சேலம் அருகே, ரியல் எஸ்டேட் அதிபர் கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அதிமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் உள்பட ஐந்து பேருக்கு தலா மூன்று ஆயுள் தண்டனை விதித்து சேலம் இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 23, 2018) பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள வடுகம்பட்டியை சேர்ந்தவர் துரைசாமி. விவசாயி. ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். தமிழக முன்னாள் டிஜிபி ராமானுஜத்தின் உறவினரான இவருக்கும் சங்ககிரி அருகே மாவலிபாளையம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான அதிமுகவை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருக்கும் நிலம் விற்பனை செய்ததில் தகராறு இருந்தது. இது தொடர்பாக அப்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, துரைசாமிக்கு சாதகமாக தீர்ப்பும் கிடைத்தது.
இந்நிலையில், கடந்த 2014, டிசம்பர் 17ம் தேதி காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற துரைசாமியை, உப்புப்பாளையம் பகுதியில் வைத்து ஒரு கும்பல் காரில் கடத்திச் சென்றது. அந்த கும்பல் துரைசாமியை மூன்று துண்டுகளாக வெட்டி கொலை செய்து, சடலத்தை பவானி ஆற்றில் வீசிவிட்டு தப்பியது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த கொலை வழக்கு தொடர்பாக ராமச்சந்திரன், அவருடைய கார் ஓட்டுநர் சண்முகம், குமாரபாளையத்தைச் சேர்ந்த கூலிப்படையினர் கருவாமணி, சுப்ரமணி, மஞ்சுநாதன் ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர். ஐவரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.
இந்த வழக்கின் விசாரணை, சேலம் மாவட்ட இரண்டாவது அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதுதரப்பு விசாரணையும் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ராமச்சந்திரன் உள்பட ஐந்து பேருக்கும் தலா மூன்று ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து அவர்கள் ஐந்து பேரும் பலத்த பாதுகாப்போடு கோவை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
கொலை குற்றவாளிகள் அனைவருக்கும் கடந்த 43 மாதங்களாக ஜாமின் வழங்காமல் தீர்ப்பு அளிக்கப்பட்டது சேலத்தில் இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கு! - அதிமுக பிரமுகர் உள்பட 5 பேருக்கு மூன்று ஆயுள் தண்டனை!
சார்ந்த செய்திகள்
Next Story
பதான்கோட் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் சுட்டுக் கொலை!
பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள இந்திய விமானப் படைத் தளத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டில் பயங்கரவாதிகள் ஊடுருவித் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு முதன்மை பயங்கரவாதியாகச் செயல்பட்ட ஜெய்ஷ்- ஏ- முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஷாஹித் லதீஃப் இன்று பாகிஸ்தானில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
பஞ்சாப் மாநிலம், பதான்கோட் பகுதியில் இந்திய விமானப் படைத் தளம் ஒன்று அமைந்துள்ளது. இந்த நிலையில் தான், கடந்த 2016 ஆம் ஆண்டு பயங்கரவாதிகள் விமானப் படைத்தளத்தில் ஊடுருவித் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, அங்கு வந்த இந்திய ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த மோதலில் 4 பயங்கரவாதிகள் பலியானார்கள். அதுமட்டுமல்லாமல், இந்த மோதலில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 7 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவம் அப்போது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.
இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், இந்த கொடூர தாக்குதலை ஜெய்ஷ் - ஏ - முகமது என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான் நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது. மேலும், இந்த அமைப்பில் உள்ள ஷாஹித் லதீஃப் என்பவர் தான் இந்த தாக்குதலுக்கு முதன்மையாகச் செயல்பட்டவர் என்பதும் தெரியவந்தது. ஷாஹித் லதீஃப் கடந்த 1994 ஆம் ஆண்டில், சட்டவிரோத நடவடிக்கை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த பிறகு, பாகிஸ்தானுக்கு 2010 ஆம் ஆண்டு நாடு கடத்தப்பட்டார். இவர் மீது இந்தியாவில் பல்வேறு சட்டவிரோத வழக்குகள் நிலுவையில் இருப்பதால் இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் தான், பாகிஸ்தானின் சியோல்கோட்டில் பயங்கரவாதி ஷாஹித் லதீஃப் இன்று அடையாளம் தெரியாத சில மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது குறித்து உள்நாட்டுச் செய்திகளில், பயங்கரவாதி ஷாஹித் லதீஃப்பை சுட்டுக் கொன்றவர்கள் உள்ளூர் கிளர்ச்சியாளர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Next Story
15 லட்சம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை; 500 கோடி ரூபாய் மோசடி வழக்கில் திருப்பம்!
சேலத்தில், ரியல் எஸ்டேட் அதிபர் வின் ஸ்டார் சிவக்குமார் உள்ளிட்ட 30 பேர் மீதான மோசடி வழக்கில் 15 லட்சம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை டான்பிட் நீதிமன்றத்தில் அக். 5ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.
சேலம் அழகாபுரத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சிவக்குமார். சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே, வின் ஸ்டார் இண்டியா சிட்டி டெவலப்பர்ஸ் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வந்தார். நிலத்தில் முதலீடு செய்தால் 11 மாதத்தில் இரட்டிப்பு விலை கொடுத்து நாங்களே நிலத்தை வாங்கிக் கொள்கிறோம் அல்லது அதற்கு நிகரான லாபத்தைக் கொடுத்து விடுவதோடு, அசல் முதலீட்டையும் கொடுத்து விடுகிறோம் என்று பல்வேறு விதமான கவர்ச்சி அறிவிப்புகளை வின் ஸ்டார் நிறுவனத்தார் வெளியிட்டனர். ஒருகட்டத்தில், எம்எல்எம் முறையிலும் ரியல் எஸ்டேட் தொழிலை நடத்தினர்.
கவர்ச்சிகரமான அறிவிப்புகளை நம்பி 4000க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் வின் ஸ்டார் நிறுவனத்தில் முதலீடுகளை கொட்டினர். இத்துடன் நில்லாமல் வின் ஸ்டார் பெயரில் ஜவுளிக்கடை, உள்ளூர் கேபிள் டிவி, ஸ்வீட் கடைகள், ஜவுளிக்கடை, பட்டாசு தொழில், நெல்லிச்சாறு விற்பனை உள்ளிட்ட தொழில்களிலும் இறங்கினார். ரியல் எஸ்டேட் தொழிலில் ஓரளவு லாபம் பார்த்த முதலீட்டாளர்கள் அவர் தொடங்கிய மற்ற தொழில்களிலும் முதலீடு செய்தனர். இந்நிலையில், திடீரென்று சிவக்குமார் பல கோடி ரூபாய் பணத்தை சுருட்டிக்கொண்டு ஓட்டம் பிடித்தார். முதிர்வு காலத்திற்குப் பிறகும் முதலீட்டாளர்களுக்கு பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றினார்.
இதையடுத்து அவர் மீது 1686 முதலீட்டாளர்கள் புகார் அளித்தனர். இதுகுறித்து, கடந்த 2017ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்த சேலம் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் சிவக்குமாரை கைது செய்தனர். அவர் உட்பட 30 பேருக்கு இந்த மோசடியில் பங்கிருப்பதும், 500 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்திருப்பதும் தெரிய வந்தது. முதலீட்டாளர்களிடம் பெற்ற பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடுவதாக நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததை அடுத்து, கடந்த 2018ம் ஆண்டு அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இது ஒருபுறம் இருக்க, கோவையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி தங்கராசு தலைமையில் இந்த வழக்கை விசாரிக்க ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவின் விசாரணையில், முதலீட்டாளர்களிடம் சுருட்டிய கோடிக்கணக்கான ரூபாய் பணத்தைக் கொண்டு சிவக்குமார் தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் நிலங்களையும், வீடுகளையும் வாங்கிக் குவித்து இருப்பது தெரிய வந்தது. பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை தரப்பில் விசாரணை முழுமையாக நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், தற்போது சிவக்குமார் உள்ளிட்ட 30 பேர் மீதும் கோவையில் உள்ள டான்பிட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இதற்காக ஒரு நபருக்கு 50 ஆயிரம் பக்கங்கள் வீதம், குற்றம் சாட்டப்பட்டுள்ள 30 பேருக்கும் மொத்தம் 15 லட்சம் பக்கங்களில் குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டு உள்ளது. குற்றப்பத்திரிகை ஆவணங்களை நகல் எடுப்பதற்காகவே 14 லட்சம் ரூபாய்க்கு தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் விடப்பட்டது.
இந்த வழக்கு, டான்பிட் நீதிமன்றத்தில் அக். 5ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அப்போது நீதிபதி முன்பு குற்றப்பத்திரிகை ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்காக 15 லட்சம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை ஆவணங்களும் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் சேலத்தில் இருந்து அக். 2ஆம் தேதி டான்பிட் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தமிழகத்தில், ஒரு மோசடி வழக்கில் முதன்முதலாக 15 லட்சம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவது வரலாற்றில் இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.