Skip to main content

தமிழனுக்கு இன்று பாடை கட்டிய மதவாத கும்பல் நாளை எடப்பாடி அரசுக்கும் பாடை கட்டக்கூடும்: தவாக எச்சரிக்கை!

Published on 28/05/2018 | Edited on 28/05/2018

 

 


மதவாத-வகுப்புவாத” கும்பல் தமிழனுக்கு இன்று பாடை கட்டியிருக்கிறது. இதன் நீட்சியாக, நாளை எடப்பாடி பழனிசாமி அரசுக்கும் அந்தக் கும்பல் பாடை கட்டக்கூடும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில்,

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் குடும்பத்தினரையும் குண்டடி பட்டு மருத்துவமனையில் இருப்போரையும் சந்தித்து ஆறுதல் கூற அனுமதிக்க வேண்டும், துப்பாக்கிச் சூட்டின் சூத்ரதாரிகள், அதற்கு உத்தரவிட்டவர்கள், சுட்டவர்கள், காவல்துறை உயரதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் ஆகிய அனைவரையும் கைது செய்து குற்றவியல் நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும், துப்பாக்கிச் சூடு சம்பவத்தை விசாரிக்க, பணியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்.

துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் மற்றும் குண்டடி பட்டோரின் புகைப்படம், பெயர், முகவரி விவரங்களை வெளியிட வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் குடும்பத்திற்கு இழப்பீடாக தலா 1கோடி ரூபாயும், குண்டடி பட்டோருக்கு தலா 50 லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும். உடனடியாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் நான்காவது நாளாக சிறையில் உண்ணாநிலைப் போராட்டம் இருந்து வருகிறார்.

நாசகார ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுமாறு போராடிய தூத்துக்குடி மக்கள் மீது திட்டமிட்டுத் துப்பாக்கிச் சூடு நடத்தியது காவல்துறை. அதில் 13 பேர் பலியானதாகவும் குண்டடி பட்டு பலர் (எத்தனை பேர் என்று தெரிவிக்கவில்லை) மருத்துவமனையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பலியானோர் குடும்பத்தினரையும் குண்டடி பட்டு மருத்துவமனையில் இருப்போரையும் சந்தித்து ஆறுதல் கூற, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கடந்த 26.05.2018 அன்று தூத்துக்குடிக்குச் சென்றார். ஆனால் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டோரைப் பார்க்கச் செல்லவிடாமல் தலைவரை விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தினர் காவல்துறையினர்.

இதற்கு காரணம் கேட்டதற்கு, எந்தக் காரணத்தையும் அவர்களால் சொல்ல முடியவில்லை. பாதிக்கப்பட்டோரைப் பார்க்க அனுமதியுங்கள் என்று மன்றாடியும் மறுத்துவிடவே, அந்த இடத்திலேயே தலைவர் உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கினார். பின்னர் காவலர்கள் அவரை ஒரு மண்டபத்திற்கு கொண்டுபோய் காவலில் வைத்தனர். அங்கும் அவர் உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடர்ந்தார்.

26.05.2018 அன்று பிற்பகலில் இந்த உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கிய நிலையில் மறுநாள் அதிகாலை 3 மணிக்கு “தாங்கள் கைது செய்யப்படுகிறீர்கள்” என அதிகாரபூர்வமாக அறிவித்தார்கள். இதற்கென்றே விழுப்புரத்திலிருந்து வந்திருந்த காவல்படை வேல்முருகனை ஏற்றிக்கொண்டு உளுந்தூர்பேட்டைக்கு என்று சொல்லி புறப்பட்டது.

உளுந்தூர்பேட்டைக்குக் கொண்டுவந்த பின், கள்ளக்குறிச்சி நீதிமன்றத்திற்கு அழைத்து செல்வதாக கூறி அங்கு சென்று, பின் அங்கிருந்து திருக்கோவிலூருக்கே கொண்டுவந்து அலைக்கழித்தனர். திருக்கோவிலூரில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 15 நாள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர். நீதிமன்றக் காவலில் வைப்பதற்காக, ஒன்றரை மாதத்திற்கு முன் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தை காரணமாகப் பயன்படுத்தினர்.

அந்தப் போராட்டம் சுங்கச்சாவடி கட்டணக் கொள்ளையை எதிர்த்த பொதுமக்களின் போராட்டமாகும்; தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நடைபெற்ற அந்தப் போராட்டத்தில் சுங்கச்சாவடி தாக்கப்பட்டதாக பொய்வழக்கு புனைந்துள்ளனர். அந்தப் பொய்வழக்கை மேலும் பொய்களைச் சேர்த்துப் புதுப்பித்து அதில் தலைவரைத் தொடர்புபடுத்தி இப்போது நீதிமன்றக் காவலில் வைக்கச்செய்தனர்.

முதலில் கடலூர் சிறை என்றனர்; பின்னர் வேலூர் சிறை என்றனர் கடைசியில் சென்னை புழல் சிறைக்கு கொண்டுசென்றனர். ஆனால் வேல்முருகனின் உண்ணாநிலைப் போராட்டம் தொடர்ந்தது; இன்று நான்காவது நாளாக புழல் சிறையிலும் உண்ணாநிலைப் போராட்டம் தொடர்கின்றது.

 

 


உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கியது முதலே தண்ணீர்கூட அருந்தாமல் போராட்டம் தொடர்கின்றது. 27.05.2018 (நேற்று) முதல் புழல் சிறையில் உள்ள விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் 50க்கும் மேற்பட்டோர் மேற்கொண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேல்முருகனுடன் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவல்லாமல், தூத்துக்குடியில் குவிக்கப்பட்டிருக்கும் காவல்படை அங்கு வீடு வீடாகச் சென்று இளைஞர்களை வேட்டையாடுவதாக தகவல் வருகிறது. உடனடியாக இது நிறுத்தப்பட வேண்டும்; காவல்படை மொத்தத்தையும் அங்கிருந்து திரும்பப்பெற வேண்டும்.

குண்டடி பட்டு மருத்துவமனையில் இருப்போரில் 14 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மாவட்ட ஆட்சியரிடமிருந்தே செய்தி வெளியானது. இது அச்சத்தை மேலும் அதிகரிக்கிறது. எனவே துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டோர் பற்றிய தெளிவான விவரங்களையும் சரியான எண்ணிக்கையையும் ஆட்சியர் வெளியிட வேண்டும்.

மேலும், ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தை நசுக்கி அழிக்கும் நோக்கில் மத்திய அரசு, மாநில தலைமைச் செயலர், ஸ்டெர்லைட் நிர்வாகம் ஆகிய மூன்று பேரும் கைகோர்த்தே இந்தத் தகாத செயலை, தமிழினப் படுகொலையை நிகழ்த்தியிருக்கிறார்கள்!

அதோடு, போராட்டத்தின் 100ஆவது நாளில், ஸ்டெர்லைட் நிர்வாகம் கேட்டுக்கொண்டபடி, தமிழக அரசு அதற்கு எந்தவித ஆட்சேபணையும் தெரிவிக்காததாலேயே 144 தடை உத்தரவைப் பிறக்க நீதிமன்றம் அனுமதித்திருக்கிறது.

முதலமைச்சராக இருந்தும் எடப்பாடி பழனிசாமியின் பாத்திரம் (Role) என்பது தொடக்கத்திலிருந்தே மிக மோசமானதாக, படு கேவலமானதாக இருந்திருக்கிறது என்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

உறுதிமிக்க தமிழராக அவர் நிமிர்ந்து நின்றிருந்தால், இந்த “மதவாத-வகுப்புவாத” கும்பலுக்கு என்றோ அதாவது ஸ்டெர்லைட் போராட்டம் தொடங்கியவுடனேயே, பாடை கட்டியிருக்கலாம். ஆனால் அப்படி இல்லாத கெடுவாய்ப்பு, “மதவாத-வகுப்புவாத” கும்பல் தமிழனுக்கு இன்று பாடை கட்டியிருக்கிறது.

இதன் நீட்சியாக, நாளை எடப்பாடி பழனிசாமி அரசுக்கும் அந்தக் கும்பல் பாடை கட்டக்கூடும் என்பதையே இந்த அரசுக்கு எச்சரிக்கையாக விடுக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்