Published on 12/04/2022 | Edited on 12/04/2022

கரூர் மாவட்டத்தில் வருகின்ற 18ஆம் தேதி முதல் தலை காக்கும் இயக்கம் என்ற பெயரில் தலைக்கவசம் இன்றி பெட்ரோல் பங்க், டாஸ்மாக் மற்றும் பொதுத்துறை வளாகங்களுக்கு செல்லும் எவருக்கும் எவ்வித சேவைகளும் வழங்கப்பட மாட்டாது என கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் எச்சரிக்கை விடுத்தார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு வரும் அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது தலைக்கவசம் இல்லை எனில் மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்குள் அனுமதி கிடையாது என்று காவல்துறையினர் இருசக்கர வாகன ஓட்டிகளை திருப்பி அனுப்பி வருகின்றனர். இதனால் வருகின்ற 18ம் தேதி முதல் கரூர் மாவட்டம் முழுவதும் கட்டாய தலைக்கவசம் என்பதும் உறுதியாக பின்பற்றப்பட வேண்டும் என காவல்துறையினர் கூறினர்.