‘நெருங்கி பழகிவிட்டு... திருமணத்திற்கு மறுப்பு’ - இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை!!

refusing to marry ,10 years in prison for a young man

கள்ளக்குறிச்சி மாவட்டம் பெருவங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காசி என்பவரது மகன் ராகுல் காந்தி (25). இவர் கடந்த 2019ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 23 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணுடன் நெருங்கிப் பழகியுள்ளார். அவரை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பலமுறை அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் திருமணம் செய்துகொள்வதற்கு மறுத்துள்ளார். பாதிக்கப்பட்ட அந்தப் பெண் தனது பெற்றோருடன் ராகுல் காந்தி வீட்டுக்குச் சென்று திருமணம் செய்துகொள்ளுமாறு வலியுறுத்திக் கேட்டுள்ளார்.

அதற்கு ராகுல் காந்தியும் அவரது குடும்பத்தினரும்திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததோடு, அந்தப் பெண் மற்றும் அவரது பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்து வீட்டைவிட்டு விரட்டிவிட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட அந்தப் பெண் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவுசெய்து ராகுல் காந்தியை கைது செய்தனர். இது சம்பந்தமான வழக்கு விழுப்புரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி சாந்தி நேற்று (19.10.2021) தீர்ப்பு வழங்கினார்.

அந்த தீர்ப்பில் குற்றவாளி ராகுல் காந்திக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதை தொடர்ந்து சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ராகுல் காந்தியை போலீசார் பலத்த பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Court order kallakurichi Youth
இதையும் படியுங்கள்
Subscribe