publive-image

Advertisment

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண் புலத்தின் சார்பாகச் சர்வதேச நெல் ஆராய்ச்சி மையம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகம் இடையே ஆய்வு மற்றும் கல்வி கூட்டு துவக்கவிழா நடைபெற்றது. விழாவிற்கு பல்கலைக்கழகத் துணைவேந்தர் இராம.கதிரேசன் தலைமை தாங்கினார். இதனைத்தொடர்ந்து அரங்கத்தில் கூடியிருந்த விவசாயிகள் மற்றும் பேராசிரியர்கள் மத்தியில் அவர் பேசுகையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் சர்வதேச நெல் ஆராய்ச்சி மையம் இணைந்து வேளாண் ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறது.

அண்ணாமலை பல்கலைக்கழகம் தொடர் ஆராய்ச்சிகள் வாயிலாக உருவாக்கிய இயற்கை சீற்றங்களைத்தாங்கி வளரும் தன்மை கொண்ட சிகப்பி நெல் ரகம், கேரளாவில் கடுமையான வெள்ளத்தைத் தாங்கி நல்ல மகசூல் கொடுத்து வருகிறது. இதனால் கேரள விவசாயிகளிடம் சிகப்பி நெல் மிகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கேரளாவின் பல இடங்களில் இந்த நெல்லை விவசாயிகள் அதிக அளவு பரப்பளவில் பாலக்காடு பகுதிகளில் விரும்பிச் சாகுபடி செய்து வருகிறார்கள். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள நெல்வயல்களில் மீன், கோழி வளர்ப்பை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கூட்டு பண்ணை விவசாய முறையைத் தமிழகத்தில் உள்ள சிறு விவசாயிகள் முதல் பெரிய விவசாயிகள் வரை திட்டத்தின் செயல்பாட்டை விளக்கி விவசாயிகளின் வருமானத்தை மூன்று மடங்காக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாகக் கூறினார்.

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சர்வதேச நெல் ஆராய்ச்சி மையத்தின் உலக ஆய்வு இயக்குநர் அஜய்கோலி பேசுகையில், தெற்கு ஆசிய நாடுகளில் இயற்கை சீற்றங்களை தாங்கி வளரும் புதிய நெல் ரகங்களை உருவாக்குவதில் சர்வதேச நெல் ஆராய்ச்சி மையம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகம் இணைந்து செயல்படுகிறது. தற்போது சர்வதேச நெல் ஆராய்ச்சி மையத்தின் ஆய்வுகள் அடிப்படை அறிவியல் மற்றும் புவியியல் சார்ந்த தரவுகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதால் நம்மால் மிகவும் குறுகிய காலத்தில் இனப்பெருக்கம் வாயிலாகப் பருவமாற்றம் பிரச்சனைகளுக்கு எதிர்ப்புத்தன்மை கொண்ட புதிய ரகங்களை உருவாக்க முடியும் என்றார்.

Advertisment

இவ்விழாவில் விரா.நாராயணன் நெல் உற்பத்தியாளர் சங்க தலைவர் நடராஜன், சங்கத்தின் இயக்குநர் ரங்கநாயகி ஆகியோர் இயற்கை முறையில் விளைவித்த நாட்டு பாசுமதி நெல்லை துணைவேந்தரிடம் வழங்கினார்கள். இதனை அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கதிரேசன் இந்த நெல் குறித்து ஆய்வுப் பணிகளைத் தொடர சர்வதேச நெல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகளிடம் விழாவில் வழங்கினார்.

இந்த துவக்கவிழாவில் சர்வதேச நெல் ஆராய்ச்சி மையத்தின் தெற்கு ஆசிய ஆலோசகர் முனைவர் உமாசங்கர்சிங். தேர்வுத்துறை கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ் நன்றி கூறினார். விழாவில் மக்கள் தொடர்பு அதிகாரி இரத்தினசம்பத், துணை வேந்தரின் நேர்முக செயலர் பாக்கியராஜ், வேளாண் விரிவாக்க மைய இணை பேராசிரியர் ராஜ்பிரவின் உள்ளிட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள், விவசாயிகள், மாணவர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.