
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பொழிந்து வரும் நிலையில் நான்கு மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வங்கக்கடல் பகுதியில் உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த மூன்று நாட்களுக்கு மேற்கு நோக்கி நகரும் இதனால் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. வங்கக்கடலில் நவ். 1 ஆம் தேதி வரையும், தென்கிழக்கு அரபிக்கடலில் 3 ஆம் தேதி வரையும் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இரு நாட்களுக்கு அதீத கனமழை இருக்கும் என்பதால் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் ஒன்றாம் தேதி முதல் தென் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு மிதமான மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்யக்கூடும். சென்னையை ஒட்டிய மாவட்டங்கள் மட்டுமில்லாது கடலோர மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.