அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட செம்பியக்குடி கிராமத்தில் அமையப்பெற்றுள்ள ஐம்பொன்னாலான செம்பியன் மாதேவி சிலைக்கும், கண்டராதித்தம் கிராமத்தில் அமைந்துள்ள கண்டராதித்த சோழன் மற்றும் செம்பியன் மாதேவி சிலைக்கும், மாமன்னன் இராஜராஜ சோழனின் 1035 ஆவது சதய நட்சத்திர விழாவை முன்னிட்டு, வரலாறு மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தங்க சண்முக சுந்தரம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
வரலாறு மீட்புக் குழு இணை ஒருங்கிணைப்பாளர்கள் அகிலன், சங்கர், முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு இந்நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர். பின்னர் வரலாறு மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தங்க சண்முக சுந்தரம் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பராந்தக சோழன், உத்தம சோழன், சுந்தர சோழன், அருஞ்செய சோழன், கண்டராதித்த சோழன், இராஜராஜ சோழன் உள்ளிட்ட 6 பேரரசர்களை உருவாக்கிய செம்பியன் மாதேவி அவர்களின் பிறந்த இடமான செம்பியக்குடி கிராமத்தில் ஐம்பொன்னாலான சிலை வைக்கப்பட்டுள்ளது.
மாமன்னன் இராஜராஜன் புகழை உலகறியச் செய்யும் வகையிலே, 'சதய' நட்சத்திர விழா கொண்டாடுவது போல செம்பியன் மாதேவி பிறந்த நட்சத்திரமான 'கேட்டை' நட்சத்திர விழாவை அரசு விழாவாக அரியலூர் மாவட்டம் செம்பியக்குடி கிராமத்தில் கொண்டாட வேண்டும்" எனத் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்தார்.
மேலும், "செம்பியன் மாதேவிக்கு, அரியலூர் மாவட்டம் செம்பியக்குடி கிராமத்தில் மணிமண்டபம் கட்ட, தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்றார். கண்டராதித்தம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கண்டராதித்தம் ஊராட்சிமன்றத் தலைவர் சந்திரா கலந்துகொண்டார். செம்பியக்குடி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செம்பியன் மாதேவி அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன் கலந்துகொண்டார்.