Skip to main content

இருதரப்பினரிடையே மோதல் அபாயம்; அய்யனாரப்பன் கோயிலுக்கு பூட்டு!

Published on 27/05/2023 | Edited on 27/05/2023

 

Re-opening of the sealed Ayyanarappan temple

 

இடைப்பாடி அருகே, அய்யனாரப்பன் கோயில் நிர்வாகப் பொறுப்பை ஏற்று நடத்துவதில் இரு தரப்பினரிடையே மோதல் அபாயம் ஏற்பட்டதை அடுத்து, அந்தக் கோயிலை பூட்டி வருவாய்த்துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.

 

சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே உள்ள குருக்கப்பட்டி கல்மேட்டூரில் அய்யனாரப்பன் கோயில் உள்ளது. இந்தக் கோயில், கடந்த 3 ஆண்டுக்கு முன்பு புனரமைக்கப்பட்டது. இந்தக் கோயிலின் நிர்வாகப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக இரு தரப்பினரிடையே பல ஆண்டாக மோதல் இருந்து வருகிறது. இது தொடர்பாக இரு தரப்பினரும் அளித்த புகாரின்பேரில் பூலாம்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். 

 

மே 22ம் தேதி வட்டாட்சியர் பானுமதி தலைமையில், இரு தரப்பினரையும் வருவாய்த்துறை அலுவலர்கள் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், சங்ககிரி கோட்டாட்சியர் முன்னிலையில் மீண்டும் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், அதுவரை யாரும் கோயிலுக்குள் நுழையக் கூடாது என்றும் வருவாய்த்துறை உத்தரவிட்டது. 

 

இந்நிலையில், மே 24ம் தேதி ஒரு தரப்பினர், திடீரென்று கோயிலுக்குள் நுழைந்து, தவ பூஜை நடத்தப் போவதாகக் கூறினர். இதற்கு, எதிர் தரப்பினர் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால் அங்கு மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வட்டாட்சியர் பானுமதி, பூலாம்பட்டி காவல் ஆய்வாளர் சந்திரலேகா, எஸ்.ஐ. அமிர்தலிங்கம் மற்றும் காவல்துறை, வருவாய்த்துறையினர் பிரச்சனைக்குரிய கோயிலுக்கு விரைந்தனர். அவர்கள் கோயிலை இழுத்துப் பூட்டி 'சீல்' வைத்தனர். மேலும், அசம்பாவிதங்களைத் தடுக்க காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது. 

 

இதையடுத்து, மே 25ம் தேதி ஒரு தரப்பினர், இந்து முன்னணி நிர்வாகிகளுடன் கோயிலுக்கு வந்து, நுழைவு வாயில் அருகே தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு வருவாய்த்துறை அதிகாரிகள் தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது, கோயிலில் இரு தரப்பினரும் பூஜை செய்து கொள்ளலாம் என்றும், ஒரு பிரிவினர் பூஜை நடத்தும்போது மற்றொரு பிரிவினர் கோயில் பூஜை உள்ளிட்ட எந்த விசேஷமும் நடத்தக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டது. பூஜை நடத்துவது தொடர்பாக வருவாய்த்துறையிடம் முன்அனுமதி பெற வேண்டும் என்றும் கூறப்பட்டது. 

 

அதிகாரிகளின் இந்த முடிவுக்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். மறு உத்தரவு வரும் வரை இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவையே பின்பற்றுவதாகவும் ஒப்புக்கொண்டனர். 

 

இதையடுத்து, கிராம நிர்வாக அலுவலர் மாரிமுத்து, மே 25ம் தேதி மாலையில், அய்யனாரப்பன் கோயில் பூட்டை திறந்து வைத்தார். இதனால் அங்கு பதற்றம் தணிந்து சகஜ நிலை திரும்பி இருக்கிறது. எனினும், முன்னெச்சரிக்கைக்காக காவல்துறை பாதுகாப்பு மட்டும் விலக்கிக் கொள்ளப்படவில்லை.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிக்கிய 6 கோடி ரூபாய் தங்கம்! - அதிரடியில் தேர்தல் பறக்கும் படை 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
6 crores of gold trapped! Election Flying Squad in action
மாதிரி படம் 

சேலம் அருகே, உரிய ஆவணங்களின்றி கூரியர் நிறுவன வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 6.20 கோடி ரூபாய் தங்க நகைகளைத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், சேலத்தை அடுத்துள்ள மல்லூர் பிரிவு சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரபீக் அஹ்மது தலைமையில் அலுவலர்கள் மார்ச் 23 ஆம் தேதி காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, சேலத்திலிருந்து வந்த தனியார் கூரியர் நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் இருந்த 3 சாக்கு மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தனர். அவற்றில் 39 நகைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பெட்டிகளில் 6.20 கோடி ரூபாய் மதிப்பிலான 29 கிலோ புதிய தங்க நகைகள் இருந்தன. இந்த நகைகளைக் கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

அவற்றை, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துராமலிங்கத்திடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து அவர் கூறுகையில், ''பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் சேலத்தில் இருந்து திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள நகைக் கடைகளுக்குக் கொண்டு செல்லப்படுவதற்காக கூரியர் நிறுவனத்தின் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் இதற்கான உரிய ஆதாரங்கள் இல்லாததால் நகைகளைப் பறிமுதல் செய்து, அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனம், இந்த நகைகளுக்கான ஆதாரங்களைக் காண்பித்துவிட்டு பெற்றுச் செல்லலாம்'' என்றார். 

Next Story

திரௌபதி அம்மன் கோவில் இன்று திறப்பு; போலீசார் குவிப்பு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Draupadi Amman temple opens today; Police build up

விழுப்புரம் திரௌபதி அம்மன் கோவில் இன்று திறக்கப்படுகிறது.

விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த திரௌபதி அம்மன் தீமிதி திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கோவிலுக்கு சீல் வைத்தது. கோவிலில் இதுவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை. எட்டு கட்டமாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இரு தரப்பும் நீதிமன்றத்தை நாடி இருந்தது.

இந்நிலையில் 22 ஆம் தேதியான இன்று கோவிலைத் திறந்து பூஜை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், ஒரு கால பூஜை மற்றும் பூசாரியால் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று அதிகாலை முதலே கோவிலை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்ற நிலையில், தற்போது கட்டிங் மெஷின் மூலம் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கோவிலைத் திறக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், பாதுகாப்புப் பணிக்காக அதிகப்படியான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.