Skip to main content

அதிமுக ஆவணங்கள் மீட்பு; ஓபிஎஸ் மீது வழக்கு பதிவு

Published on 26/09/2022 | Edited on 26/09/2022

 

Recovery of AIADMK documents; Case registered against OPS

 

ஜூலை 11ல் அதிமுக பொதுக்குழு சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி காலை கூடியது. உயர்நீதிமன்ற தீர்ப்பு வந்த அதே சமயத்தில் ஓபிஎஸ் தரப்பினர், பூட்டப்பட்டு இருந்த அதிமுக தலைமை அலுவலகத்தின் கதவுகளை உடைத்து உள்ளே சென்றனர். இந்த விவகாரத்தை அறிந்து தலைமை அலுவலகத்தின் வெளியே இபிஎஸ் தரப்பினரும் கூடினர். இதனால் அங்கு ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பினரிடையே மோதல்  வெடித்தது. அதனை தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தை மயிலாப்பூர் வட்டாட்சியர் பூட்டி சீல் வைத்தார். அதன் பிறகு அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் உயர்நீதிமன்றம் வழங்கியது.

 

சாவியை பெற்ற இபிஎஸ் தரப்பில் இருந்து சி.வி.சண்முகம் உட்பட சில அதிமுகவினர் தலைமை அலுவலகத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அதன் பின் தலைமை அலுவலகத்தில் இருந்த விலை உயர்ந்த பரிசுப்பொருட்களையும் ஆவணங்களையும் ஓபிஎஸ் தரப்பினர் எடுத்துச்சென்றதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

 

இந்த புகாரின் அடிப்படையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் இன்று காலை முதல் ஆய்வில் ஈடுபட்டனர்.  20க்கும் மேற்பட்ட சிபிசிஐடி அதிகாரிகளும், தடயவியல் நிபுணர்களும், பொதுப்பணி துறை அதிகாரிகளும் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் சேதமான பொருட்கள் குறித்தும் காணாமல் போன பொருட்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது காணவில்லை என குறிப்பிடப்பட்ட வெள்ளி வேல் அதிமுக அலுவலகத்தில் இருந்தது என சிபிசிஐடி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.

 

மேலும் ஆங்காங்கு சேதம் செய்யப்பட்ட பொருட்களையும் காணாமல் போன ஆவணங்கள் குறித்தும் ஆய்வு செய்தனர். இந்நிலையில் தடயவியல் நிபுணர்கள் அளிக்கும் அறிக்கை, சிபிசிஐடி அதிகாரிகள் அளிக்கும் அறிக்கை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அளிக்கும் அறிக்கை என மூன்றையும் சேர்த்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகின. 

 

இந்நிலையில் அதிமுக கலவரத்தின் போது எடுத்துச் செல்லப்பட 113 ஆவணங்கள் மீட்கப்பட்டது எனவும் அனைத்து ஆவணங்களும் மீட்கப்பட்டு அனைத்தும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது எனவும் சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

 

மேலும் ஆவணங்கள் பரிசுப்பொருட்களை திருடிச் சென்றுவிட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் ஒபிஎஸ் உள்ளிட்ட 60 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.