Skip to main content

ரயில்வே பாலத்தில் தீடீர் பழுது: போக்குவரத்து மாற்றம்!

Published on 13/01/2024 | Edited on 13/01/2024
Repairs on railway bridge near Ponmalai G corner

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொன்மலை ஜி கார்னர் பகுதியில் போக்குவரத்துக்கென இரு ரயில்வே பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், திருச்சியிலிருந்து சென்னை மார்க்கத்தில் இடதுபுறமுள்ள பாலம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை-மதுரை நான்கு வழிச்சாலை மேம்பாட்டுப் பணியின்போது, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் அமைக்கப்பட்டதாகும். மற்றொருபாலம் பழைய பாலமாகும். இதில் புதிதாக அமைக்கப்பட்ட பாலத்தில்தான் தற்போது பழுது ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வியாழக்கிழமை பிற்பகல் அந்த பாலத்தில் பழுது ஏற்பட்டதை கண்ட நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது, டிவிஎஸ் டோல்கேட்டிலிருந்து செல்லும் வழியில் பாலத்தின் அடிப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு பாலத்தின் தூண் சற்று கீழே சாய்ந்தும் இறங்கியும் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் முதல் கட்டமாக அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்ய முடிவு செய்து, வியாழக்கிழமை நள்ளிரவு முதல் பொன்மலை ஜி கார்னரிலிருந்து செந்தண்ணீர்புரம் வரை, பழையபாலம் மற்றும் சாலையை இருவழிப்பாதையாக்கி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதற்காக அச்சாலையில் நடுப்பகுதியில் இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், மதுரை, திருச்சியில் இருந்து சென்னை செல்லும் வாகனங்கள் ஜி கார்னர் முன்பாக வலதுபுறம் பாலத்திற்கு ஏறிச்செல்லும் வகையில் அங்கிருந்த மையத் தடுப்புகளும் அகற்றப்பட்டு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

அதேபோல செந்தண்ணீர்புரத்தில் சென்றதும், மீண்டும் இடப்புற சாலைக்கு செல்லும் வழியிலும் அங்கிருந்த மையத் தடுப்புகளும் இடித்து அகற்றப்பட்டுள்ளன. மேலும் அரியமங்கலம் பகுதி வழியாக சென்னை, தஞ்சை பகுதிகளிலிருந்து திருச்சி வரும் வாகனங்கள், மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள், ஜி கார்னர் சர்வீஸ் சாலையில் வந்து ரஞ்சிதபுரம் பேருந்து நிறுத்தம் அருகே டிவிஎஸ் டோல்கேட் பாலத்தில் ஏறிச்செல்லும் வகையில் அங்கிருந்த தடுப்புகளும் அகற்றப்பட்டுள்ளன. இப்போக்குவரத்து மாற்றம் மற்றும் மையத்தடுப்புகள் இடித்தல், இரும்பு தடுப்புகள் வைத்தல் உள்ளிட்டவைகளால் ஜிகார்னர் பாலப் பகுதியில் வியாழக்கிழமை நள்ளிரவு போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது.

தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் தொழில் நுட்பக்குழுவினர் பாலப்பகுதியில் மேற்கொள்ள வேண்டிய தொழில்நுட்ப பணிகள் குறித்து தீவிர மேற்கொண்டுள்ளனர். தொடர் விபத்து ஏற்படுவதை தவிர்க்க சுரங்கப்பாதை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சர்க்கார்பாளையம் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.  

இது குறித்த தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார், மாநகர காவல் ஆணையர் என். காமினி உள்ளிட்டோர் ரயில்வே மேம்பாலப் பாலத்தின் பழுதடைந்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் பொங்கல் கூட்ட நெரிசல் உள்ளிட்ட எக்காரணத்தைக் கொண்டும் பணிகள் முடியும் வரையில், பழுதடைந்த பாலத்தில் வாகனப் போக்குவரத்துகளை அனுமதிக்கக் கூடாது என காவல் ஆணையரிடம் ஆட்சியர் தெரிவித்தார். இதனையடுத்து பாலத்திலேயே இருவழிப் போக்குவரத்து மேற்கொள்ள மாநகர காவல் ஆணையர் போக்குவரத்துப் போலீஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பாலத்தில் பழுது ஏற்பட்டதும். முதல் கட்டமாக அசம்பாவிதத்தை தடுக்கும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அடுத்தகட்ட சீரமைப்பு பணிகள் குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறையினர், சென்னையில் உள்ள தொழில் நுட்ப வல்லுநர்கள் மற்றும் தேசிய தொழில் நுட்பக்கழக வல்லுநர்களுடன் இணைந்து ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனர். பொங்கல் விடுமுறைக்குப் பின்னர் தொழில் நுட்பக்குழுவினர் ஆய்வுக்குப் பின்னர் சீரமைப்பு பணிகள் தொடங்கும் என தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Father sentenced to life imprisonment for misbehaving with daughter

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் 64 வயதான விவசாயி. இவருக்கு 35 வயதில் மாற்றுத்திறனாளி (மன நலம் பாதிக்கப்பட்ட ) ஒரு மகள் இருந்தார். கை, கால்களும் செயல் இழந்த அந்த பெண் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில் அவரது தாயார் இறந்து விட்டார்.

இதனையடுத்து தனது தந்தை மற்றும் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆவது ஆண்டில் பெண்ணின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளியான அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது உறவினர்கள் முசிறி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தந்தையான விவசாயியே அவரது மகளை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய விவரம் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அடுத்த சில மாதங்களில், பெண்ணுக்கு குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. மேலும் 5 மாதங்கள் கழித்து உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணும் உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நடந்து வந்தது. வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து விவசாயிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்குரைஞராக ஜாகிர் உசேன் ஆஜரானார்.

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.