Skip to main content

நாமக்கல் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் கத்தியால் சரமாரியாகக் குத்தி கொலை! போலீசார் விசாரணை!

Published on 20/07/2022 | Edited on 20/07/2022

 

Real estate owner passed away near namakkal

 

நாமக்கல் அருகே, நள்ளிரவு நேரத்தில் காரில் வந்த ரியல் எஸ்டேட் தொழில் அதிபரை உடன் வந்த கூட்டாளிகள் கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

நாமக்கல் - திருச்சி சாலையில் ஜெய் நகரைச் சேர்ந்தவர் குமரேசன் (48). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. ஜூலை 18ம் தேதி இரவு, எம்.ஜி.ஆர். நகர் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் நண்பர்களுடன் சேர்ந்து மதுபானம் குடித்துள்ளார். நள்ளிரவு 12 மணியளவில் காரில் நண்பர்களுடன் சென்று கொண்டிருந்தார். 


நாமக்கல் - திருச்சி சாலையில் பழைய நீதிமன்ற கட்டடம் அருகே சென்று கொண்டிருந்தபோது, உடன் வந்த நண்பர்களுக்கும் குமரேசனுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த நண்பர்கள், அவரை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். பலத்த காயம் அடைந்த அவர் சாலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த சிலர், அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனையில், அவர் வழியிலேயே இறந்துவிட்டது தெரியவந்தது. 


இதுகுறித்து தகவல் அறிந்த குமரேசனின் மனைவி துர்கா தேவி அதிர்ச்சி அடைந்தார். அவர் அளித்த புகாரின்பேரில், நாமக்கல் நகர காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, குமரேசனின் சடலம் நாமக்கல் அரசு மருத்துவமனையில் கூராய்வு செய்யப்பட்டது. 


தொழில் போட்டி காரணமாக இந்த கொலை நடந்ததா?, பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததா? அல்லது பெண் விவகாரம் தொடர்பாக கொலை நடந்ததா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. 


நிகழ்விடம் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மற்றும் டாஸ்மாக் பாரில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்