திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே வெங்கங்குடி ஊராட்சியில் உள்ள எழில் நகர் பகுதியில் ரேஷன் அரிசியைக் கடத்தி அதனை மாவாக்கி திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது பிற மாவட்டங்களுக்கும் விற்பனை செய்வதாக திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு வந்த தகவலின் அடிப்படையில் திருச்சி மாவட்டவட்ட வழங்கல் அதிகாரி மணிகண்டன் தலைமையில் மணச்சநல்லூர் வருவாய் வட்டாட்சியர் சக்திவேல் முருகன், மணச்சநல்லூர் வட்ட வழங்கல் அதிகாரி மரகதவல்லி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தரக்கட்டுப்பாட்டு மேலாளர் வனிதா உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். அப்போது அரிசி கடத்தி வைத்திருந்த ஆலையில் பணியாற்றிய பணியாளர்கள், அதிகாரிகளைக் கண்டவுடன் தப்பிச்சென்றனர்.
இதனையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் கீழ் திருச்சி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மாவு அரவை செய்யும் கூடத்தில் ஆய்வு செய்தபோது சுமார் 15டன் ரேஷன் அரிசி, 10 டன் கோதுமை மற்றும் 5 டன் ரேஷன் அரிசியை அரைத்து விற்பனைக்குத் தயார் நிலையில் இருந்த மாவு மூட்டைகள், கடத்தலுக்கு பயன்படுத்திய வேன், எடை மெஷின், தையல் மிஷின், அரவை இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து, ஆலையை பூட்டி சீல் வைத்தனர்.
ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக இந்தப் பகுதிக்கு எப்படி வந்தது, இந்த ஆலைக்கு உரிமையாளர் யார் என்பது உள்ளிட்ட விவரங்கள் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.