A rat's head in a beetroot; A shocking incident happened to a vegetarian

Advertisment

ஆரணியில் துக்க நிகழ்வுக்காக சைவ ஓட்டலில் வாங்கிய சாப்பாட்டில் எலியின் தலை இருந்ததால் வாங்கியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகில் இருக்கும் சைவ ஓட்டலில் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த நபர், தனது உறவினர் இறப்பில் பங்கேற்ற உறவினர்களுக்கு 35 சைவ சாப்பாடுகள் ஆர்டர் கொடுத்துள்ளார். அதன் படி அவரின் வீட்டிற்குச் சாப்பாடு அனுப்பப்பட்டது.

வீட்டில் உறவினர்கள் சாப்பிடும் பொழுது பீட்ரூட்டில் எலியின் தலை இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். எலியின் தலையைப் பார்ப்பதற்கு முன்பு சாப்பிட்டவர்கள் சிலர் வாந்தியும் எடுத்துள்ளனர். உடனே, வாங்கிய உணவை எடுத்துக்கொண்டு அந்த ஓட்டலுக்குச் சென்று நீங்கள் கொடுத்த உணவில் எலியின் தலை இருந்ததாக முறையிட்ட பொழுது அதனை ஓட்டல் ஊழியர்கள் ஏற்கவில்லை. 6 மணிநேரத்திற்கு முன் கொடுத்தனுப்பிய உணவிற்கு இப்பொழுது வந்து உணவில் எலித்தலை இருக்கிறது என்று சொல்வது முறையல்ல என்று கூறவும் இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது.

Advertisment

இதனை அடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து எலியின் தலை இருந்த சாப்பாட்டை உணவு பரிசோதனை அதிகாரிகளுக்குப் பரிசோதனை செய்ய அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து உணவு வாங்கியவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.