Skip to main content

பெருமாள் கோயிலில் திருடப்பட்ட 7 சிலைகள் மீட்பு; சாமியார் கைது!

Published on 30/05/2023 | Edited on 30/05/2023

 

Recovery of 7 idols stolen from Perumal Temple;

 

தாரமங்கலம் அருகே, பழமையான பெருமாள் கோயிலில் திருடப்பட்ட 7 சாமி சிலைகளை காவல்துறையினர் மீட்டனர். சிலைகளை திருடியதாகச் சாமியாரை கைது செய்தனர். 

 

சேலம் மாவட்டம், தாரமங்கலத்தில் பழமையான வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் உள்ளூரைச் சேர்ந்த குமரவேல் என்பவர் பூசாரியாக உள்ளார். மே 20 ஆம் தேதி அவர் வழக்கமான பணிகளை முடித்துவிட்டு, கோயிலின் வெளிக் கதவை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார். மறுநாள் காலையில் கோயிலுக்கு அவர் சென்று பார்த்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, கோயிலின் உள் பிரகாரத்தில் இருந்த பழமையான பெருமாள் சிலை, பூதேவி சிலை 2, ஸ்ரீதேவி சிலை 2, ஆஞ்சநேயர், குழந்தை கிருஷ்ணர் சிலை ஆகிய ஏழு சிலைகள் மாயமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

 

இவை அனைத்தும் உலோகத்தால் ஆன ஒரு அடிக்கும் குறைவான உயரம் கொண்ட, பழமையான சிலைகள் ஆகும். இதுகுறித்து கோயில் தர்மகர்த்தா இனியனுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர் அளித்த புகாரின் பேரில் தாரமங்கலம் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். கோயில் அருகே பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். இதில், பெரிய சோரகையைச் சேர்ந்த சக்திவேல் (45) என்பவர், கோயில் பூட்டை உடைத்து சிலைகளைத் திருடிச் சென்றது தெரியவந்தது. அவருடைய வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 7 சிலைகளையும் காவல்துறையினர் மீட்டனர். 

 

விசாரணையில், சக்திவேல் உள்ளூரில் காவி உடை அணிந்து கொண்டு அருள்வாக்கு கூறும் சாமியாராகச் செயல்பட்டு வந்ததும், தனது வீட்டில் பூஜை நடத்தி குறி சொல்ல வசதியாக சாமி சிலைகளைத் திருடி இருப்பதும் தெரியவந்தது. கைதான சக்திவேலை, ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், பின்னர் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். சிலை திருட்டு நடந்த 5 நாள்களில் குற்றவாளியை கைது செய்த காவல்துறையினரை மாவட்ட எஸ்.பி., சிவக்குமார் பாராட்டினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

இறுதிக்கட்ட பரப்புரை; சேலத்தில் எடப்பாடி 'ரோட் ஷோ'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 Final campaign; Edappadi 'Road Show' in Salem

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தஙளது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரங்கஙளை நடத்தி வருகின்றனர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தேர்தல் பரப்புரை முடிவடைய இருக்கின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி 'ரோட் ஷோ' என்னும் வாகன பேரணியைத் தொடங்கியுள்ளார். சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கி சேலம் டவுன் வரை இந்த ரோட் ஷோ நடைபெறுகிறது. திறந்தவெளி வாகனத்தில் கை அசைத்தபடி வேட்பாளருடன் எடப்பாடி பழனிசாமி வாகன பேரணி நடத்தி வருகிறார். அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து வின்சென்ட், திருவள்ளுவர் சிலை, முதல் அக்ரகாரம், சின்ன கடைவீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று இறுதியாகக் கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.