Skip to main content

ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி கொன்ற நண்பன் உள்பட 4 பேர் கைது!

Published on 27/02/2020 | Edited on 27/02/2020

சேலத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரை பணம் பறிக்கும் நோக்கில் கடத்திக் கொலை செய்த நண்பன் உள்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.


சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள நாச்சம்பட்டி செலவடையைச் சேர்ந்தவர் சக்திவேல் (38). ரியல் எஸ்டேட் அதிபர். இவருடைய மனைவி ரேவதி (32). இவர்களுக்கு சிவபிரியா (15) என்ற மகளும், தர்ஷன் (12) என்ற மகனும் உள்ளனர். 


கடந்த 2018ம் ஆண்டு செப்.18ம் தேதியன்று அவசர வேலை இருப்பதாக மனைவியிடம் சொல்லிவிட்டு வெளியே சென்ற சக்திவேல், அதன்பின் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து ரேவதி, ஜலகண்டாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். 

real estate owner incident four persons arrested police

தமிழகம் முழுவதும் காணாமல் போனவர்களின் விவரம், அடையாளம் தெரியாத சடலங்களின் பட்டியல் சேகரித்து காவல்துறையினர் விசாரித்தனர். மேட்டுப்பாளையம் காவல் எல்லையில் 2018ம் ஆண்டு செப். 24ம் தேதியன்று அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது. விசாரணையில், அங்கே சடலமாகக் கிடந்தது சேலம் ரியல் எஸ்டேட் அதிபர் சக்திவேல்தான் என்பது தெரிய வந்தது.


அவருடைய செல்போன் அழைப்புகளை வைத்து விசாரித்தபோது, சம்பவத்தன்று சக்திவேலை, ஈரோடைச் சேர்ந்த அவருடைய நண்பர் சீனி என்கிற சீனிவாசன் (42) என்பவர் அழைத்துச் சென்றிருப்பது தெரிய வந்தது. 


அவரிடம் நடத்திய விசாரணையில் சக்திவேலை கடத்திச்சென்று பணம் பறிக்க முயன்றதும், அவர் பணம் தர மறுத்ததுடன் கத்தி கூச்சல் போட்டதால் சீனிவாசனும் அவருடைய நண்பர்களும் சக்திவேலை சரமாரியாக தாக்கிக் கொலை செய்திருப்பதையும் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அவரை தீர்த்துக்கட்டிய பிறகு சடலத்தை மேட்டுப்பாளையம் பகுதியில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.


இது தொடர்பாக சீனிவாசன் மற்றும் அவருடைய நண்பர்கள் புஷ்பராஜ் (38), திருப்பூர் வெங்கடேசன் (48), முருகபாண்டியன் (37) ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். சேலம் நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர்கள் நான்கு பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கொலையில் தொடர்புடைய மேலும் 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 


கடந்த 2018ல் மாயமான ரியல் எஸ்டேட் அதிபர் வழக்கில், காவல்துறையினர் தீவிர புலனாய்வு விசாரணை நடத்தியதன் மூலம் அவர் கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.