RBI warns public about mobile app loans

இணையதளம் மற்றும் மொபைல் ஆப்கள் வழியாகப் பல்வேறு நிறுவனங்கள் பொதுமக்களுக்குக் கடன்கள் வழங்குகின்றன. கடன் வாங்கபவர், கடன் தருபவரை நேரில் பார்க்காமலே இந்த மொபைல் ஆப்கள் மற்றும் இணையதளங்கள், கடன் கேட்பவரின் பான் கார்டு எண், ஆதார் எண்ணை வாங்கி அதன் மூலமாகக் கடன் கேட்பவரின் கடந்த கால ‘சிபில் ஸ்கோர்களை’ கண்காணித்து, அதன் வழியாக முதலில் குறைந்த தொகையைக் கடனாக கேட்பவரின் வங்கிக் கணக்குக்கு அனுப்பிவைக்கின்றன. அதனைத் தவணை முறையில் செலுத்தியபின், திருப்பிச் செலுத்தும் முறையை வைத்து, அதிக கடன் தொகையை வழங்குகின்றன.

Advertisment

அதேநேரத்தில் பல மொபைல் ஆப் மற்றும் இணையதளங்கள் மூலம் கடன் தரும் நிறுவனங்கள், 3 ஆயிரம் ரூபாய் கடன் வழங்க, சேவைக்கட்டணம் என்கிற பெயரில் 500 ரூபாய், வட்டியாக 150 ரூபாய் மற்றும் மறைமுகக் கட்டணம் ஜி.எஸ்.டி எனப் போட்டு சுமார் ஆயிரம் வரை எடுத்துக்கொண்டே மீதித் தொகையை வழங்குகின்றன.

Advertisment

பலரும் கடன் கேட்டதும் கிடைக்கிறதே என இதில் சிக்கிக்கொண்டுள்ளனர். பணத்தைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் மொபைலில் உள்ள தகவல்களைத் திருடி, அதன்வழியாக வாட்ஸ்அப் மற்றும் ஃபோன் நம்பர்களுக்கு, இன்னார் கடன் வாங்கினார், கட்டவில்லை எனத் தகவல் அனுப்புவது. மொபைல் கேலரியில் உள்ள புகைப்படங்களைத் திருடி மிரட்டுகின்றனர் என்கிற புகார்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், இதுதொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆப் மூலமாகக் கடன் வழங்கும் நிறுவனங்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறுகிய காலத்தில் கடன் கிடைப்பதாகக் கருதி அங்கீகாரம் இல்லாத மொபைல் ஆப்கள் மூலம் கடன்பெற வேண்டாம். ஆப் மூலமாக சில நிறுவனங்கள் அதிக வட்டி, மறைமுகக் கட்டணம் எனக் கடன் வழங்குவதில் முறைகேடு செய்வதாகப் புகார்கள் வந்துள்ளன. மேலும், கடனை வசூலிக்கவும் ஆப் நிறுவனங்கள் மோசமான நடைமுறைகளைப் பயன்படுத்துவதும் தெரியவந்துள்ளது. அப்படி அதிக வட்டி, மறைமுகக் கட்டணத்துடன் கடன் வழங்கும் ஆப்கள் குறித்து உடனடியாகக் காவல்துறையில் பாதிக்கப்படும் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.

மேலும், பொதுமக்களுக்கு கடன் வழங்க அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் தொடர்பான விவரங்களை ரிசர்வ் வங்கி இணையதளத்தில் பொதுமக்கள் தெரிந்துகொள்ளலாம் என்று கூறியுள்ளது.