Skip to main content

குள்ளம்பட்டி கிராமசபை கூட்டத்தில் எட்டுவழிச்சாலைக்கு எதிரான தீர்மானத்திற்கு மறுத்ததால் விவசாயிகள் வாக்குவாதம்! 

Published on 27/01/2020 | Edited on 27/01/2020

சேலம் அருகே நடந்த கிராமசபைக் கூட்டத்தில், எட்டுவழிச்சாலைத் திட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை பதிவு செய்ய மறுத்ததால், அரசுத்தரப்பு பிரதிநிதிகள், விவசாயிகளிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 


கிராம ஊராட்சிகளில் அரசின் அனைத்துத் திட்டங்களும் முழுமையாக சென்று சேரவும், அதை மக்கள் முன்னிலையில் சமூக தணிக்கைக்கு உட்படுத்தும் நோக்கிலும் ஆண்டுதோறும் ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய நான்கு நாள்களில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பு ஆண்டுக்கான முதல் கிராமசபைக் கூட்டம் தமிழகம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 26) நடந்தது.


சேலத்தை அடுத்த குள்ளம்பட்டி அரசுத் தொடக்கப்பள்ளியில் கிராமசபைக் கூட்டம் நடந்தது. ஊராட்சிமன்றத் தலைவர் கலாபிரியா பழனிசாமி தலைமையில் கூட்டம் நடந்தது. கிராம ஊராட்சி எழுத்தர் வடிவேல் மற்றும் சுகாதாரத்துறை, மின்வாரியம், தொடக்கக்கல்வித்துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். கிராமசபைக் கூட்டம், சற்று தாமதமாக காலை 11.30 மணிக்கு மேல்தான் தொடங்கியது.

republic day grama sabha meeting salem district peoples and officers


கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே குள்ளம்பட்டியைச் சேர்ந்த விவசாயி பன்னீர்செல்வம், ஊர் பொதுமக்கள் சார்பில், எட்டுவழிச்சாலைத் திட்டத்தை கைவிடக்கோரி ஒரு மனுவை அளித்தார். அந்த மனுவில், ''குள்ளம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட விவசாய நிலங்கள் வழியாக சேலம்- சென்னை எட்டு வழிச்சாலை அமைக்க நிலம் அளவீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டம் வந்தால், எங்கள் கிராமமே இரண்டாக பிளவுபடும்.


இத்திட்டத்தால் ஏற்கனவே உள்ள நீர்வழித்தடங்கள் அடைக்கப்படும். இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதோடு, மரங்களும் வெட்டப்படுவதால் மழை வளமும் பாதிக்கப்படும். விளை நிலங்கள் அழிக்கப்படுவதால் விளை பொருள்கள் உற்பத்தி பாதிப்பதோடு, விவசாயிகளுக்கும், விவசாயக் கூலிகளுக்கும் வேலையிழப்பும் ஏற்படும் என்பதால் இத்திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்,'' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.


கூட்டத்தில், குள்ளம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவரான கலாபிரியா பெயரளவுக்கு அமர்ந்து இருந்தாரே தவிர, மக்களின் கேள்விகளுக்கு, நான்தான் தலைவர் என்று கலாபிரியாவின் கணவர் பழனிசாமி தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டு பேசினார். 


எட்டுவழிச்சாலைக்கு எதிரான மனு குறித்து, ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் பழனிசாமி, ''கிராமசபைக் கூட்டம் தொடர்பாக நடந்த பயிற்சி கூட்டத்தின்போது, எட்டுவழிச்சாலைக்கு எதிரான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருவதால், அது தொடர்பாக எந்த தீர்மானத்தையும் பதிவு செய்யக்கூடாது என்றும், அப்படி பதிவு செய்வது கோர்ட் அவமதிப்பு செயலாகும் என்றும் அதிகாரிகள் எங்களிடம் சொல்லி இருக்கிறார்கள். அதனால் எட்டுவழிச்சாலைக்கு எதிரான கோரிக்கை மனுவை பெறவோ, அதன்மீது தீர்மானமோ நிறைவேற்ற முடியாது,'' என்றார். அந்த மனுவை பெற்றுக்கொண்ட அவருடைய மனைவி, திரும்பவும் பன்னீர்செல்வத்திடமே கொடுத்து விட்டார்.  

republic day grama sabha meeting salem district peoples and officers


இதற்கு பன்னீர்செல்வம் உள்ளிட்ட விவசாயிகள் அவரிடமும், அரசு பிரதிநிதியான வடிவேலிடமும் வாக்குவாதம் செய்தனர். தீர்மானம் பதிவு செய்ய முடியாது என்று எழுத்து மூலம் பதில் அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் கேட்டதால், மேலும் அங்கு வாக்குவாதம் முற்றியது. இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு  ஏற்பட்டது. கூட்டம் முடிந்த பிறகு, எட்டுவழிச்சாலைக்கு எதிரான மனுவை பெற்றுக்கொண்ட பழனிசாமி, இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பேசிவிட்டு பதில் தருகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றார்.


குடிநீர் குழாய்களை சீரமைக்கும் பணிகளுக்காக குள்ளம்பட்டி ஊராட்சி பொது நிதியில் இருந்து 18645 ரூபாய் செலவிடப்பட்டு உள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அவ்வாறான பணிகள் நடக்கவே இல்லை என்றும், அதில் ஊழல் நடந்திருப்பதாகவும் கிராம மக்கள் குற்றச்சாட்டினர். குடிநீர் குழாய்களை சீரமைத்து இருந்தால், கடந்த ஓராண்டுக்கான செலவு கணக்கு ரசீதுகள் உள்ளிட்ட முழுமையான தணிக்கை கணக்குகளை சமர்ப்பிக்குமாறு கோரி, எழுத்தர் வடிவேலை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். 


ஆனால் எழுத்தர் வடிவேலோ, தீர்மானம் பதிவு செய்யும் பதிவேட்டை கையில் எடுத்துக்கொண்டு கூட்டத்தைவிட்டு வெளியேற முயற்சித்தார். அவரை செல்ல விடாமல் முற்றுகையிட்ட பொதுமக்கள், கணக்கு வழக்குகளை உடனடியாக மக்கள் முன்னிலையில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இந்த கூட்டத்திறகு வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் வர வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருந்தனர். இந்த களேபரத்தில் ஒரு சிலர், அவரை ஒருமையிலும் வசைபாடினர். 


இதையடுத்து, உடனடியாக வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொண்ட வடிவேல், கடந்த மூன்று மாதத்தில் எவ்வளவு தொகை செலவிடப்பட்டது என்பதை மட்டும் தீர்மான பதிவேட்டைப் பார்த்து வாசித்துக் காட்டினார். இந்த சம்பவத்தால் கூட்டம் நடந்த பள்ளி வளாகமே பரபரப்பாக காணப்பட்டது. 

republic day grama sabha meeting salem district peoples and officers


தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் களை எடுத்தல், அறுவடை செய்தல் உள்ளிட்ட வேலை வாய்ப்புகளையும் சேர்த்தல், குள்ளம்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் பொதுக்கழிப்பறைகள் கட்டுதல், பாலிக்காடு பகுதியில் புதிய தார்ச்சாலை அமைத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 


கிராமசபைக் கூட்டங்களில் எட்டுவழிச்சாலைத் திட்டத்திற்காக பிரச்னைகள் வெடிக்கலாம் என்ற தகவலால், காரிப்பட்டி காவல்நிலைய தனிப்பிரிவு, கியூ பிரிவு, எஸ்பிசிஐடி உள்ளிட்ட உளவுப்பிரிவு காவல்துறையினரும் கூட்டத்தில் நிகழும் சம்பவங்களை செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். எட்டுவழிச்சாலை அமைய உள்ள எல்லா கிராமசபைக் கூட்டங்களிலும் உளவுப்பிரிவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.


அதேநேரம், பூலாவாரி அக்ரஹாரத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் ராதா, ஒன்றிய கவுன்சிலர் மலர்விழி ஆகியோர் தலைமையில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில், எட்டுவழிச்சாலைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.