சேலம் இரும்பாலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டதற்கான பின்னணி தெரிய வந்துள்ளது.
தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரை அருகே உள்ள அழகர்சாமிபுரத்தைச் சேர்ந்தவர் சக்திவேல்(36). மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (சிஐஎஸ்எப்) காவலராகப் பணியாற்றி வந்தார். இவர், சேலம் இரும்பாலை வளாகத்தில் மனைவி சித்ரா மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில், டிச. 7 ஆம் தேதி சக்திவேல் இரும்பாலையின் முதல் நுழைவு வாயில் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தார். மாலை 3.10 மணியளவில் சக்திவேல் திடீரென்று தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதைப் பார்த்த சக சி.ஐ.எஸ்.எப். வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து இரும்பாலை காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. காவல் ஆய்வாளர் ஜெய்சல்குமார் மற்றும் காவலர்கள் நிகழ்விடம் விரைந்தனர். சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல்துறை விசாரணையில், சில நாள்களுக்கு முன்பு சக்திவேலுக்கும் அவருடைய மனைவி சித்ராவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் கோபித்துக்கொண்டு சித்ரா தனது குழந்தைகளுடன் தேனிக்குச் சென்று விட்டார். இதனால் சக்திவேல் கடந்த இரு நாள்களாக மன வருத்தத்தில் இருந்துள்ளார். மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் அவர் தற்கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
சக்திவேலின் மனைவி, உறவினர்கள் ஆகியோர் வியாழக்கிழமை (டிச. 8) சேலம் வந்தனர். உடற்கூராய்வு முடிந்த பின்னர் காவல்துறையினர் சக்திவேலின் சடலத்தை அவருடைய மனைவியிடம் ஒப்படைத்தனர். இது ஒருபுறம் இருக்க, தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.