Skip to main content

துப்பாக்கி முனையில் இருவர் கடத்தல்!

Published on 19/04/2021 | Edited on 19/04/2021

 

real estate businessmans incident villuppuram police investigation

 

சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் சிவன். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று (18/04/2021) சென்னையைச் சேர்ந்த தனது நண்பர்கள் வெங்கடேசன், சம்பத், ராஜேந்திரா ஆகியோருடன் ரியல் எஸ்டேட் தொழில் சம்மந்தமாக நிலம் பார்ப்பதற்காகவும், அதை விலை பேசுவதற்காகவும், விழுப்புரம் மாவட்டத்திற்கு சிவன் வந்துள்ளார். பின்னர், விழுப்புரம் பைபாஸ் சாலை அருகில் உள்ள ஒரு உணவகத்தில் அனைவரும் உணவருந்தியுள்ளனர். 

 

அதன்பிறகு அவர்களைச் சந்திப்பதற்காக மதுரையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் நாகராஜ் என்பவர் அங்கு வந்துள்ளார். அவர் சிவனை தனியாக அழைத்துச் சென்று சிறிது நேரம் பேசியுள்ளார். பின்னர் ரியல் எஸ்டேட் விற்பனை செய்வதற்கான நிலத்தைப் பார்ப்பதற்காக நாகராஜ் அவரது காரில் சிவன் மற்றும் ராஜேந்திரா ஆகியோரை ஏற்றிக்கொண்டு திருக்கோவிலூர் அருகேயுள்ள கண்டாச்சிபுரம் சென்றுக் கொண்டிருந்தனர். 

 

அந்த காரை வெங்கடேசன், சம்பத் ஆகியோர் இன்னொரு காரில் பின் தொடர்ந்து சென்றனர். மாலை 05.00 மணியளவில் அவர்களது கார்கள் மழுவந்தாங்கல் காட்டுப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென்று இவர்களைப் பின்தொடர்ந்து காரில் வந்த மர்ம நபர்கள் ஐந்து பேர், நாகராஜ் ஓட்டிச் சென்ற காரை மடக்கி நிறுத்தினார்கள். பின் அதில் இருந்து பரபரப்போடு இறங்கிய ஐந்து நபர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியைக் காட்டி மிரட்டி சிவன் மற்றும் ராஜேந்திரா ஆகிய இருவரையும் தங்கள் காரில் கடத்திச் சென்றனர்.

 

அந்த காரை பின்தொடர்ந்து நாகராஜ் தனது காரில் சென்றுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வெங்கடேசன் உள்ளிட்டோர் கண்டாச்சிபுரம் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்துள்ளனர். அதைத் தொடர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன் அதிரடிப் படை காவல்துறையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

 

மேலும் சிவன், ராஜேந்திரா ஆகியோரின் செல்ஃபோன் எண்களில் காவல்துறையினர் தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது, சிவன் கூறியதாவது, "தன்னை யாரும் கடத்தவில்லை. தொழில் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகத் தங்களை அழைத்துச் சென்றுள்ளனர். தாங்களே வந்து விடுகிறோம்" என்று தெரிவித்துள்ளார். ஆனால் அவருடன் கடத்தப்பட்ட ராஜேந்திரா சேலம் அருகில் தங்களை கடத்திச் சென்றுவிட்டதாகக் கூறியுள்ளார். 

 

இதனால் குழப்பம் அடைந்த காவல்துறையினர் இருவரின் செல்ஃபோன் எண்களை வைத்து, சிக்னல் எந்தப் பகுதியைக் காட்டுகிறது என்பது குறித்து ஆய்வு செய்தனர். அதில் சிக்னல் கண்டாச்சிபுரம் காட்டுப்பகுதியைக் காட்டியுள்ளது. இதையடுத்து காவல்துறையினர், கண்டாச்சிபுரம் காட்டுப்பகுதியில் கடத்தப்பட்டவர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர். துப்பாக்கி முனையில் தொழிலதிபர் இருவர் கடத்தப்பட்டது உண்மையா?நாடகமா? என்பது கடத்தப்பட்ட இருவரும் மீட்கப்பட்ட பிறகு தெரியவரும். மேலும் இச்சம்பவம் மாவட்ட முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து ராமதாஸ் பிரச்சாரம்!

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
PMK Ramdas campaign supporting the candidate

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று முன்தினம் (22.03.2024) திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற பிரச்சார பொது கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு திருச்சி தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவையும், பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண் நேருவையும் ஆதரித்து வாக்கு சேகரித்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். இத்தகைய சூழலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (24.03.2024) மாலை திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு வண்ணாங்கோயில் என்ற இடத்தில் இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் முதல் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை தொடங்கியுள்ளார்.

இதற்கிடையே பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பட்டாளி மக்கள் கட்சிக்கு காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி அரக்கோணம் - பாலு, கடலூர் - தங்கர்பச்சான், திண்டுக்கல் - திலகபாமா, தர்மபுரி - செளமியா அன்புமணி, விழுப்புரம் - முரளி சங்கர், ஆரணி - கணேஷ் குமார், மயிலாடுதுறை - ம.க. ஸ்டாலின், சேலம் - அண்ணாதுரை, கள்ளக்குறிச்சி - தேவதாஸ்  காஞ்சிபுரம் - ஜோதி வெங்கடேஷ் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் விழுப்புரம் மக்களவைத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து கோவடி கிராமத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு ஒரு நல்ல வேட்பாளரான முரளி சங்கர் நிறைய படித்துள்ளார். 6 மொழிகளில் சரளமாக பேசுவார். மக்களை பற்றி சிந்திக்க கூடியவர். மக்களுக்காக பாடுபடக்கூடியவர். சிறந்த விளையாட்டு வீரரும் ஆவார்” எனத் தெரிவித்தார். 

Next Story

திரௌபதி அம்மன் கோவில் இன்று திறப்பு; போலீசார் குவிப்பு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Draupadi Amman temple opens today; Police build up

விழுப்புரம் திரௌபதி அம்மன் கோவில் இன்று திறக்கப்படுகிறது.

விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த திரௌபதி அம்மன் தீமிதி திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கோவிலுக்கு சீல் வைத்தது. கோவிலில் இதுவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை. எட்டு கட்டமாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இரு தரப்பும் நீதிமன்றத்தை நாடி இருந்தது.

இந்நிலையில் 22 ஆம் தேதியான இன்று கோவிலைத் திறந்து பூஜை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், ஒரு கால பூஜை மற்றும் பூசாரியால் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று அதிகாலை முதலே கோவிலை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்ற நிலையில், தற்போது கட்டிங் மெஷின் மூலம் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கோவிலைத் திறக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், பாதுகாப்புப் பணிக்காக அதிகப்படியான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.