
சென்னை திருவொற்றியூர் அருகே உள்ள அரிவாக்குளத்தில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்தது. இந்த குடியிருப்பில் டி பிளாக் கட்டடத்தில் 24 வீடுகள் தரைமட்டமாகின. இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் கட்டட இடிபாடுகளில் யாரேனும் சிக்கி உள்ளனரா என்று தீவிரமாகத் தேடி வருகின்றனர். வீடுகள் இடிந்து விழுந்த இடத்தில் ஐந்து தீயணைப்புப்படை வீரர்கள் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இடிந்து விழுந்த கட்டடத்தில் நேற்றிரவு விரிசல் ஏற்பட்டதால் 24 குடும்பத்தினரும் நேற்றே வெளியேற்றப்பட்டனர். இதனால் இந்த விபத்தில் உயிர்ச்சேதம் இல்லை. கட்டடம் இடிந்த போது யாரும் சிக்கி உள்ளனரா என்று தீயணைப்பு துறையினர் தேடி வருகிறார்கள். இந்நிலையில் இந்த சம்பவத்தில் வீடு இழந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிந்திருந்த நிலையில், இன்று மாலைக்குள் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்று ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார்.