Skip to main content

தலை நசுங்கி பலியான ஆட்டோ டிரைவர்... பஸ்சை அடித்து நொறுக்கி தீ வைத்த உறவினர்கள்!

Published on 04/12/2021 | Edited on 04/12/2021

 

Relatives who smashed the bus and set it on fire

 

விழுப்புரம் அருகில் உள்ள பாணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த அர்ச்சுனன் (25) என்பவர் வாடகைக்கு ஆட்டோ ஓட்டிவருகிறார். நேற்று (03.12.2021) இரவு அர்ச்சுனன், விழுப்புரம் டவுனிலிருந்து பணாம்பட்டு ரோட்டில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டுக்குச் செல்வதற்காக ஆட்டோவை ஓட்டிச் சென்றுகொண்டிருந்தார். சவிதா தியேட்டர் பேருந்து நிறுத்தம் அருகே அவரது ஆட்டோ ரோட்டைக் கடக்க முயன்றபோது, புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் நோக்கி அதிவேகமாக வந்த தனியார் பேருந்து ஒன்று ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ டிரைவர் அர்ச்சுனன் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

 

இந்த விபத்தைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் விபத்து ஏற்படுத்திய பேருந்தை மடக்கி நிறுத்த முயன்றனர். பேருந்து ஓட்டுநர், நடத்துநர் இருவரும் அச்சமடைந்து, பஸ்சை வேகமாக ஓட்டிச் சென்று விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தின் எதிரில் நிறுத்திவிட்டு காவல் நிலையத்திற்குள் தஞ்சம் புகுந்தனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு பஸ்சை மறித்தும் நிற்காமல் வேகமாக ஓட்டிச் சென்றதைக் கண்ட அப்பகுதி மக்கள், அர்ச்சுனனின் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர் ஆத்திரத்துடன் பஸ்சைப் பின்தொடர்ந்து வந்துள்ளனர். காவல் நிலையத்தின் அருகில் பஸ்சை நிறுத்திவிட்டு டிரைவரும், நடத்துநரும் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

 

இதனைக் கண்டு கோபமடைந்த பொதுமக்கள், அவர்கள் இருவரையும் சம்பவம் நடந்த பகுதிக்கு அழைத்துவந்து விசாரணை நடத்த வேண்டும் என கூறினர். மேலும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை அர்ச்சுனன் உடலை அந்த இடத்திலிருந்து எடுக்கவிட மாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அதோடு காவல் நிலையம் எதிரில் நின்றிருந்த பஸ்சின் கண்ணாடிகள் அனைத்தையும் அடித்து நொறுக்கினர். இதனால் பதற்றம் ஏற்பட்டு பாதுகாப்புக்காக ஏகப்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

 

போலீஸ் பாதுகாப்புடன் இறந்தவரின் உடலைக் கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனால் விபத்து நடந்த பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. அதனை போலீசார் சீரமைத்தனர், இருந்தும் விபத்து நடந்த அப்பகுதியில் பதற்றம் நிலவிவருகிறது. ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதி ஆட்டோ டிரைவர் உயிரிழந்த சம்பவம் விழுப்புரம் நகரில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விசாரணைக் கைதி மரணம்; சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்!

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
madurai youth karthi incident Relatives involved in the road block

மதுரை மாவட்டம் மதிச்சியம் என்ற பகுதியில் கார்த்திக் (வயது 30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீது காவல் நிலையத்தில் நிலுவையில் இருந்த பல்வேறு வழக்குகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருந்தார். இத்தகைய சூழலில் வழிப்பறி வழக்கில் தொடர்பு இருப்பதாகவும், தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் போலீசாரால் கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர் 3 ஆம் தேதி நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, மருத்துவ தகுதிச் சான்று வழங்கப்பட்ட பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து 4 ஆம் தேதி திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அதிகாலை உயிரிழந்தார்.

கைது செய்யப்பட்ட ஒரே நாளில் சிறையில் இருந்து உடல் நலக்குறைவால் விசாரணை சிறைக்கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. மேலும் கார்த்திக் உயிரிழப்புக்கு காவல்துறையினரே காரணம் என அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டி இருந்தனர். 

madurai youth karthi incident Relatives involved in the road block

இந்நிலையில் இளைஞரின் உயிரிழப்பிற்கு நீதி கேட்டும், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் கூறியும், உரிய நிவாரணம் அளிக்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கோரிப்பாளையம் தேவர் சிலை அருகே இன்று (07.04.2024) சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். 

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர்.