Skip to main content

வரதட்சணை கொடுமை... பெண் தற்கொலை... போலீஸ் விசாரணை..!

Published on 26/11/2021 | Edited on 26/11/2021

 

 the relatives who had gathered in front of the house screaming

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆனத்தூர் என்கிற ஊரைச் சேர்ந்தவர் தினகரன். இவரது மகள் அபிதாவுக்கும் (23), அதே பகுதியில் உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் தட்சிணாமூர்த்திக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பெற்றோர்கள் பார்த்து பேசி திருமணம் நடத்தி வைத்துள்ளனர். திருமணம் நடந்த சில நாட்களிலிருந்தே தட்சிணாமூர்த்தி குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு அபிதாவை கொடுமைப்படுத்திவந்துள்ளனர். கொடுமை தாங்க முடியாமல் தாய் வீட்டிற்கு வந்துவிட்டார் அபிதா. அதன்பிறகு உறவினர்கள் தரப்பில் ஒன்றுகூடி அபிதாவை வைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கடந்த 21ஆம் தேதி ஆலம்பூண்டியிலுள்ள அவரது கணவர் தட்சிணாமூர்த்தி வீட்டில் விட்டுவிட்டு வந்துள்ளனர்.

 

இந்த நிலையில், மறுநாள் 22ஆம் தேதி தட்சிணாமூர்த்தி தந்தை ஆறுமுகம் அபிதாவின் தாயார் சம்பூர்ணத்திற்கு ஃபோன் செய்து, உனது மகள் அபிதா தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார் என்று கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சம்பூர்ணம் மற்றும் அவரது உறவினர்கள் அலறியடித்துக்கொண்டு ஆலம்பூண்டிக்கு விரைந்து சென்றனர். மகளின் உடலைப் பார்த்து கதறி அழுத அவர்கள், அபிதாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர். அதேபோல் ஏற்கனவே வரதட்சணை கேட்டு அவரை கொடுமைப்படுத்திவந்த நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறுவது சந்தேகமாக உள்ளது எனவும் கூறியுள்ளனர்.

 

மேலும், அபிதாவை கணவர் தட்சிணாமூர்த்தி, மாமனார் ஆறுமுகம், கணவரது அக்கா முத்துலட்சுமி, மாமியார் மல்லிகா, கணவரது சகோதரி பாக்கியலட்சுமி, மாமனாரின் அண்ணன் முருகன் ஆகியோர் கொடுமைப்படுத்தியுள்ளனர் என்று கூறி அபிதாவின் தந்தை சம்பூரணம் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவுசெய்து அபிதாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து திண்டிவனம் சார் ஆட்சியர் அமித் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி அபிதாவின் உடல் பிரேதப் பரிசோதனை செய்வது கால தாமதம் ஆகியுள்ளது.

 

இதனால் பெண்ணின் உறவினர்கள் ஆத்திரமடைந்து செஞ்சி அரசு மருத்துவமனை எதிரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த செஞ்சி டிஎஸ்பி இளங்கோவன், சப் இன்ஸ்பெக்டர் நடராஜன் உள்ளிட்ட போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட அபிதாவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து திண்டிவனம் சார் ஆட்சியர் அமித் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்திய பின்னர், மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை செய்தனர். இதனால் செஞ்சி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். 

Next Story

விழுப்புரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Cm MK Stalin election campaign In Villupuram 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இதற்கிடையே தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. அதன்படி, 39 மக்களவை தொகுதிகளில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 135 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதன் மூலம் 39 தொகுதிகளில் மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தமாக 874 ஆண்களும், 76 பெண்களும் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக, கரூர் மக்களவை தொகுதியில் 54 பேர் களம் காண்கின்றனர். குறைந்தபட்சமாக, நாகப்பட்டினம் தொகுதியில் 9 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர். மேலும், தேர்தலையொட்டி தமிழகத்தில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் தேர்தல் ஆணையம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

அதே சமயம் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (05.04.2024) விழுப்புரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதனையொட்டி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். அப்போது விழுப்புரம் மக்களவைத் தொகுதி வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமார் மற்றும் கடலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரிக்க உள்ளார்.