Skip to main content

ரேஷனில் அரிசி பெறும் கார்டுதாரர்களுக்குக் கூடுதலாக 5 கிலோ அரிசி! சேலம் ஆட்சியர் தகவல்!!

Published on 02/06/2020 | Edited on 02/06/2020

 

Salem Collector Information


ரேஷனில் அரிசி பெறும் கார்டுதாரர்களுள் நபர் ஒருவருக்குக் கூடுதலாக 5 கிலோ அரிசியும், நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ள கார்டுதாரர்களுக்கு வழக்கத்தைவிட இருமடங்கு அரிசியும் விலையின்றி வழங்கப்படும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.
 

 

சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் கூறியதாவது:

சேலம் மாவட்டத்தில், கரோனா நோய்த்தொற்று பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு ரேஷன் கார்டுதாரர்களுக்கு 1,000 ரூபாய் நிவாரண நிதியுதவி வழங்கியது. அதன்படி, மாவட்டம் முழுவதும் உள்ள 9,71,043 ரேஷன் கார்டுகளுக்கும் ஆயிரம் வீதம் மொத்தம் 97 கோடியே 10 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டு உள்ளது.

மேலும், கடந்த ஏப்ரல், மே மாதங்களில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் ஆகிய அத்தியாவசியப் பொருள்கள் இலவசமாக வழங்கப்பட்டன. 

இந்நிலையில், ஜூன் மாதமும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளதால், ரேஷன் கார்டுதாரர்களுக்கு நடப்பு மாதத்திற்கான அத்தியாவசிய உணவுப்பொருள்களையும் இலவசமாக வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 
 


அத்துடன். ரேஷன் கார்டுதாரருக்கு ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், அரிசி பெறக்கூடிய கார்டுதாரர்களுக்கு நபர் ஒருவருக்கு கூடுதலாக 5 கிலோ அரிசியும், நான்கு மற்றும் அதற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ள கார்டுதாரர்களுக்கு ஏற்கனவே அவர்கள் பெற்றுவரும் அரிசியின் அளவை விட இருமடங்காக உயர்த்தியும் விலையின்றி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1,577 ரேஷன் கடைகள் மூலம் 8,56,106 அரிசி கார்டுதாரர்களுக்கும், 41,630 சர்க்கரை கார்டுதாரர்ளுக்கும், 2,941 காவலர் ரேஷன் கார்டுகளுக்கும், 40,056 முதியோர் உதவித்தொகை பெறும் கார்டுதாரர்களுக்கும், 496 அன்னபூர்ணா கார்டுதாரர்களுக்கும், 79,819 ஏஏஒய் திட்ட கார்டுதாரர்களுக்கும், 887 இலங்கை அகதிகள் கார்டுகளுக்கும் என மொத்தம் 10 லட்சத்து 21,935 ரேஷன் கார்டுதாரர்களுக்கு கடந்த ஏப்ரல், மே மாதத்திற்கான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் ஏப்ரல், மே மாதங்களில் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.

இந்த கார்டுதாரர்களுக்கு நடப்பு ஜூன் மாதமும் அத்தியாவசியப் பொருள்கள் இலவசமாக வழங்கும் பணி திங்கள்கிழமை (ஜூன் 1) முதல் தொடங்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஏற்கனவே டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருள்கள் வாங்க வரும் கார்டுதாரர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்றும், ரேஷன் கடைகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.  
 

http://onelink.to/nknapp


சேலம் மாவட்டத்தில் சீலநாயக்கன்பட்டி, மெய்யனூர், ஆத்தூர், கெங்கவல்லி, ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி, வாழப்பாடி, மேட்டூர் ஆகிய 9 இடங்களில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் இருந்து அத்தியாவசியப் பொருள்கள் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. இவ்வாறு ஆட்சியர் ராமன் கூறினார்.

முன்னதாக அவர், சேலம் சத்திரத்தில் உள்ள நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்குகளில் இருந்து அத்தியாவசியப் பொருள்கள் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுவதைத் திங்களன்று நேரில் ஆய்வு செய்தார். அத்தியாவசியப் பொருள்கள், கார்டுதாரர்களுக்கு தடையின்றி உடனுக்குடன் கிடைத்திட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
issue of ration rice should be prevented says Edappadi Palaniswami

ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், ரேஷன் அரிசி கடத்தலுக்கு எதிராக செயல்பட்ட வழக்கறிஞர் வீட்டில் அரிசி கடத்தல் கும்பல் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்ட ஆட்சியில் ஏற்கெனவே போதைப்புழக்கமும், அதுசார்ந்த குற்றங்களும் சர்வ சாதாரணம் ஆகிவிட்ட நிலையில், தற்போது வெடிகுண்டு கலாச்சாரமும் தலைவிரித்தாடுகிறது.

மேலும், தமிழ்நாட்டில் இருந்து ரேஷன் அரிசி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதும் இந்த ஆட்சியில் தொடர்கதையாகிவிட்டது. மாநிலத்தில் நடக்கும் எந்த விஷயத்திலும் கட்டுப்பாடு இல்லாத முதல்வராக இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ரேஷன் கடத்தல் கும்பல் மீது துரிதமாக சட்ட நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழா வண்ணம் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்குமாறும், ஏழை எளிய மக்களின் பசியாற்றும் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுத்து நிறுத்துமாறும் முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

அரிசி மூட்டைகளுடன் லாரியை கடத்திய கும்பல் கைது

Published on 18/09/2023 | Edited on 18/09/2023

 

Gang arrested for hijacking lorry with bags of rice

 

விழுப்புரம் மாவட்டம் அரியூர் பகுதியை சேர்ந்தவர் தனக்கோடி என்பவரின் மகன் வெங்கடேசன். இவர் தமிழ்நாடு வாணிப கழக சேமிப்புக் கிடங்கில் சரக்கு ஏற்றி இறக்கும் பணிக்கு தனக்கு சொந்தமான லாரியை ஒப்பந்த அடிப்படையில் அனுப்பியுள்ளார். அந்த லாரியில் டிரைவராக பணி செய்து வருபவர் சையது சுல் பிக்கர். இவர் நேற்று முன்தினம் முண்டியம்பாக்கம் ரயில்வே நிலையத்திற்கு ரயில் மூலம் வந்த ரேஷன் அரிசி 600 மூட்டைகளை தனது லாரியில் ஏற்றிக்கொண்டு சென்று அதை திண்டிவனம் சந்தை மேட்டுப்பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்கில் இறக்குவதற்காக கொண்டு வந்து நிறுத்தினார்.

 

இரவு நேரம் என்பதால் இறக்குவதற்கு ஆட்கள் இல்லை அதனால் மறுங்கால் காலை இறக்கி விடலாம் என்று லாரியை சேமிப்பு கிடங்கு முன்பு நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றுவர் மறுநாள் காலை அங்கு சென்று பார்த்தபோது அரிசி மூட்டைகளுடன் லாரி மாயமாகி இருந்தது. அதிர்ச்சியடைந்த லாரி டிரைவர் இது குறித்து லாரி முதலாளி வெங்கடேசனுக்கு தகவலளித்தார். அவர் லாரியை கண்டுபிடித்து தருமாறு திண்டிவனம் காவல்துறையில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் திண்டிவனம் காவல் உதவி ஆய்வாளர் ஐயப்பன் தலைமையில் போலீசார் தனிப்படை அமைக்கப்பட்டு கடத்தப்பட்ட அரிசி லாரியை கண்டுபிடிப்பதற்காக தீவிரமாக தேடி வந்தனர்.

 

அதன் பொருட்டு போலீசார் லாரியில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் எனும் கருவி மூலம் லாரியை தேடும் பணியில் ஈடுபட்டனர். அதன் மூலம் கடத்தப்பட்ட லாரி பெரிய பேரம்பட்டு பகுதியில் நிற்பது கண்டறியப்பட்டது. அங்கு சென்று பார்த்தபோது சேற்றில் லாரி சிக்கி நின்றிருந்தது. அதில் இருந்த 600 அரிசி மூட்டைகளில் 520 மூட்டைகள் காணவில்லை. 80 மூட்டைகள் மட்டுமே அதில் இருந்தன. இதன் மூலம் கடத்தப்பட்ட அரிசி லாரி சேற்றில் சிக்கியதும் வேறு ஒரு லாரியை கொண்டு வந்து அரிசி மூட்டையை அதில் மாற்றி ஏற்றி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையை துரிதப்படுத்தினர். நெடுஞ்சாலை தேசிய நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் அரிசி கடத்திச் செல்லப்பட்ட லாரி கர்நாடக மாநில சூளகிரி பகுதியில் இருப்பதை கண்டுபிடித்தனர்.

 

அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் அரிசி மூட்டையுடன் கடத்தப்பட்ட லாரியை கண்டுபிடித்து கைப்பற்றினர். லாரியை கடத்திச் சென்றதாக விக்கிரவாண்டி அடுத்துள்ள அய்யனாம்பாளையம் இந்திய ராஜ் அவரது கூட்டாளிகள் கந்தன், பொன்னுசாமி, விழுப்புரம், வண்டி மேடு பகுதியைச் சேர்ந்த சையது முஸ்தபா, இவரது சகோதரர் அபுதாஹிர், வேலூர் மாவட்டம் சரளப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ராம்கி ஆகிய ஆறு பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். அவர்கள் ஒன்று சேர்ந்து அரிசி மூட்டையுடன் லாரியை கடத்திச் சென்றதை ஒப்புக் கொண்டனர். அவர்களிடமிருந்து கடத்தப்பட்ட லாரி, 7 செல்போன், ஒரு கார் வாங்கியவற்றையும் பறிமுதல் செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த திண்டிவனம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஆங்காங்கே ரேஷன் அரிசி சில்லறை முறையில் முட்டைகளை கடத்தப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன. தற்போது 600 மூட்டைகளுடன் லாரியை கடத்திய மெகா கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.