Skip to main content

கோயில் கருவறைத் தீண்டாமை ஒழிப்பிற்காகக் காத்திருக்கிறோம் ... அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை!

Published on 08/05/2021 | Edited on 08/05/2021

 

Request to Chief MK Stalin by students trained as priests

 

தேர்தலில் வெற்றிபெற்று தமிழகத்தின் முதல்வராகப் பதவி ஏற்றிருக்கும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தினர் ஏழு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். 

 

இறைவன் முன்னால் அனைவரும் சமம் என அனைத்து சமயங்களும் போதித்தாலும் குறிப்பிட்ட சமூகத்தவர்கள் மட்டுமே கோயில் கருவறையில் நுழைந்து பூஜை செய்ய முடியும் என்ற நிலை காலங்காலமாக இருந்து வருகிறது. ஆகமம், ஐதீகம், பாரம்பரியம் என்ற பெயரில் இன்றுவரை இக்கருவறைத் தீண்டாமை பாதுகாக்கப்பட்டு வருகிறது.

 

கருவறைத் தீண்டாமைக்கெதிராக தனது இறுதி மூச்சுவரை பாடுபட்ட பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றும் நோக்கோடு தனது ஆட்சிக் காலத்தில் 1971 இல் அர்ச்சகர் நியமனத்தில் வாரிசுரிமையை ஒழித்து அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் சட்டமியற்றினார் கலைஞர். இதன் நீட்சியாக, 1996-இல் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில், உரியப் பயிற்சியும், தகுதியும் உள்ள அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கலாம் என்ற அரசாணை (நிலை எண்.118) பிறப்பிக்கப்பட்டது. மேலும், “அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்” எனத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆகஸ்டு – 22 – 2006 அன்று சட்டமாக நிறைவேற்றப்பட்டது.

 

அச்சட்டத்தின்படி, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் ஆகிய நான்கு கோயில்களில் சைவத்திற்கும்;  திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயில், ஸ்ரீரங்கம் இரங்கநாதசுவாமி கோயில் ஆகிய இரண்டு கோயில்கள் வைணவத்திற்குமான பயிற்சி பள்ளிகளாக அறிவிக்கப்பட்டன. ஆகமவிதிகளின்படி பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டு தகுதியும் திறமையும் கொண்ட சமயநெறியாளர்களை கொண்டு பயிற்சியும் அளிக்கப்பட்டது.

 

அரசின் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் 34 ஆதிதிராவிட மாணவர்கள்; 76 பிற்படுத்தப்பட்ட மாணவர்கள்; 55 மிகவும் பிற்படுத்தப்பட்ட  மாணவர்கள்; 42 இதர வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் என ஆக மொத்தம் 207 மாணவர்கள் 2006-07 கல்வியாண்டில் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியை முடித்து அரசு வழங்கிய சான்றிதழோடு பணிநியமனத்திற்காகக் கடந்த 14 ஆண்டுகளாகக் காத்திருக்கிறார்கள் இவர்கள். நீதிமன்ற அலைக்கழிப்புகள், அரசியல் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கோருவது, உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் எனக் கடந்த 14 ஆண்டுகளாக பணிக்காகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். 

 

இந்நிலையில், கலைஞரைப் போல மு.க.ஸ்டாலினும் கருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டும் விதமாகத் தீர்க்கமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கிறார்கள், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள். 

 

இதுதொடர்பான அவர்களது ஏழு அம்ச கோரிக்கையில், 

 

1. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெரிய கோயில்கள் – பாடல் பெற்ற தளங்களில் அர்ச்சகர் பயிற்சி முடித்து, தகுதி திறமையோடு இருக்கும் 203 மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும்.

 

2. தமிழ்நாட்டில் மூடப்பட்டுள்ள சைவ, வைணவப் பயிற்சி நிலையங்களை இந்து அறநிலையத்துறை மீண்டும் தொடங்க வேண்டும்.

 

3. 2020-ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட தமிழக அரசு விதிகளில் அர்ச்சகராவதற்கு 35 வயது என்பது உச்சவரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 14 ஆண்டுகளாக எங்களுக்கு பணிநியமனம் வழங்கப்படாததைக் கணக்கில் கொண்டு இந்த வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட வேண்டும்.

 

4. தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் அனைத்தும் இந்து அறநிலையத்துறையிடம் மட்டுமே இருக்க வேண்டும்.

 

5. தமிழ்நாட்டிலுள்ள கார்ப்பரேட் சாமியார்களின் சொத்துக்கள், வருமானங்கள், நில ஆக்கிரமிப்புகள் குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைக்க வேண்டும்.

 

6. தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கோயில்களிலும் தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும்.

 

7. சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசுடைமையாக்கச் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும். 

என்ற கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலினிடம் முன்வைத்துள்ளனர்.

 

மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற உதவ வேண்டுமென்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, உதயநிதி  ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினரும் தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலருமான ஆ.ராசா ஆகியோர் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்துள்ளனர் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்.

 

அரசியல் தலைவர்களுடனான இந்த சந்திப்பு குறித்து பேசிய அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத் தலைவர் வா.ரங்கநாதன், “அர்ச்சகர் பயிற்சி முடித்து 14 ஆண்டுகள் கடந்த நிலையில், எங்களோடு பயிற்சி முடித்த மாணவர்களில் இருவர் இறந்துவிட்டனர். எஞ்சியுள்ளோரில் பலர் வயிற்றுப்பிழைப்புக்காகக் கிடைக்கும் வேலையைச் செய்து காலம் தள்ளி வருகின்றனர். எங்களது பசி போக்க ஒரு வழி கேட்கும் கோரிக்கையாக இதனை அணுகாமல், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவனின் வாக்கிற்கிணங்க தீண்டாமை ஒழிப்பின் ஒரு அடியாக முதல் படியாக எங்களது கோரிக்கையின் அரசியல் நியாயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். கருவறைத் தீண்டாமையை ஒழிக்க கலைஞர் அவர்கள் தொடங்கிய பணியைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவார் என நம்புகிறோம்” என்றார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“முதல்வர் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகத்தை உருவாக்கவுள்ளார்” - அமைச்சர் சக்கரபாணி 

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

 CM stalin will make Tamil Nadu the premier state in India says Minister Sakkarapani

 

திண்டுக்கல்லில் உள்ள தனியார் மண்டபத்தில்  மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி தலைமையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிறப்பு நோக்கு கூட்டத்தில் உலக முதலீட்டாளர்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார். இதில் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் மற்றும் திண்டுக்கல் எம்.பிக்கள் வேலுச்சாமி, ஜோதிமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

இதில், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, “தமிழ்நாடு முதலமைச்சர் தொழில்துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாக வரவேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஆட்சி பொறுப்பேற்று கடந்த 2 ஆண்டுகளில் மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக இந்தியாவில் தொழில் துறையில் 14வது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. விரைவில் முதலிடத்திற்கு வரவேண்டும் என்பதற்காக தொழில் வளர்ச்சிக்கு தேவையான பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. 

 

தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான இடவசதி, தண்ணீர் வசதி, தொழிலாளர் தேவை, சாலை வசதி, சட்ட ஒழுங்கு, மின்சார வசதி எனப் பல்வேறு உதவிகளை வழங்கி தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி வருகிறார். அதுபோல் தமிழ்நாடு முதலமைச்சர்  துபாய், அபுதாபி, ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று, அங்குள்ள தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழகத்தில் தொழில் தொடங்கிட முதலீடு செய்ய அழைப்பு விடுத்துள்ளார்கள். அதனடிப்படையில், உலக முதலீட்டாளர் மாநாடு சென்னையில் வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 7 மற்றும் 8  ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது.

 

 CM stalin will make Tamil Nadu the premier state in India says Minister Sakkarapani

 

அதுபோல் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். படித்த இளைஞர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்க வேண்டும் என்பதற்காக நான் முதல்வன் திட்டத்தில் பல்வேறு தொழில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 13 இலட்சம் இளைஞர்கள் பயனடைந்துள்ளனர். சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி வழங்கப்பட்டுள்ளது. தொழில்துறை வளர்ந்தால்தான் நாட்டின் பொருளாதாரம் உயரும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும், படித்த இளைஞர்கள் தொழில் தொடங்க முன்வருவார்கள் என்பதற்காக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி, தொழில் முனைவோர்களை ஊக்குவித்து வருகிறது. 

 

தமிழகத்தில் எதிர்வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் நிலையான நீடித்த வளர்ச்சியை நோக்கமாக கொண்டு ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டின் வாயிலாக குறு, சிறு தொழில் முதலீடு ரூ.60,000 கோடி இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு, அனுமதிகள், மானியங்கள், கடனுதவிகள் வழங்கப்படும். இந்த வாய்ப்பை தொழில் முனைவோர்கள், முதலீட்டாளர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில், வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கேற்ப படித்த இளைஞர்களுக்கு புதிய தொழில் பயிற்சிகளை அளித்து, அவர்களின் எதிர்காலத்தை பிரகாசமாக உருவாக்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. தாட்கோ மூலமாக தொழில் கடனுதவிகள் வழங்கப்படுகின்றன. புதிய தொழில்கள் தொடங்கப்படும் மாவட்டங்களில், அதே மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில், 143 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஊக்குவிப்பு மானியமாக ரூ.14.23 கோடியும், மானியத்துடன் கூடிய சுயதொழில் கடனுதவி திட்டத்தில் 318 உற்பத்தி, சேவை மற்றும் வணிக நிறுவனங்களுக்கு தொழில் ஊக்குவிப்பு மானியமாக ரூ.7.49 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவிலான தொழில் முதலீடுகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் 23 நிறுவனங்கள் சார்பில் ரூ.331.33 கோடி அளவிற்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

5 பயனாளிகளுக்கு ரூ.59.81 இலட்சம் மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டுள்ளது, இதில் ரூ.19.45 இலட்சம் மானியமாக வழங்கப்படுகிறது. தொழில் வளர்ச்சியில் தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உருவாக்க தமிழ்நாடு முதலமைச்சர் உறுதியாக உள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் தொழில் தொடங்கிட தேவையான அனைத்து வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்கும். இந்த வாய்ப்புகளை தொழில் முனைவோர்கள், தொழில் முதலீட்டாளர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

 

 

Next Story

“கச்சத்தீவு பிரச்சனையில் துரோகத்தின் மறுஉருவம் திமுகதான்” - ஓ.பி.எஸ் தாக்கு

Published on 19/08/2023 | Edited on 19/08/2023

 

DMK has committed betrayal in the Kachchatheevu issue says o panneerselvam

 

கச்சத்தீவு பிரச்சனையில் துரோகத்தின் மறுஉருவம் என்றால் அது தி.மு.க. தான். கச்சத்தீவு ஒப்பந்தத்தை முன்கூட்டியே தெரிந்திருந்தும் அதனை எதிர்த்து குரல் கொடுக்காமல் மவுனம் காத்ததுதான் துரோகம் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் முதல்வர் ஸ்டாலினின் பேச்சுக்கு எதிர்வினையாற்றியிருக்கிறார். 

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இராமேஸ்வரத்தில் நடைபெற்ற மீனவர் நல மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க. தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், கச்சத்தீவு தாரை வார்ப்பு தொடர்பாக ஒப்பந்தம்தான் போடப்பட்டது என்றும், சட்டம் இயற்றப்படவில்லை என்றும், கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி என்பதற்கான ஆதாரங்களை தந்தவர் முன்னாள் முதலமைச்சர்  கலைஞர் தான் என்றும், கச்சத்தீவு ஒப்பந்தத்தை கண்டித்து அப்போது நாடாளுமன்றத்தில் தி.மு.க. வெளிநடப்பு செய்தது என்றும், கச்சத்தீவு ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனுப்பிய தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்த ஒரே கட்சி அ.தி.மு.க. என்றும், அன்றிலிருந்து இன்று வரை அ.தி.மு.க. தான் துரோகம் செய்து கொண்டிருக்கிறது என்றும் கூறியிருக்கிறார். இந்தப் பேச்சினைப் பார்க்கும்போது, அவர் அடிக்கடி சொல்லும் “வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ" என்ற பழமொழிதான் நினைவிற்கு வருகிறது.

 

இராமேஸ்வரத்திற்கு வட கிழக்கே 10 மைல் தொலைவில் உள்ள கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி என்பதையும், 285.20 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தத் தீவின் சர்வே எண் 1250 என்பதையும், இதனை பரம்பரை பரம்பரையாக தமிழ்நாட்டு மீனவர்கள் பயன்படுத்தி வந்தனர் என்பதையும், இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த சீனிகுப்பன் படையாச்சி என்பவர் இந்த தேவாலயத்தை கட்டினார் என்பதையும், ஆண்டுதோறும் இங்கு நடக்கும் விழாவிற்கு தமிழக மீனவர்கள் செல்வது வழக்கம் என்பதையும், இந்தத் தீவு ராமேஸ்வரம் கர்ணத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்டது என்பதையும் வரலாற்றுப் பதிவேடுகள் நமக்குத் தெரிவிக்கின்றன இவையெல்லாம், கச்சத் தீவு மீது இந்தியாவிற்கு உள்ள பறிக்க முடியாத உரிமைகளுக்கு சான்றாக விளங்குகின்றன.

 

இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய கடலோர மாவட்டங்களில் வாழும் தமிழக மீனவர்கள், தொன்றுதொட்டு கச்சத்தீவின் அருகில் மீன்பிடித்து அன்றாட வாழ்க்கையை நடத்தி வந்தனர். 1974 ஆம் ஆண்டு, அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே ஓர் உடன்பாடு ஏற்பட்டது. இந்த உடன்பாட்டின்படி, இரு நாடுகளும் பரம்பரை பரம்பரையாக தங்கள் நாட்டிற்குச் சொந்தமான கடல் எல்லைகளில் எந்தெந்த உரிமைகளை அனுபவித்து வந்தனவோ, அந்தந்த உரிமைகளை தொடர்ந்து அனுபவிக்கலாம் என்று பொதுவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் கலைஞர். கச்சத்தீவு தாரைவார்ப்பினை தடுத்து நிறுத்த முதலமைச்சர் என்ற முறையில் கலைஞர் எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. 1960 ஆம் ஆண்டுக்கு முன்பு, 1950-களில், மேற்கு வங்காளத்தில் உள்ள பெருபாரி என்ற பகுதியை அப்போதைய கிழக்கு பாகிஸ்தானுக்கு கொடுக்க மத்திய அரசு முயன்ற போது, அதை மேற்கு வங்க மாநில அரசு எதிர்த்ததோடு மட்டுமல்லாமல், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அப்போதைய மேற்கு வங்க மாநில முதலமைச்சர் பி.சி. ராய், இந்த நடவடிக்கையை மேற்கொண்டார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “இந்திய நாட்டுக்குச் சொந்தமான ஒரு பகுதியை அந்நிய நாட்டிற்குக் கொடுப்பது தொடர்பான உடன்பாட்டை நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலோடு இந்திய அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும்” என 1960 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. மேற்கு வங்க அரசின் இந்த சமயோசித நடவடிக்கை காரணமாக, பெருபாரி பகுதி இன்றும் இந்திய நாட்டின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பினை மேற்கோள் காட்டி 1974 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு செய்திருந்தால், கச்சத் தீவு இன்றும் கூட, இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருக்கும். ஆனால் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த கலைஞர் இதைச் செய்யத் தவறி விட்டார். இந்த வரலாற்றை படித்துத் தெரிந்து கொள்ளாமல், தி.மு.க. அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததாகவும், அதையும்மீறி கச்சத்தீவு தொடர்பான ஒப்பந்தம் போடப்பட்டது என்று கூறுவதும் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது. இதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

1974-ல் கச்சத்தீவு ஒப்பந்தம் தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல கேள்விக்கணைகளை தொடுத்தபோது, ஒப்பந்தம் போடுவதற்கு முன்பு தனக்கு ஏதும் தெரியாது என்று கூறியவர் கலைஞர். ஆனால், ஒப்பந்தம் போடுவதற்கு முன்பு கலைஞருக்கு எல்லாம் தெரியும் என்பதை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டியவர் ஜெயலலிதா. குறைந்தபட்சம் இரண்டு முறை மிக விரிவான அளவில் மத்திய அரசு அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞருடன் விவாதித்ததாக அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர்  ஸ்வரண் சிங் மாநிலங்கள் அவையில் பேசியிருப்பதை ஜெயலலிதா சுட்டிக்காட்டினார்கள். எனவே, அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞருக்கு தெரியாது என்ற வாதம் உண்மைக்குப் புறம்பானது. கச்சத்தீவு தாரை வார்க்கப்படப் போகிறது என்பதை முன்கூட்டியே தெரிந்திருந்தும், அது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவோ அல்லது தமிழ்நாட்டில் மிகப் பெரிய அளவில் போராட்டத்தை நடத்தி தாரைவார்ப்பினை தடுக்கவோ தி.மு.க. அப்போது நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக ஒப்பந்தம் முடிந்து இரண்டு மாதங்கள் கழித்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பெயரளவிற்கு, சம்பிரதாயத்திற்கு, மென்மையான முறையில் 21-08-1974 அன்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

இந்தத் தீர்மானத்தின்மீது பேசிய திரு. ஆலடி அருணா அவர்கள், மத்திய அரசு ஆலோசனை நடத்தியதா என்று அப்போதைய முதலமைச்சர் கலைஞர் அவர்களைக் கேட்டபோது, “வெளியுறவுத் துறைச் செயலாளர் கேவல் சிங்கை நான் டெல்லியில் சந்தித்தபோது இதைப் பற்றி அவர் என்னிடம் பேசினார். இதை ஆலோசனை என்று வைத்துக் கொண்டாலும் கூட நான் அவரிடம் சொன்னது; “தமிழ் மக்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்; தமிழக அரசு இதை ஏற்றுக்கொள்ளாது. கச்சத்தீவு இந்தியாவுக்கே, தமிழகத்திற்கு சொந்தமாக இருக்க வேண்டும் என்று எடுத்துச் சொல்லி மறு நாள் பிரதமரை சந்தித்தபோது, இதைப் பற்றி குறிப்பிட்டு சொன்னேன்" என்று கலைஞர் கூறியிருக்கிறார். இவையெல்லாம் சட்டமன்ற நடவடிக்கைக் குறிப்புகளில் இடம் பெற்றுள்ளன. இவற்றையெல்லாம் படித்து கச்சத்தீவு வரலாற்றினை தெரிந்து கொள்ளாமல், மனம் போன போக்கில் பேசுவது முதலமைச்சருக்கு அழகல்ல.


அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கச்சத்தீவு ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனுப்பிய தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்த ஒரே கட்சி அதிமுக தான் என்று தி.மு.க. தலைவர் கூறியிருக்கிறார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைத் தான் தி.மு.க. தலைவர் குறிப்பிடுகிறார் என்று கருதுகிறேன். கச்சத்தீவு தாரைவார்ப்பு ஒப்பந்தம் குறித்து முன்கூட்டியே தெரிந்தும் அதை எதிர்த்து மிகப் பெரிய அளவில் போராடாமல், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்காமல் மாபெரும் துரோகத்தை செய்த மாநில அரசினைக் கண்டிக்காமல், அரசியல் ஆதாயத்திற்காக மத்திய அரசை மட்டும் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால்தான் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த உண்மையை மறைத்து பொத்தாம் பொதுவாக அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தது என்பது உண்மைக்குப் புறம்பான தகவல்.

 

கச்சத்தீவு பிரச்சனையில் துரோகத்தின் மறுஉருவம் என்றால் அது தி.மு.க.தான். கச்சத்தீவு ஒப்பந்தத்தை முன்கூட்டியே தெரிந்திருந்தும் அதனை எதிர்த்து குரல் கொடுக்காமல் மவுனம் காத்ததுதான் துரோகம். 2008 ஆம் ஆண்டு கச்சத்தீவு தொடர்பான ஒப்பந்தங்கள் செல்லத்தக்கவை அல்ல என்று ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தபோது, அதனை ஆமோதித்து பதில் மனுவை தாக்கல் செய்யாமல், “... uniform stand has to be taken both by the Central and State Governments" 660 கருத்து தி.மு.க. அரசால் அப்போது தெரிவிக்கப்பட்டதுதான் துரோகம். இந்தத் துரோகங்களை செய்தது தி.மு.க. கச்சத்தீவில் மட்டுமல்ல, காவிரி நீர்ப் பிரச்சனை, முல்லைப் பெரியாறு பிரச்சனை, மாநில சுயாட்சி, மத்திய-மாநில வரிப் பங்கீடு என எல்லாவாற்றிலும் பல துரோகங்களை செய்த கட்சி தி.மு.க. இப்பொழுது வாய்கிழிய பேசும் தி.மு.க. தலைவர், 17 ஆண்டுகள் தொடர்ந்து மத்திய அமைச்சரவையிலே வளம் கொழிக்கும் இலாக்காக்களை வைத்துக் கொண்டிருந்தபோது கச்சத்தீவு பற்றி ஏன் வாய் திறக்கவில்லை? அடுத்த ஆண்டு வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை மனதில் வைத்து மீண்டும் புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட ஆரம்பித்து இருக்கிறார் தி.மு.க. தலைவர். இது பலிக்காது. மக்கள் தி.மு.க.வை பற்றி நன்கு புரிந்து கொண்டு விட்டார்கள். வருகின்ற மக்களவைத் தேர்தலில் மிகப் பெரிய வீழ்ச்சியை தி.மு.க. சந்திக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்