நாம் தமிழர் கட்சியின் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டச் செயலாளர் பாவேந்தன் தனது ஆதரவாளர்களுடன் இன்று கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அண்மைக் காலமாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் என பலரும் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். இதற்கு பல்வேறு காரணங்களைச் சொல்லி அவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி வந்தனர். சில தினங்களுக்கு முன்பு, 3,000 நா.த.க உறுப்பினர்கள் அக்கட்சியில் இருந்து விலகி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தனர். இது நாம் தமிழர் கட்சிக்கு பெரும் சரிவை ஏற்படுத்தியதாகக் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து நட்சத்திர பேச்சாளரும், நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளருமான காளியம்மாள் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
இந்த நிலையில், ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டச் செயலாளர் பாவேந்தன் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இவர், கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்டு 29 ஆயிரத்து 347 வாக்குகளையும், 2021 சட்டமன்ற தேர்தலில் சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 9,656 வாக்குகளையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாதகவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளரே கட்சியில் இருந்து விலகி இருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.