பொறியியல் படிப்புக்கான தரவரிசையில் 200க்கு 200 வாங்கிய மாணவர்களில் 100 பேர் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்குத் தரவரிசை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கு 1,87,693 மாணவர்களுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள தரவரிசை பட்டியலில் திருச்செந்தூரைச் சேர்ந்த மாணவி நேத்ரா முதலிடம் பிடித்துள்ளார். நாகை மாவட்டத்தைச் சேர்ந்த நிவேதிதா என்ற மாணவி இரண்டாம் இடம் பிடித்துள்ளார். மேலும் தரவரிசை பட்டியலில் 102 மாணவர்கள் 200க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண் எடுத்துள்ளனர்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி, ஒரு லட்சத்து 78 ஆயிரம் பேருக்குத் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் மொத்தமுள்ள 102 பேரில்200க்கு 200 பெற்ற100 பேர் மாநில பாடபுத்தகத்தில் படித்தவர்கள். அரசு பள்ளியில் படித்த 15,136 ஆண்கள், 13,284 பெண்கள் கட்டணமின்றி இலவசமாக பொறியியல் படிக்கவுள்ளனர். இந்த 13,284 பெண்கள் புதுமைப்பெண் திட்டத்தில் பயனடையவுள்ளனர். 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 28,425 மாணவர்கள் தரவரிசைப் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டை விட கூடுதலாக 5,842 மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு முடிவு காரணமாக பொறியியல் கலந்தாய்வு ஜூலை 2க்கு பதிலாக 10 நாட்கள் தள்ளிப்போக வாய்ப்புள்ளது” என்றார்.