Skip to main content

போக்சோவில் கைது செய்யப்பட்டவருக்கும் சங்கத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை... ஜனநாயக வாலிபர் சங்கம் மறுப்பறிக்கை!!

Published on 12/07/2019 | Edited on 12/07/2019

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் புதுக்கோட்டையில் கைது செய்யப்பட்ட நபருக்கும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்திற்கும் எந்தத்  தொடர்பும் இல்லை. இதுகுறித்து சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.கர்ணா, செயலாளர் துரை.ராராயணன் ஆகியோர் அறிக்கை வெளியிட்டள்ளனர்.  

அந்த அறிக்கையில்,

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பாலின சமத்துவத்தையும், பெண்களின் பாதுகாப்பையும் வலியுறுத்தி தொடர்ச்சியான போராட்டங்களை நடத்திவரும் அமைப்பு. எங்கெல்லாம் பெண்கள், சிறுமிகள் பாதிக்கப்படுகின்றனரோ அங்கெல்லாம் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நின்று உரிய தண்டனை பெற்றுத்தருவதற்காக எண்ணற்ற போராட்டங்களை நடத்திய இயக்கம் வாலிபர் சங்கம். 

Report of the Democratic Youth Association


இந்நிலையில், புதுக்கோட்டை நரிமேடு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்ற நபர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நகரக்குழு உறுப்பினர் சென்றும் நாளிதழ் மற்றும் தொலைக்காட்சிகளில் செய்திகள் வந்ததைப் பார்த்து அதிர்சியடைந்தோம். 

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அனைத்துப் பகுதியில் உள்ள இளைஞர்களையும் திரட்டி இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காக, அந்தந்தப் பகுதி மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகவும் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்திவரும் அமைப்பு. அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளில் பல நூற்றுக்கண்ககான போராட்டங்களை சங்கம் முன்னெடுத்துள்ளது. நாங்கள் முன்வைக்கும் கோரிக்கையால் ஈர்க்கப்பட்ட அந்ததப் பகுதி இளைஞர்கள் பலர் தானாக முன்வந்து எங்கள் போராட்டங்களில் பங்கெடுத்து இருக்கின்றனர். அப்படி ஓரிரு முறை மேற்படி சுரேஷ் என்பவரும் எங்கள் போராட்டங்களில் பங்கெடுத்து இருக்கலாம். ஆனால், அவர் வாலிபர் சங்கத்தில் எந்தப் பொறுப்பிலும் இல்லை.

இந்நிலையில், மேற்படி நபர் வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர் என காவல்துறை மூலமாக நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவித்திருப்பதாக அறிகிறோம். அதனடிப்படையிலேயே ஊடகங்களில் மேற்படி நபர் சுரேஷ் வாலிபர் சங்கத்தின் நகரக்குழு உறுப்பினர் என வெளியாகியுள்ளது. காவல்துறையின் பல்வேறு செயல்பாடுகளைக் கண்டித்து கடந்த காலங்களில் சங்கத்தின் சார்பில் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம். இதற்குப் பழிதீர்க்கும் வகையில் இத்தகைய பொய்யான செய்தியை காவல்துறையினர் வெளியிட்டு இருப்பதாக கருதவேண்டியுள்ளது.

எனவே, மேற்படி நபர் வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர் என்கிற செய்தியை சங்கத்தின் மாவட்டக்குழு சார்பில் முற்றாக மறுக்கிறோம். மிகக்கொடூரமான தவறிழைத்த சுரேஷ் என்ற நபர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை சங்கத்தின் சார்பில் வலியுறுத்துகிறோம். பாதிக்கப்பட்ட சிறுமிக்க உரிய மருத்துவ சிகிச்சையும், மனநல ஆலோசனையும் வழங்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், மேற்படி அந்த நபர் வலிபர் சங்கத்தின் நகரக்குழு உறுப்பினர் என்ற பொய்யான செய்தியை கசியவிட்ட காவல்துறைக்கும் கடும்கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம். எங்களின் விளக்கத்தை ஊடகங்கள் ஏற்று செய்து வெளியிட்டு உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடைசிவரை பேச்சுவார்த்தை தோல்வி; இறுதிவரை புறக்கணித்த இறையூர் மக்கள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமான கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகளை காண முடிந்தது. அதேபோலதான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி, முத்துக்காடு ஊராட்சி, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக 502 வாக்காளர்களைக் கொண்ட இறையூர் கிராம மக்கள் பதாகை வைத்தனர்.

அதேபோல இதேகோரிக்கையை வலியுறுத்தி 59 வாக்காளர்களை கொண்ட வேங்கை வயல் கிராம மக்களும் தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்தனர். இந்த பகுதிக்கு எந்த ஒரு வேட்பாளரும் வாக்கு கேட்டு வரவில்லை. திருச்சி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மட்டும் வந்து சென்ற நிலையில் அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறையூர் மற்றும் வேங்கை வயல் கிராமங்களில் உள்ள 561 வாக்காளர்கள் வாக்களிக்க வேங்கைவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், காலை முதல் வாக்குப் பதிவிற்கு அதிகாரிகள் காத்திருந்த நிலையில் அரசு ஊழியர் வாக்கு ஒன்று பதிவானது, தொடர்ந்து இந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க காவேரி நகர் உள்ளிட்ட வெளியூரில் இருந்த சிலர் வந்து வாக்களித்தனர். மதியம் வரை 6 வாக்குகள்  மட்டுமே பதிவாகி இருந்தது.

nn

இரு கிராம மக்களும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்குட்ட பகுதி என்றபதால் மாலை திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் வந்த அதிகாரிகள் வேங்கைவயல் கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும். எங்களுக்கு தனியொரு இடத்தில் குடியிருப்பு பகுதி ஏற்படுத்தி வீடுகள் கட்டித்தர வேண்டும், வாழ்வாதாரத்திற்கு விளைநிலம், தொழில் வசதி செய்து தர வேண்டும் என்று பல கோரிக்கைகள் முன் வைத்தனர். இதனைக் கேட்ட அதிகாரிகள் வழக்கு சம்மந்தமாக சிபிசிஐடி விசாரணை நடக்கிறது உங்களுக்கே தெரியும் விரைவில் கைது செய்வார்கள். மற்ற கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் அதனால் வாக்குப்பதிவு செய்யுங்கள் என்று கூறினர். அதனையடுத்து மாலை 5 மணிக்கு பிறகு வேங்கைவயல் மக்கள் 59 வாக்காளர்களில்  53 பேர் இரவு 7 மணி வரை வாக்களித்தனர்.

அதேபோல இறையூர் கிராம மக்களிடம் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்யும் வரை எந்த தேர்தலிலும் வாக்களிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். சொன்னது போல முழுமையாக வாக்குப் பதிவை புறக்கணித்துவிட்டனர். இறையூர் கிராம மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேங்கைவயல் மக்களின் 53 வாக்குகளுடன் சேர்த்து மொத்தமே 62 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்து இறையூர் மக்கள் முழுமையாக தேர்தலை புறக்கணித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேங்கை வயல் கிராம தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்போம் என்பதில் இறையூர் கிராம மக்கள் ஒருங்கிணைந்து நிற்கிறோம் என்கின்றனர் இறையூர் மக்கள்.

Next Story

'ஐயம் களையப்பட வேண்டும்'- ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலாளர் கோரிக்கை

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

'மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களின் வாக்குரிமை பாதுகாக்கப்படவேண்டும். எனவே அஞ்சல் வாக்கு மற்றும் தேர்தல் பணிச்சான்று கிடைக்கப்பெறாத ஆசிரியர், அரசு அலுவலர்களின் ஐயம் களையப்படவேண்டும்' என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, 'தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் எதிர்வரும் 19.04.2024 அன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கு மக்களவைத் தேர்தல் பணிகளில் தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் வாக்குச்சாவடி அலுவலர் பொறுப்புகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்கு(postal vote) உரிமையின் மூலமாகவும் , தேர்தல் பணிச் சான்று(election duty certificate) கிடைக்கப்பெற்று பணியாற்றும் வாக்குச்சாவடிகளில் வாக்கினை செலுத்துவது மூலமாகவும் தங்களது ஜனநாயக கடமையை செவ்வனே ஆற்றி வந்துள்ளனர் என்பது காலம் காலமாக இருந்து வரும் நடைமுறை மரபாகும்.

ஆனால் தற்போதைய மக்களவைத் தேர்தலுக்கான இவ்வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இதுவரையிலும் மூன்று கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையிலும் அஞ்சல் வாக்குகள் கோரியவருக்கு அஞ்சல் வாக்குகளும் வழங்கப்படவில்லை.தேர்தல் பணிச்சான்று கோரியவருக்கும் தேர்தல் பணிச்சான்றும் வழங்கப்படவில்லை. மாநிலத்தின் பெரும்பாலான மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களின் இதற்கு மெத்தனப்போக்கு காரணமாகும்.  வாக்குரிமை பறிப்புக்கு இணையானதாகும் என்று வலுவாகப் பேசப்படுகிறது.

nn

தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களிடம் பரவலாக பரவி வரும் பேரச்சம் மற்றும் பெரும் ஐயம், மனப்பதற்றம், மனக்கொந்தளிப்பினை அதிகரித்துள்ளது. புதுக்கோட்டை  மாவட்டத்தில் மறியல் போராட்டம் வரை சென்றுள்ளது. நூறு சதவிகிதம் வாக்குப் பதிவினை முதன்மை நோக்கங்களில் ஒன்றாக கொண்டுள்ள தேர்தல் ஆணையத்தின் இலக்கினை நிறைவேற்றும் வகையில் தேர்தல் பணிகளில் பணியமர்த்தப்படும் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு அஞ்சல் வாக்குச்சீட்டும், தேர்தல் பணிசான்றும் உடன் கிடைக்கப் பெறச்செய்து வாக்கு உரிமையை பாதுகாத்துத் தந்திட வேண்டுமாய் தமிழ்நாடு தலைமைத்தேர்தல் அலுவலரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது' என தெரிவித்துள்ளார்.