Skip to main content

ரேஷன் கடை விற்பனையாளர் பணியிடங்கள்; ஒரு இடத்திற்கு நூறு பேர் போட்டி

Published on 20/12/2022 | Edited on 20/12/2022

 

 Ration Shop Salesman Jobs- Hundred people conflict for one place

 

ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 233 விற்பனையாளர்கள் மற்றும் 10 கட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மொத்தம் 243 பணியிடத்திற்கு ஈரோடு மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 12,137 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் எம்.சி.ஏ, எம்.பி.ஏ, பி.இ, எம்.இ போன்ற முதுகலைப் பட்டதாரிகள்தான் அதிக அளவில் விண்ணப்பித்திருந்தனர். 

 

இவர்களுக்கான நேர்காணல் சென்ற 15 ஆம் தேதி ஈரோடு திண்டலில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை மையத்தில் தொடங்கியது. தொடர்ந்து வரும் 24ஆம் தேதி வரை இந்த நேர்காணல் நடைபெற உள்ளது. ஒவ்வொரு நாளும் 1,500 பேர் நேர்காணலில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணை பதிவாளர் ராஜ்குமார் தலைமையில் நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்து வருகிறது. 20ம் தேதியும் நேர்காணல் நடைபெற்றது. என்ஜினீயரிங் பட்டதாரிகள் அதிக அளவில் குவிந்திருந்தனர்.

 

செவ்வாய்க்கிழமை நடந்த நேர்காணலில் பெண்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் பங்கேற்றிருந்தனர். அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. வரும் 24ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் அதன் பிறகு சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைன் மூலம் எழுத்து தேர்வு நடைபெற உள்ளது.

 

தமிழகம் முழுக்க இதேபோல் ஒரு பணியிடத்திற்கு நூறு பேர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.