Skip to main content

குள்ளம்பட்டி கிராமசபை கூட்டத்தில் எட்டுவழிச்சாலைக்கு எதிரான தீர்மானத்திற்கு மறுத்ததால் விவசாயிகள் வாக்குவாதம்! 

Published on 27/01/2020 | Edited on 27/01/2020

சேலம் அருகே நடந்த கிராமசபைக் கூட்டத்தில், எட்டுவழிச்சாலைத் திட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை பதிவு செய்ய மறுத்ததால், அரசுத்தரப்பு பிரதிநிதிகள், விவசாயிகளிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 


கிராம ஊராட்சிகளில் அரசின் அனைத்துத் திட்டங்களும் முழுமையாக சென்று சேரவும், அதை மக்கள் முன்னிலையில் சமூக தணிக்கைக்கு உட்படுத்தும் நோக்கிலும் ஆண்டுதோறும் ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய நான்கு நாள்களில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பு ஆண்டுக்கான முதல் கிராமசபைக் கூட்டம் தமிழகம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 26) நடந்தது.


சேலத்தை அடுத்த குள்ளம்பட்டி அரசுத் தொடக்கப்பள்ளியில் கிராமசபைக் கூட்டம் நடந்தது. ஊராட்சிமன்றத் தலைவர் கலாபிரியா பழனிசாமி தலைமையில் கூட்டம் நடந்தது. கிராம ஊராட்சி எழுத்தர் வடிவேல் மற்றும் சுகாதாரத்துறை, மின்வாரியம், தொடக்கக்கல்வித்துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். கிராமசபைக் கூட்டம், சற்று தாமதமாக காலை 11.30 மணிக்கு மேல்தான் தொடங்கியது.

republic day grama sabha meeting salem district peoples and officers


கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே குள்ளம்பட்டியைச் சேர்ந்த விவசாயி பன்னீர்செல்வம், ஊர் பொதுமக்கள் சார்பில், எட்டுவழிச்சாலைத் திட்டத்தை கைவிடக்கோரி ஒரு மனுவை அளித்தார். அந்த மனுவில், ''குள்ளம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட விவசாய நிலங்கள் வழியாக சேலம்- சென்னை எட்டு வழிச்சாலை அமைக்க நிலம் அளவீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டம் வந்தால், எங்கள் கிராமமே இரண்டாக பிளவுபடும்.


இத்திட்டத்தால் ஏற்கனவே உள்ள நீர்வழித்தடங்கள் அடைக்கப்படும். இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதோடு, மரங்களும் வெட்டப்படுவதால் மழை வளமும் பாதிக்கப்படும். விளை நிலங்கள் அழிக்கப்படுவதால் விளை பொருள்கள் உற்பத்தி பாதிப்பதோடு, விவசாயிகளுக்கும், விவசாயக் கூலிகளுக்கும் வேலையிழப்பும் ஏற்படும் என்பதால் இத்திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்,'' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.


கூட்டத்தில், குள்ளம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவரான கலாபிரியா பெயரளவுக்கு அமர்ந்து இருந்தாரே தவிர, மக்களின் கேள்விகளுக்கு, நான்தான் தலைவர் என்று கலாபிரியாவின் கணவர் பழனிசாமி தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டு பேசினார். 


எட்டுவழிச்சாலைக்கு எதிரான மனு குறித்து, ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் பழனிசாமி, ''கிராமசபைக் கூட்டம் தொடர்பாக நடந்த பயிற்சி கூட்டத்தின்போது, எட்டுவழிச்சாலைக்கு எதிரான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருவதால், அது தொடர்பாக எந்த தீர்மானத்தையும் பதிவு செய்யக்கூடாது என்றும், அப்படி பதிவு செய்வது கோர்ட் அவமதிப்பு செயலாகும் என்றும் அதிகாரிகள் எங்களிடம் சொல்லி இருக்கிறார்கள். அதனால் எட்டுவழிச்சாலைக்கு எதிரான கோரிக்கை மனுவை பெறவோ, அதன்மீது தீர்மானமோ நிறைவேற்ற முடியாது,'' என்றார். அந்த மனுவை பெற்றுக்கொண்ட அவருடைய மனைவி, திரும்பவும் பன்னீர்செல்வத்திடமே கொடுத்து விட்டார்.  

republic day grama sabha meeting salem district peoples and officers


இதற்கு பன்னீர்செல்வம் உள்ளிட்ட விவசாயிகள் அவரிடமும், அரசு பிரதிநிதியான வடிவேலிடமும் வாக்குவாதம் செய்தனர். தீர்மானம் பதிவு செய்ய முடியாது என்று எழுத்து மூலம் பதில் அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் கேட்டதால், மேலும் அங்கு வாக்குவாதம் முற்றியது. இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு  ஏற்பட்டது. கூட்டம் முடிந்த பிறகு, எட்டுவழிச்சாலைக்கு எதிரான மனுவை பெற்றுக்கொண்ட பழனிசாமி, இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பேசிவிட்டு பதில் தருகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றார்.


குடிநீர் குழாய்களை சீரமைக்கும் பணிகளுக்காக குள்ளம்பட்டி ஊராட்சி பொது நிதியில் இருந்து 18645 ரூபாய் செலவிடப்பட்டு உள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அவ்வாறான பணிகள் நடக்கவே இல்லை என்றும், அதில் ஊழல் நடந்திருப்பதாகவும் கிராம மக்கள் குற்றச்சாட்டினர். குடிநீர் குழாய்களை சீரமைத்து இருந்தால், கடந்த ஓராண்டுக்கான செலவு கணக்கு ரசீதுகள் உள்ளிட்ட முழுமையான தணிக்கை கணக்குகளை சமர்ப்பிக்குமாறு கோரி, எழுத்தர் வடிவேலை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். 


ஆனால் எழுத்தர் வடிவேலோ, தீர்மானம் பதிவு செய்யும் பதிவேட்டை கையில் எடுத்துக்கொண்டு கூட்டத்தைவிட்டு வெளியேற முயற்சித்தார். அவரை செல்ல விடாமல் முற்றுகையிட்ட பொதுமக்கள், கணக்கு வழக்குகளை உடனடியாக மக்கள் முன்னிலையில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இந்த கூட்டத்திறகு வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் வர வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருந்தனர். இந்த களேபரத்தில் ஒரு சிலர், அவரை ஒருமையிலும் வசைபாடினர். 


இதையடுத்து, உடனடியாக வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொண்ட வடிவேல், கடந்த மூன்று மாதத்தில் எவ்வளவு தொகை செலவிடப்பட்டது என்பதை மட்டும் தீர்மான பதிவேட்டைப் பார்த்து வாசித்துக் காட்டினார். இந்த சம்பவத்தால் கூட்டம் நடந்த பள்ளி வளாகமே பரபரப்பாக காணப்பட்டது. 

republic day grama sabha meeting salem district peoples and officers


தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் களை எடுத்தல், அறுவடை செய்தல் உள்ளிட்ட வேலை வாய்ப்புகளையும் சேர்த்தல், குள்ளம்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் பொதுக்கழிப்பறைகள் கட்டுதல், பாலிக்காடு பகுதியில் புதிய தார்ச்சாலை அமைத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 


கிராமசபைக் கூட்டங்களில் எட்டுவழிச்சாலைத் திட்டத்திற்காக பிரச்னைகள் வெடிக்கலாம் என்ற தகவலால், காரிப்பட்டி காவல்நிலைய தனிப்பிரிவு, கியூ பிரிவு, எஸ்பிசிஐடி உள்ளிட்ட உளவுப்பிரிவு காவல்துறையினரும் கூட்டத்தில் நிகழும் சம்பவங்களை செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். எட்டுவழிச்சாலை அமைய உள்ள எல்லா கிராமசபைக் கூட்டங்களிலும் உளவுப்பிரிவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.


அதேநேரம், பூலாவாரி அக்ரஹாரத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் ராதா, ஒன்றிய கவுன்சிலர் மலர்விழி ஆகியோர் தலைமையில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில், எட்டுவழிச்சாலைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிக்கிய 6 கோடி ரூபாய் தங்கம்! - அதிரடியில் தேர்தல் பறக்கும் படை 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
6 crores of gold trapped! Election Flying Squad in action
மாதிரி படம் 

சேலம் அருகே, உரிய ஆவணங்களின்றி கூரியர் நிறுவன வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 6.20 கோடி ரூபாய் தங்க நகைகளைத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், சேலத்தை அடுத்துள்ள மல்லூர் பிரிவு சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரபீக் அஹ்மது தலைமையில் அலுவலர்கள் மார்ச் 23 ஆம் தேதி காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, சேலத்திலிருந்து வந்த தனியார் கூரியர் நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் இருந்த 3 சாக்கு மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தனர். அவற்றில் 39 நகைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பெட்டிகளில் 6.20 கோடி ரூபாய் மதிப்பிலான 29 கிலோ புதிய தங்க நகைகள் இருந்தன. இந்த நகைகளைக் கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

அவற்றை, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துராமலிங்கத்திடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து அவர் கூறுகையில், ''பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் சேலத்தில் இருந்து திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள நகைக் கடைகளுக்குக் கொண்டு செல்லப்படுவதற்காக கூரியர் நிறுவனத்தின் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் இதற்கான உரிய ஆதாரங்கள் இல்லாததால் நகைகளைப் பறிமுதல் செய்து, அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனம், இந்த நகைகளுக்கான ஆதாரங்களைக் காண்பித்துவிட்டு பெற்றுச் செல்லலாம்'' என்றார். 

Next Story

“பா.ஜ.க.வுக்கு பேரழிவுக் காலம் தொடங்கப் போகிறது” - மோடிக்கு டி.ஆர். பாலு பதிலடி!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Disastrous period is about to begin for BJP tR to Modi Balu retaliation

பிரதமர் மோடி சேலத்தில் நடைபெற்ற பா.ஜ.க. பரப்புரை பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி பேசுகையில், பாரத அன்னை வாழ்க. எனதருமை தமிழ் சகோதர சகோதரிகளே எனத் தமிழில் பேச்சை தொடங்கினார். மேலும், “கோட்டை மாரியம்மன் வாழும் புண்ணிய பூமிக்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனக்கு கிடைத்திருக்கும் ஆதரவால் தி.மு.க.வுக்கு தூக்கம் தொலைந்துவிட்டது. தமிழகத்தில் எனக்கு கிடைத்திருக்கும் ஆதரவு பற்றித்தான் நாடு முழுவதும் இப்போது பேச்சாக இருக்கிறது. ஆடிட்டர் ரமேஷ் உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கொலை செய்யப்பட்டதை மறக்கவே முடியாது. கட்சிக்காக நேர்மையாக உழைத்தவர்களை படுகொலை செய்துவிட்டார்கள். ராமதாஸின் அனுபவம், அன்புமணியின் திறமை பா.ஜ.க. கூட்டணிக்கு உதவியாக இருக்கும். வளர்ச்சியடைந்த இந்தியா, வளர்ச்சியடைந்த தமிழகத்தை அமைக்க 400 இடங்களைத் தாண்ட வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தி.மு.க.வினர் எவ்வளவு இழிவுபடுத்தினர் என்பதை நினைத்து பாருங்கள். தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்வரான காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டம்தான் எனக்கு உத்வேகம் அளித்தது. ஜி.கே. மூப்பனாரை பிரதமராக விடாமல் தடுத்தது காங்கிரஸ்தான்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சேலத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரைக்கு திமுக பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி. பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வாரம் தோறும் தமிழ்நாட்டுக்கு வருவதையே வாடிக்கையாக வைத்திருக்கும் பிரதமர் மோடி. இந்த வாரம் சேலத்தில் முழங்கிவிட்டுப் போயிருக்கிறார். பத்தாண்டு காலம் பிரதமராக இருந்தவர், தனது சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டிருக்க வேண்டும். அப்படி ஏதும் இல்லாததால் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி இருக்கிறார். ‘தமிழகத்தில் பாஜகவுக்கு கிடைக்கும் ஆதரவை பார்த்து திமுகவின் தூக்கம் தொலைந்து விட்டது’ எனப் பேசியிருக்கிறார். மோடி அவர்களே! உங்களுக்குத்தான் தூக்கம் தொலைந்துவிட்டது. அதனால் தான் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வந்து புலம்பிவிட்டுப் போகிறீர்கள்.

கடந்த தேர்தல் காலங்களில் இந்திய பிரதமர்கள் ஓரிரு முறைதான் தமிழ்நாட்டு வந்து பிரச்சாரம் செய்துவிட்டு போனார்கள். ஆனால், உங்களுக்குத் தூக்கம் வராததால் பல்லடம், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, சென்னை, கன்னியாகுமரி, கோவை, சேலம் என அடிக்கடி தமிழகம் வந்து பிரசாரம் செய்கிறீர்கள். உங்கள் பிரதமர் பதவிக்கு நிரந்தர ஓய்வு கொடுக்க தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல, இந்திய மக்கள் அனைவரும் தயாராகி விட்டார்கள். சேலம் ஆடிட்டர் ரமேஷ் குறித்து பேசி கண்ணீர் விட்டிருக்கிறார் மோடி. ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது தான் சேலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் ஆடிட்டர் ரமேஷ் 2013 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். 11 ஆண்டுகள் கழித்து இப்போது நினைவுகூறுவது ஏன்? கோவையில் ரோட் ஷோ நடத்திய போது, 1998இல் நடந்த குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை நடத்தினார்கள். இத்தனை ஆண்டுகள் கழித்து இப்படியான நாடகத்தை தேர்தலுக்காக பா.ஜ.க. நடத்த ஆரம்பித்திருக்கிறது. ரோட்டில் ஷோ காட்டினாரே தவிர அதைப் பார்க்கத்தான் ஆள் இல்லை.

Disastrous period is about to begin for BJP tR to Modi Balu retaliation

ஜெயலலிதா ஆட்சியில் மட்டும் சேலம் ஆடிட்டர் ரமேஷ், பரமக்குடி முருகன், மதுரை சுரேஷ், வேலூர் அரவிந்தன், வெள்ளையப்பன், சென்னை சுரேஷ் உள்ளிட்ட பா.ஜ.க. ஆதரவாளர்கள் பலர் கொலை செய்யப்பட்டனர். இதை எல்லாம் பழைய பாஜகவினரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும். அந்த ஜெயலலிதாவை தான் சேலம் கூட்டத்தில் புகழ்ந்து பேசி இருக்கிறார் பிரதமர். ‘ஜெயலலிதாவை திமுகவினர் எவ்வளவு இழிவுபடுத்தினர் என்பதை நினைத்துப் பாருங்கள்’ எனப் பேசியிருக்கிறார் மோடி. அந்த ஜெயலலிதா ஆட்சியில்தான் இவர்கள் கொல்லப்பட்டனர் என்பதை மோடி அவர்களே நினைத்துப் பாருங்கள். எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் மோடி புகழ்வதைப் பார்த்து அ.தி.மு.க.வினர் மிக ஏளனமாக பேட்டி அளித்தார்கள். எதற்காக இவர்கள் பேரை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்று கூட வெளிப்படையாக பேட்டி அளித்தார்கள். ஆனாலும் ஜெயலலிதாவை மறக்கவில்லை மோடி.

‘குஜராத் மோடியா? தமிழ்நாட்டு லேடியா?’ என்று ஜெயலலிதா கேட்டதை தமிழ்நாட்டு மக்கள் மறக்கவில்லை. மோடி வேண்டுமானால் மறந்திருக்கலாம். பதவி ஆசை அவரை பாடாகப் படுத்துகிறது. போகிற போக்கைப் பார்த்தால் ஜெயலலிதாவின் சமாதிக்கே சென்று கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்து விடுவார் போல!. ‘திமுக, காங்கிரசின் ஊழலைப் பற்றி பேச ஒருநாள் போதாது’ எனச் சொல்லியிருக்கிறார் மோடி. ஊழலைப் பற்றி பேச மோடிக்கு தகுதி இருக்கிறதா? தேர்தல் பத்திரம் திட்டத்தில் பா.ஜ.க. நடத்திய தில்லுமுல்லு நாடு முழுவதும் நாறிக் கொண்டிருக்கிறது. தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்த நிதியில் 50 சதவிகிதத்திற்கு மேல் பாஜகதான் வாங்கியது. சி.பி.ஐ., அமலாக்கத் துறை, வருமானவரித் துறை போன்ற அதிகார அமைப்புகளை ஏவி, அதன் மூலம் நிறுவனங்களிடம் இருந்து நன்கொடைகளை மிரட்டிப் பறித்த பா.ஜ.க. உத்தமர் வேஷம் போடுகிறது. கொள்ளையை சட்டப்பூர்வமாக ஆக்கிய கட்சி பா.ஜ.க.

காங்கிரஸ் ஆட்சியில் நடந்த 2 ஜி அலைக்கற்றை பற்றிப் பேசியிருக்கிறார் மோடி. 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் 2017இல் விடுதலை செய்துவிட்டது. அதன் பிறகும் தி.மு.க.வின் பங்கு பற்றி மோடி வலிந்து பேசிக்கொண்டிருக்கிறார். 2022 ஆகஸ்டில் 5 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏலம் போக வேண்டிய 5ஜி அலைக்கற்றை 1 ½ லட்சம் கோடி ரூபாய்க்குத்தான் ஏலம் போனது. மீதி பணம் யார் பாக்கெட்டிற்கு போனது? என மோடி பதில் சொல்வாரா?. பெண் சக்தி பற்றியெல்லாம் பெருமை பொங்கப் பேசியிருக்கிறார் மோடி. ‘பெண்களுக்குச் சேவை செய்ய உறுதி ஏற்று இருக்கிறோம். பெண்கள்தான் பாஜகவின் கவசமாக உள்ளது’ என்றெல்லாம் பொய்களைக் கொட்டியிருக்கிறார் மோடி. மணிப்பூரில் நின்று மோடியால் இப்படிப் பேச முடியுமா?. மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற காட்சிகள் சர்வதேச அளவில் இந்தியாவிற்குத் தலைகுனிவை ஏற்படுத்தியது. அந்த மணிப்பூருக்குச் சென்று பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆறுதல் சொன்னாரா? அந்த பாவம் எல்லாம் எந்த கங்கையில் குளித்தாலும் போகாது.

‘தமிழகத்தை புண்ணிய பூமியாக மாற்றுவோம்’ என்கிறார் மோடி. திருநெல்வேலியும் தூத்துக்குடியும் சென்னையும் பெரு வெள்ளத்தில் சிக்கி பேரிடர் நிவாரணம் கேட்டு தமிழ்நாடு கையேந்தியபோது ஒரு பைசாவும் தராத மோடிதான், தமிழகத்தைப் புண்ணிய பூமியாக மாற்ற போகிறாராம். ‘ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்திலிருந்துதான் எதிர்க்கட்சிகளுக்கு அழிவு தொடங்கப் போகிறது’ என சொல்லியிருக்கிறார் மோடி. பத்தாண்டு அழிவு ஆட்சியில் இருந்து மக்கள் விடுதலை பெற இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்கத் தயாராகிவிட்டார்கள். ஏப்ரல் 19 ஆம் தேதிதான் பாஜகவுக்கு பேரழிவுக் காலம் தொடங்கப் போகிறது. ஒரு பிரதமர், அவர் தனது தகுதிக்கு ஏற்ப பேச வேண்டும். பா.ஜ.க.வின் நாலாந்தரப் பேச்சாளரைப் போல பேசக்கூடாது. மீறி மோடி அப்படி பேசுகிறார் என்றால் தோற்கப் போகிறோம் என்பதை அவரே உணர்ந்து விட்டார் என்பது தெரிகிறது. 400 தொகுதிகள் வெற்றி பெறப் போவதாக அவர் சொல்லிக் கொள்கிறார். உண்மையில் 400 தொகுதிகள் வெற்றி பெறப் போகிறவர் இப்படி தரந்தாழ்ந்து பேசமாட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.