Advertisment

ரேசன் கடைகளில் அரிசி வழங்குவதை நிறுத்தக்கூடாது - ராமதாஸ்

rs

மத்திய அரசு வலியுறுத்தினாலும் அதை ஏற்காமல் தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள அனைவருக்குமான பொதுவினியோகத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார்.

Advertisment

இது குறித்த அவரதுஅறிக்கை: ‘’நியாயவிலைக்கடை மூலம் அரிசி, சர்க்கரை போன்ற பொருட்களை வழங்குவதை நிறுத்தி விட்டு, அவற்றுக்கு பதிலாக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் மானியத்தை செலுத்தும் திட்டத்தை செயல்படுத்தும்படி தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது. பொதுவினியோகத் திட்டத்தை சீரழிக்கும் நோக்கம் கொண்ட இந்த யோசனை கண்டிக்கத்தக்கதாகும்.

Advertisment

மத்திய அரசின் சார்பில் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், பொது வினியோகத் திட்டத்தின்படி அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதில் முறைகேடுகள் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும், அரிசி, சர்க்கரை போன்ற பொருட்களை மானிய விலையில் வழங்குவதற்கு பதிலாக, அதற்கான மானியத்தை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தும் திட்டத்தை செயல்படுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த யோசனை செயல்படுத்தப்பட்டால் இந்தியாவில் பொது வினியோக முறை என்ற உன்னதமானத் திட்டம் முற்றிலுமாக அழிந்து போய்விடும்.

அரிசி மற்றும் சர்க்கரையை மானிய விலையில் வழங்குவதற்கு பதிலாக நேரடி மானியத் திட்டத்தை செயல்படுத்தும்படி மத்திய அரசு வலியுறுத்துவது இது புதிதல்ல. மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமைந்ததுமே பொதுவினியோகத்திட்டம் மற்றும் இந்திய உணவுக் கழகத்தை சீரமைப்பது குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக முன்னாள் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் சாந்தகுமார் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அக்குழு 2015-ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் தேதி அளித்த அறிக்கையில், உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்படி பயனடைபவர்களின் எண்ணிக்கையை 67 விழுக்காட்டிலிருந்து 40 விழுக்காடாக குறைக்க வேண்டும்; நியாய விலைக்கடைகளில் அரிசி, சர்க்கரை போன்ற உணவுப் பொருட்களை வழங்குவதை நிறுத்திவிட்டு, அதற்கான மானியத்தை சம்பந்தப்பட்ட குடும்ப அட்டை தாரர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்துவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.30,000 கோடியை மிச்சப்படுத்தலாம் என பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அதன்படியே அரிசி, சர்க்கரைக்கு பதிலாக மானியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தும்படி மத்திய அரசு கூறியிருக்கிறது.

அரிசி, சர்க்கரைக்கு மாற்றாக நேரடி மானியம் வழங்கும் திட்டம் நடைமுறையில் சாத்தியமற்றது ஆகும். தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கையைப் பொறுத்து குறைந்தது 12 கிலோ முதல் 50 கிலோ வரை அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து கிலோவுக்கு ரூ.20 வரை மானியம் வழங்குகின்றன. சர்க்கரைக்கு கிலோவுக்கு ரூ.6 வரை மானியம் வழங்கப்பட்டு வருகிறது. வெளிச்சந்தையில் சாதரண ரக அரிசி கிலோ ரூ.42 முதல் ரூ.50 வரையும், சர்க்கரை கிலோ ரூ.40-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அவ்வாறு இருக்கும் போது நேரடி மானியம் வழங்கப்பட்டால், 20 ரூபாயை வைத்துக் கொண்டு ஒரு கிலோ அரிசி வாங்குவதோ, ரூ.31&க்கு ஒரு கிலோ சர்க்கரை வாங்குவதோ சாத்தியமற்றது. இது மக்களின் சுமையை அதிகரிக்கும்.

அதுமட்டுமின்றி, மத்திய அரசின் நேரடி மானியத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் பொது வினியோகத் திட்டம், நேரடிக் கொள்முதல் திட்டம் ஆகிய இரண்டுமே ஒழிக்கப்பட்டு விடும். அத்தகைய சூழலில் ஏழை மக்கள் வெளிச்சந்தையில் அதிக விலை கொடுத்து உணவு தானியங்களை வாங்கும் நிலையும், உழவர்கள் தங்களின் விளை பொருட்களை தனியாரிடம் குறைந்த விலைக்கு விற்க நேரிடும். அப்படி ஒரு நிலை உருவானால் ஏழைகளும், விவசாயிகளும் வாழ முடியாத நிலை ஏற்பட்டு விடும்.

இந்தியாவிலேயே பொதுவினியோகத்திட்டம் தமிழகத்தில் தான் மிகவும் சிறப்பாக செயல்படுத்தப் பட்டு வருகிறது என்று உச்சநீதிமன்றமே பாராட்டியிருக்கிறது. நேரடி மானியத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் உன்னதமான பொதுவினியோகத் திட்டம் சீரழிக்கப்பட்டு விடும். ஏழை மக்களுக்கு இப்போதுள்ள உணவுப் பாதுகாப்பு இல்லாமல் போய்விடும். எனவே, அரிசி, சர்க்கரை ஆகியவற்றுக்கு பதிலாக நேரடி மானியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தும்படி மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தக் கூடாது. மத்திய அரசு வலியுறுத்தினாலும் அதை ஏற்காமல் தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள அனைவருக்குமான பொதுவினியோகத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.’’

ramadas
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe