்டுமொத்த உலகிற்கும் உணவளிக்கும் கடவுள்களான உழவர்களை மதிக்காத எந்த அரசும் நீடித்தது இல்லை. அதற்கு உலகில் ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. தமிழ்நாட்டில் உழவர்களை மதிக்காத, அவர்களை பழிவாங்கும் திமுக அரசு தமிழ்நாட்டு மக்களால் வீழ்த்தப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.