Skip to main content

அங்கன்வாடிகளுக்கான சத்துணவு பொருட்களை மகளிர் சுய உதவிக் குழுவின் மூலம் வழங்க கோரிக்கை!

Published on 14/12/2022 | Edited on 15/12/2022

 

kl;


புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 30 ஆண்டுகளாக அரசின் சில திட்டங்கள் மகளிர் மேம்பாட்டுத் துறையின் மூலமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் புதுச்சேரி, காரைக்கால் அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கப்படும் சத்துணவு பொருட்கள் முழுவதும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் மூலம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் பொருட்களைப் புதுச்சேரி அரசு தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

அதையடுத்து அங்கன்வாடி மையங்களுக்கு சத்துணவு பொருட்கள் வழங்கி வந்த மகளிர் சுய உதவி குழுவினர், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனிடையே மீண்டும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமே வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இயக்குநரிடம் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறையினர் கோரிக்கை மனுவை வழங்கினர். அம்மனுவில், ' புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 30 ஆண்டுகளாகப் புதுச்சேரி அரசின் சில திட்டங்கள் மகளிர் மேம்பாட்டுத் துறையின் மூலமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

 

இதனடிப்படையிலேயே புதுச்சேரி, காரைக்கால் அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கப்படும் சத்துணவு பொருட்கள் முழுவதும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் மூலம் வழங்கப்பட்டு வந்தது. மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் பொருட்களைத் தற்போது புதுச்சேரி அரசு தனியார் நிறுவனத்திற்குத் தாரை வார்க்க முயல்வதை நாம் தமிழர் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. புதுச்சேரி அரசின் இத்தகைய நடவடிக்கையினை எதிர்த்து மகளிர் சுய உதவி குழுக்களின் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி சுரேஷ்குமார் அவர்களால் புதுச்சேரி அரசின் நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

 

புதுச்சேரி அரசின் வேளாண்துறை அமைச்சர் நீதிமன்ற தீர்ப்பின் உத்தரவினை அவமதிக்கும் விதமாக, சட்டத்திற்கு முரணாக பாசிக் நிறுவனத்தின் வழியாக தனியார் நிறுவனம் மூலம் அங்கன்வாடி மையங்களுக்கு சத்துணவு பொருட்களை வழங்குவதனை நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை வன்மையாக கண்டிக்கிறது. புதுச்சேரி அரசின் இத்தகைய செயல்பாடு நீதிமன்ற தீர்ப்பினை அவமதிக்கும் செயலாகும். மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கப்பட்டு வந்த சத்துணவு பொருட்களை மகளிர் சுய உதவிக் குழுக்களே தொடர்ச்சியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கௌரி, " சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் இடைக்கால உத்தரவினை மதித்து மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக அங்காடி மையங்களுக்கு சத்துணவு பொருட்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மக்களைத் திரட்டி போராட்டத்தினை முன்னெடுக்கும்" என்று தெரிவித்தார்.

 

இந்நிகழ்வில் மகளிர் பாசறை பொருளாளர் தேவிகா திருக்குமரன், நாம் தமிழர் கட்சி வில்லியனூர் தொகுதி கிருஷ்ணமூர்த்தி, வீராசாமி, நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கத்தின் மாநிலச் செயலாளர்  இரமேசு,  திருபுவனை தொகுதி தலைவர் செயக்குமார், L&T தொழிலாளர் கிருஷ்ணமூர்த்தி, செகதீசன், இராமதாசன், முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி கொலை சம்பவம்; காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக பா.ஜ.க போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

கர்நாடகா மாநிலம், தார்வார் மாவட்டம் உப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நிரஞ்சன் ஹிரேமட். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிரஞ்சன் தார்வார் மாநகராட்சியில் கவுன்சிலராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மகள் நேகா ஹிரேமட் (24). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேகா பயின்று வந்த அதே கல்லூரியில் பெலகாவி பகுதியைச் சேர்ந்த பயாஜ் (24) என்பரும் படித்து வந்தார். இந்த நிலையில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பயாஜ், இந்து மதத்தைச் சேர்ந்த நேகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பயாஜ், தனது காதலை நேகாவிடம் கூறிய போது அதை நேகா ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், நேகா மீது பயாஜ் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் (20-04-24) வழக்கம் போல் நேகா கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த பயாஜ், நேகாவிடம் தனது காதலை ஏற்குமாறு தகராறு செய்து வந்துள்ளார். ஆனால், நேகா, அவரது காதலை திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பயாஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நேகாவை சரமாரியாக குத்தினார். இதி்ல் படுகாயமடைந்த நேகா, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே வேளையில், கல்லூரி வளாகத்திலேயே மாணவியை குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய பயாஜை, அங்கிருந்த மாணவர்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பயாஜ்ஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். காங்கிரஸ் கவுன்சிலரின் மகள், கல்லூரி வளாகத்திலேயே ஒரு தலைக் காதலால் சக மாணவரால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, நேகாவின் தந்தையும், கவுன்சிலருமான நிரஞ்சன் தெரிவிக்கையில், ‘லவ் ஜிகாத்தால் தான் தனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளார்’ எனக் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில், ஹுப்பள்ளி மாணவி கொலை வழக்கை குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க தனது அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். அதே வேளையில், கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் தந்தை காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக இந்த விவகாரத்தை பா.ஜ.க தனது கையில் எடுத்துள்ளது. இந்த சம்பவத்தை ‘லவ் ஜிஹாத்’ எனக் கூறி நீதி வேண்டும் என பா.ஜ.க.வும் இந்துத்துவ அமைப்புகளும் போராடி முழு கடை அடைப்பு நடத்த பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளது.

BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

அந்த வகையில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உயிரிழந்த மாணவியின் பெற்றோரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொலை தொடர்பான அரசின் அறிக்கைகள் விசாரணையை சீர்குலைக்கும் வகையில் இருக்கின்றன. திருப்தி அரசியலுக்காக தற்போதைய அரசைக் கர்நாடகா மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து கர்நாடகா பா.ஜ.க தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கூறுகையில், “பா.ஜ.க தொண்டர்கள் தேர்தல் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பந்தில் கலந்து கொள்ளுங்கள். இந்த சம்பவத்தில் அரசாங்கம் அலட்சியமாக நடந்துகொள்கிறது. சிறுபான்மையினரின் ஆதரவே இந்த அரசாங்கத்தின் முன்னுரிமை” என்று கூறி பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Next Story

போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்கள் குண்டுக்கட்டாக கைது!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
MPs who participated in the protest were arrested with explosives!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்த நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தலைமையில் எம்.பி.க்கள் இன்று (08-04-24) 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து எம்.பி.க்கள் பேசுகையில், ‘சி.பி.ஐ, அமலாக்கத்துறை, ஐ.டி, என்.ஐ.ஏ போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும்’ போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். 

மேலும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் அனைத்தும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், விசாரணை அமைப்புகளால் தேர்தலின் மாண்பே சீர்குலைக்கப்படுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை சந்தித்து முறையிட்டு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட எம்.பிக்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது