Skip to main content

கடன்.. காவல்துறை தொல்லை? திமுக பெண் கவுன்சிலர் தற்கொலை!

Published on 12/07/2023 | Edited on 12/07/2023

 

The Reason behind DMK female councilor passes away case

 

நாமக்கல் அருகே, திமுக பெண் கவுன்சிலர் திடீரென்று கணவர், மகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆளுங்கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சி 13வது வார்டு திமுக கவுன்சிலராக இருந்தவர் தேவிபிரியா (46). இவருடைய கணவர் அருண்லால் (53). நகர திமுக பிரதிநிதியாக இருந்தார். அருண்லால், ராசிபுரம் பெரிய கடை வீதியில் சிறிய அளவில் தங்க நகைக்கடை நடத்தி வந்தார். இவர்களுக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள், பெங்களூருவில் ஐ.டி., நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இளைய மகள் மோனிஷா (17), ராசிபுரத்தில் உள்ள வித்யா மந்திர் பள்ளியில் பிளஸ்1 படித்து வந்தார். 

 

ஜூலை 12ம் தேதி காலை 7.30 மணி ஆகியும் அருண்லாலின் வீடு திறக்கப்படாததால், அப்பகுதியில் உள்ள உறவினர்கள் அவரது வீட்டுக்குச் சென்றுள்ளனர். கதவை தட்டினர். நீண்ட நேரம் முயற்சித்தும் பலன் இல்லை. கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது. சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு அருண்லால், கவுன்சிலர் தேவிபிரியா, மகள் மோனிஷா ஆகிய மூன்று பேரும் தூக்கில் தனித்தனியாக சடலமாக தொங்கிக் கொண்டிருந்தனர்.

 

அருண்லால் சவுராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்தவர். 13வது வார்டில் இந்த சமூகத்தினர்தான் பெரும்பான்மையாக உள்ளனர். சடலங்களைப் பார்த்து அந்தப் பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து ராசிபுரம் டி.எஸ்.பி. செந்தில்குமார் மற்றும் ஆய்வாளர் சுகவனம் உள்ளிட்ட காவல்துறையினர் நிகழ்விடம் வருவதற்குள் மூன்று சடலங்களும் தூக்கில் இருந்து கீழே இறக்கி வைக்கப்பட்டு இருந்தன. சடலங்களைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

 

ஆளுங்கட்சி பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாமக்கல் மாவட்ட திமுகவிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து உறவினர்களிடம் விசாரித்தோம். “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பே அருண்லால் கடனில் இருந்துள்ளார். தேர்தலின்போது தேர்தல் செலவுக்காகவும் அருண்லால் வட்டிக்கு கடன் வாங்கியிருந்தார். தேர்தலுக்குப் பிறகு எப்படியும் சம்பாதித்து விட முடியும் என்ற நம்பிக்கையில் அங்கே இங்கே கடன் வாங்கி செலவு செய்து வெற்றி பெற்று விட்டார்.

 

ஆனால், தேர்தலுக்குப் பிறகு நடந்ததே வேறு. வார்டுக்கு பெரிதாக நிதி ஒதுக்கப்படவில்லை. அப்படியே ஒதுக்கினாலும் கவுன்சிலர்களுக்கு எந்த ஆதாயமும் கிடைக்கவில்லை. இதனால் கடனை அடைக்க முடியாமல் அருண்லால் தடுமாறிக் கொண்டு இருந்தார். கடன்காரர்கள் தரப்பில் நெருக்கடி அதிகரிக்கவே, இப்படியொரு துயரமான முடிவை எடுத்துவிட்டனர். மூத்த மகள் பெங்களூருவில் இருந்ததால் அவர் மட்டும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்” என்கிறார்கள் உறவினர்கள். 

 

கடன் நெருக்கடி மட்டுமின்றி, அண்மைக் காலமாக அருண்லால் வேறு ஒரு சிக்கலிலும் சிக்கித் தவித்ததாகச் சொல்லப்படுகிறது. திருட்டு நகைகள் வாங்கியதாக வெளியூர் மாவட்ட காவல்துறையினர் அவரிடம் நகைகளை கேட்டு நெருக்கடி கொடுத்ததாகவும், இல்லாவிட்டால் கைது செய்து விடுவதாக அச்சுறுத்தியதாகவும் சொல்கின்றனர். இந்தப் பிரச்சனையில் இருந்து காப்பாற்றுமாறு திமுக முக்கியப்புள்ளி ஒருவரை அணுகியதாகவும், அதற்கு அவரோ இதுபோன்ற விஷயங்களில் உதவ முடியாது என்று கைவிரித்து விட்டதாகவும் கூறுகின்றனர். 

 

இது தொடர்பாக, விசாரணை அதிகாரியான ராசிபுரம் டி.எஸ்.பி. செந்தில்குமாரிடம் கேட்டோம். “அருண்லாலின் மனைவிக்கு தைராய்டு பிரச்சனை இருந்துள்ளது. மூத்த மகளுக்கு நரம்பியல் தொடர்பான பாதிப்புகளும், இருதய பாதிப்புகளும் இருந்துள்ளன. இதற்காக அருண்லால் பல இடங்களில் கடன் வாங்கித்தான் மருத்துவச் செலவுகளை செய்து வந்துள்ளார். கடன் நெருக்கடி இருப்பதாக உறவினர்களிடமும் அடிக்கடி கூறியிருக்கிறார். அதனால் மன உளைச்சலில் அவர்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம்” என்றார் டி.எஸ்.பி.

 

ஜூலை 11ம் தேதி மாலை 3 மணியளவில், பள்ளி விடுவதற்கு சற்று நேரத்திற்கு முன்பாகவே மகள் மோனிஷாவை அருண்லால் வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டாராம். அன்று மாலையே அவர்கள் மூவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. மகளுக்கு மட்டும் விஷம் கொடுத்து குடிக்க வைத்துவிட்டு, கவுன்சிலர் தேவிபிரியாவும், அருண்லாலும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் காவல்துறையினர், மூன்று பேருமே தூக்கிட்டுத்தான் தற்கொலை செய்து கொண்டனர் என்றும், கழுத்தில் கயிறு இறுக்கியதற்கான அறிகுறிகள் இருப்பதாகவும் கூறுகின்றனர்.

 

தகவல் அறிந்து மூத்த மகள் பகல் 2 மணியளவில் நாமக்கல் வந்து சேர்ந்தார். ராசிபுரத்தில் உடற்கூராய்வுக்காக வைக்கப்பட்டு இருந்த தாய், தந்தை, தங்கையின் சடலங்களைப் பார்த்து கதறித் துடித்தார். 

 

ஆளுங்கட்சி பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாமக்கல் மாவட்ட அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்