
இந்தியாவில் மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வந்தது. மகாராஷ்ட்ராவில் 26 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தமிழகத்தில் மீண்டும் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசுகையில், ''தமிழகத்தில் கரோனா பரவல் என்பது அதிகரித்து வருகிறது. அதனைத் தடுக்க அத்தனை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். எங்களைப் பார்த்ததும் மாஸ்க் அணிகிறார்கள். வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறையினரைப் பார்த்தவுடனே மாஸ்க் அணிகிறார்கள். நான் பொதுமக்களிடம் கேட்கிறேன், நாங்க கரோனாவா? எங்களைப் பார்த்தவுடன் மாஸ்க் அணிந்தால், நாங்க என்ன கரோனாவா? நம்மில் ஒருவருக்கு கரோனா இருக்கும் என்பதால்தான் உங்கள் பாதுகாப்புக்கு மாஸ்க் அணிய சொல்கிறோம். ஆனால் மக்கள் அதிகாரிகளைப் பார்த்தால் மட்டுமே மாஸ்க் அணிகின்றனர். மக்கள் மாஸ்க் அணியும் பழக்கத்தை மறந்துவிட்டதே கரோனா பரவலுக்கு காரணம். 'டபுள் முடன்ட்' (Double Mutant) கரோனா இதுவரை தமிழகத்தில் கண்டறியப்படவில்லை'' என்றார்.