Skip to main content

நீர்நிலை மீதான ஆக்கிரமிப்புகள் அகற்றம் - குடியிருப்புவாசிகள் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி!

Published on 26/08/2022 | Edited on 26/08/2022

 


கடலூர் மாவட்டம் விருத்தாசலம்-கடலூர் நெடுஞ்சாலையில் கோட்டாட்சியர் அலுவலகம் எதிர்புறம் 4.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட முல்லா ஏரி பகுதி மற்றும் கோட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள 1.25 ஏக்கர் ஏரி நீர் பிடிப்பு தாங்கல் பகுதிகள் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆக்கிரமிப்பு செய்து 150-க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள் என கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

 

ஏரியையும், ஏரி பகுதியையும் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக விருத்தாசலத்தை சேர்ந்த தடயம் பாபு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதன்படி கடந்த 2018, ஜனவரி 10ம் தேதி முல்லா ஏரிப்பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு, நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் ஆக்கிரமிப்புகளை அகற்றாதது குறித்து 2021 நவம்பர் மாதம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதன்பேரில், வரும் ஆகஸ்ட் 29-ஆம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றி அதன் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு  சென்னை நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டது.

 

இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த்துறையினர் பலமுறை நோட்டீஸ் அளித்தும் ஆக்கிரமிப்பாளர்கள் அதனை அகற்றவில்லை. இதனால் வட்டாட்சியர் தனபதி, நகராட்சி ஆணையாளர் சேகர், ஏ.எஸ்.பி அங்கித் ஜெயின் அடங்கிய அதிகாரிகள் குழுவினர்  கடந்த 23-ஆம் தேதி முதல் முல்லா ஏரி பகுதியில் உள்ள கட்டிடங்களை அகற்றும் பணியில் களமிறங்கினர். முதற்கட்டமாக கடைகளின் முகப்பு பகுதிகள் மட்டும் இடிக்கப்பட்டன. மேலும் ராட்சத இயந்திரம் மூலம் கட்டிடங்கள் முழுவதும் இடிக்கப்படும் என எச்சரித்து சென்றனர்.

 

அதன்படி நேற்று ஐந்தாவது நாளாக அதிகாரிகள்  ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் தொடர்ந்து ஜே.சி.பி இயந்திரத்தில் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என்பதால், குடியிருப்புவாசிகள் மற்றும் வியாபாரிகள் ஆக்கிரமிப்பு கட்டிடங்களிலிருந்து மின்சாதன பொருட்கள் உள்ளிட்ட உடமைகளை தாங்களாகவே அப்புறப்படுத்தினர்.

 

இந்நிலையில் திடீரென்று இந்திரா நகர் பகுதியிலிருந்து இருபதுக்கும் மேற்பட்டோர் மண்ணெண்ணெய் கேன் எடுத்து வந்து விருத்தாசலம்-கடலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மண்ணெண்ணெய்யை மேலே ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனைப் பார்த்த காவல்துறையினர் தடுக்க முற்பட்டபோது இரு தரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஐந்தாறு நபர்கள்  தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பாதுகாப்புப் பணியிலிருந்த மகளிர் காவல் நிலைய அதிகாரி அமுதாவின் கண்ணில் மண்ணெண்ணெய்  ஊற்றியதால், கண்ணெரிச்சல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். பின்னர் சக காவல்துறையினர், அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் வட்டாட்சியர் தனபதி மற்றும் காவல்துறை அதிகாரிகள்  பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் வருகின்ற 29 ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டதால் அனைவரும் கலைந்து சென்றனர்.

 

தங்களுக்கு மாற்றுக் குடியிருப்பு வழங்க வேண்டும் என்றும், தங்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக கேள்விக்குறியாக விட்டதாகவும் தெரிவித்தனர்.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.