Skip to main content

என்.எல்.சி.யில் ஆட்சேர்ப்பு; தேர்வு தொடங்கிய 15 நிமிடங்களில் தேர்வர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி

Published on 17/12/2023 | Edited on 17/12/2023
Recruitment in NLC; A shock awaited the candidates within 15 minutes of the examination

நெய்வேலி என்எல்சி நிர்வாகம் நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, மந்தாரக்குப்பம், கம்மாபுரம், வளையமாதேவி உள்ளிட்ட நெய்வேலி சுற்று வட்டப் பகுதியில் 50க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் உள்ள நிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளைக் கையகப்படுத்தி என்எல்சிக்கு தேவையான நிலக்கரியைத் தோண்டி எடுத்து மின்சாரம் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதே சமயம் என்எல்சி நிர்வாகத்திற்கு இடம் கொடுத்தவர்கள் வேலை கேட்டும் உரிய இழப்பீடு வழங்காததால் தொடர்ந்து இன்று வரை போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களுக்கு ஆதரவாகப் பல்வேறு அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் என்எல்சி நிர்வாகத்திற்கு இடம் கொடுத்த வாரிசுகளுக்கு சுரங்க எந்திரங்கள் தொழிற்பயிற்சிக்கு (இண்டஸ்ட்ரியல் ட்ரைனிங்) என்ற பதவிக்கு ஆள் எடுப்பதற்காகத் தேர்வு அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இதற்கான தேர்வு டிசம்பர் 17 ஆம் தேதி 10 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில் நிலம் கொடுத்தவர்களின் வாரிசுதாரர்கள் 600க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்கள் தேர்வுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக 9:00 மணிக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் தேர்வு மையத்திற்கு வந்து சேர்ந்தனர். தேர்வு மையத்திற்கு சரியான போக்குவரத்து ஏற்பாடு இல்லாததால் தேர்வர்கள் பல நூறு ரூபாய்களை செலவு செய்து ஆர்ச் கேட்டிலிருந்து தேர்வு மையத்திற்கு ஆட்டோக்களில் வந்துள்ளனர். இந்த நிலையில் தேர்வு சரியாக பத்து மணிக்கு தொடங்கியபோது விடைத்தாள் வழங்கப்பட்டுள்ளது. பின்னர் வினாத்தாளும் வழங்கியுள்ளனர்.

தேர்வில் கலந்து கொண்ட அனைவரும் 15 நிமிடம் தேர்வை எழுதியுள்ளனர். திடீரென தேர்வு ரத்து செய்யப்பட்டதாகத் தேர்வு நடத்தும் அலுவலர்கள் தெரிவித்து தேர்வர்களின் கையில் இருந்த கேள்வித்தாள் விடைத்தாள் மற்றும் நுழைவுச் சீட்டு ஆகியவற்றை வாங்கிக்கொண்டு வெளியே அனுப்பியுள்ளனர். இது குறித்து சரியான விளக்கம் எதுவும் அளிக்காததால் தேர்வர்கள் அனைவரும் விரக்தி அடைந்து வேதனையில் வெளியே வந்தனர். பல ஆண்டுகளாகப் போராடி என்எல்சி நிறுவனத்திற்கு நிலம் கொடுத்த வாரிசுதாரர்களுக்கு தற்போதுதான் இன்டஸ்ட்ரியல் ட்ரைனிங் என்ற பதவிக்குத் தேர்வு நடைபெற்றது. அதையும் தற்போது ரத்து செய்துவிட்டார்களே என்ற வேதனையில் அடுத்து எப்போது இதுபோன்று அறிவிப்பார்களோ? என்ற ஏக்கத்தில் வந்த வழியே பார்த்து அனைவரும் சென்றனர்.

Recruitment in NLC; A shock awaited the candidates within 15 minutes of the examination

இதுகுறித்து என்எல்சி நிறுவன மக்கள் தொடர்புத் துறை துணை பொது மேலாளர் கல்பனா தேவி கூறுகையில், “சிறப்பு சுரங்க எந்திரங்கள் தொழிற் பயிற்சிக்கான எழுத்து தேர்வு நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரியில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. இதில் ஆங்கிலம் மற்றும் தமிழில் வினாத்தாள்கள் வழங்கப்பட்டது. தேர்வு நடத்தும் பொறுப்பை வெளி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. தேர்வு மையத்தில் விடைத்தாள்கள், கேள்வித்தாள்கள் விநியோகிக்கப்பட்டது. அப்போது வினாத்தாள்களில் தமிழாக்கம் சரியாக மொழிபெயர்க்காமல் இருந்தது தெரியவந்தது அதில் தவறு அதிகம் இருந்தது. எனவேதான் இப்படியே தேர்வை நடத்தினால் தவறாக மாறிவிடும். எனவே இதனைத் தொடர்ந்து தேர்வு ரத்து செய்யப்பட்டது. பின்னர் விரைவில் மறு தேதிக்கு ஒத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது. உடனே விண்ணப்பதாரர்களிடமிருந்து அழைப்பு கடிதங்கள், விடைத்தாள் மற்றும் கேள்வித்தாள்கள் சேகரிக்கப்பட்டது. உரிய அறிவிப்புடன் தேர்வு விரைவில் நடத்தப்படும்” எனக் கூறினார். 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.