Advertisment

பெரியார் பல்கலைக்கழகத்திற்கு ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்க கோரிக்கை!

 Request for appointment of IAS officer in Periyar University

Advertisment

பெரியார் பல்கலைக்கழகத்தில் சுமார் 3 ஆண்டுகளாக துணைவேந்தராக இருக்கும் ஜெகநாதன், போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு மேற்கொண்டதாகப் பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. பெரியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் கல்வி வழங்குவதற்காக துணைவேந்தரே தனி நிறுவனம் தொடங்கியிருப்பது விதிமீறல் என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து விதிகளை மீறி கல்வி நிறுவனம் நடத்திய புகாரில் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கருப்பூர் காவல்துறையினரால் கடந்த 26 ஆம் தேதி (26.12.2023) மாலை 4 மணியளவில் கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடம் தொடர்ந்து 4 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் விசாரணை நடத்தினர். பெரியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தராக இருக்கும் ஜெகநாதன், பெரியார் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் தங்கவேல், கணினி அறிவியல் துறை இணைப் பேராசிரியர் சதீஸ், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் ராம் கணேஷ் ஆகிய மூவருடன் இணைந்து பூட்டர் (Periyar University Technology entrepreneurship and Research Foundation) என்ற தனி நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அரசு செலவில் அலுவலர்களைப் பயன்படுத்தியது, தனி நிறுவனங்களைத் தொடங்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டில் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்திருந்தனர்.

அதே சமயம் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், மோசடி, கூட்டுச்சதி செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. போலீசாரின் விசாரணையை அடுத்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து டிசம்பர் 27 ஆம் தேதி காலையில் ஜெகநாதன், சூரமங்கலம் காவல்நிலையத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

Advertisment

அதன் பின்னர் சிறிது நேரத்தில் அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் பதற்றம் அடைந்த உறவினர்கள், அவரை உடனடியாக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு இதயத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். பின்னர் அவர், ஐசியு பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் மற்றும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், “பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்தை வழிநடத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமிக்க வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளனர்.

letter Salem
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe