Skip to main content

ரணில் விக்கிரமசிங்கேவுடன் கனிமொழி, ஜவாஹிருல்லா சந்திப்பு... 

Published on 13/09/2019 | Edited on 13/09/2019

 

இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், இலங்கையின் நகர்ப்புற துறையின் அமைச்சருமான ரவூஃப் ஹக்கீமின் மகளுக்கு இலங்கையில் திருமணம் நடக்கிறது. அண்மையில் சென்னை வந்த ஹக்கீம், தனது மகளின் திருமணத்தில் கலந்து கொள்ளுமாறு தமிழக அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து அழைப்பு கொடுத்திருந்தார். 

 

sri lanka


 

அதன் அடிப்படையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, முஸ்லீம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தின், தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, தமுமுக துணைத்தலைவர் குணங்குடி அனிபா, ராமநாதபுரம் எம்.பி.நவாஸ்கனி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முகமது யூசுப்  உள்ளோட்டோர் இலங்கைக்கு சென்றிருந்தனர். 

 

sri lanka


இந்த பயணத்தின் ஒரு நிகழ்வாக,  இலங்கையின் அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை சந்தித்துப் பேசினார்கள். ஈழத்தமிழர்கள் பிரச்சனை, இலங்கையில் உள்ள முஸ்லீம்கள் சந்திக்கும் பிரச்சனைகள், தமிழர்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வு, தமிழக மீனவர்கள் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டது. 
 

இதனைத் தொடர்ந்து பேராசிரியர் ஜவாஹிருல்லா, ஆங்கிலத்தில் எழுதப்பட்ட மனு ஒன்றை ரணில் விக்கிரமசிங்கேவிடம் கொடுத்தார். 
 

அந்த மனுவின் சாரம்சம்:-
 

இலங்கையை ஆட்சி செய்த பேரரசர் மகா பராக்கிரம பாகுவின் அமைச்சரவையில் 16 அமைச்சர்களில் நால்வர் முஸ்லிம் அமைச்சர்கள். அது போலவே பல சிங்கள அரசர்களுடைய ஆட்சிக் காலத்தில் முஸ்லிமளுக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன. தற்போதையை தங்களது (ரணில்) ஆட்சியில் பேரரசர் மகா பராக்கிரம பாகுவையே மிஞ்சும் வகையில் 9 முஸ்லிம்களை அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தீர்கள். இனவாதம், மதவாதம் இல்லாத தலைவராக  முஸ்லிம் மக்களின் நம்பிக்கையை தாங்கள் பெற்றுள்ளீர்கள். இலங்கையில் முஸ்லிம்கள் ஒவ்வொருமுறை காயப்படுத்தும் பொழுதும் அவர்களின் காயங்களுக்கு மருந்து போடும் பணியையும் செய்து வந்துள்ளீர்கள். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இலங்கையின் முஸ்லிம் மக்களில் பெரும்பான்மையானவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கே ஆதரவளிப்பார்கள் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.


 

 


கடந்த ஏப்ரல் மாதம் 21 அன்று  ஈஸ்டர் தினதன்று ஐ.எஸ் பயங்கரவாதிகளாகல் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 250 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இலங்கையில் முஸ்லிம் சமூகத்தையே சந்தேகக் கண்கொண்டு நோக்கும் நிலைமை உருவானதுடன்,  முஸ்லிம்களால் வெறுக்கப்படும்  ஐ.எஸ் பயங்கரவாதிகள் தாக்குதல்களை மேற்கொண்டாலும் முஸ்லிம் சமூகத்தின் மீதே பழி சுமத்தப்பட்டது.  இதனால் முஸ்லிம் சமூகம் முற்றாக மனம் உடைந்து பேரதிர்ச்சியில் அவர்கள் உறைந்து போயுள்ளனர். அந்த தருணத்தில்  ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு இலங்கை முஸ்லிம்களின் ஆதரவு ஒரு போதுமில்லை என்று தெள்ளத்தெளிவாக தாங்கள் (பிரதமர் ரணில்) அறிவித்தமைக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.


 

 


குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புபட்டவர்களும் ஒத்துழைப்பு வழங்கியவர்களும் கைது செய்யப்பட்டார்கள். நாட்டில் அவசர  கால சட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தேசிய தௌஹீத் ஜமாத் உட்பட மேலும் இரு அமைப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.. சந்தேகத்தின் பேரில் அவசர கால சட்டத்தின் கீழ் சுமார் 300 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
 இந்நிலையில் இலங்கையில் முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்திரையுடன் கூடிய கலாசார உடைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா  தடை விதித்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான அரசின் நடவடிக்கைகளை ஆதரிக்கும் இலங்கையில் வாழும் நாட்டுபற்றுள்ள முஸ்லிம் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆடை கட்டுப்பாடு நடவடிக்கைகள் குறித்து மிக பெரும் கவலையையும் வேதனையையும் அடைந்துள்ளார்கள்.

 

sri lanka


ஆடை உள்ளிட்டவற்றை தன்னகத்தே கொண்டுள்ள கலாச்சார பண்பாடுகள் ஒரு போதும் வெறுப்புணர்வையோ, குரோதத்தையோ ஏற்படுத்தி பயங்கரவாதத்திற்கு வித்திடாது. ஆனால் இனவாதம் போன்ற சமூத தீமைகள் நிச்சயம் பயங்கரவாதத்திற்கு வழிவகுக்கும். பாதுகாப்பு மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை நிலைநாட்டும் பணியை திசைத்திருப்பவும் ஆடை ஒரு பிரச்னையாக எழுப்ப்படுகிறது.  முஸ்லிம் சமுதாயம் நல்லிணக்கத்தையும் பாதுகாப்பையும் வலுப்படுத்தும் ஆக்கபூர்வமான முயற்சிகளுக்கு எப்போதும் உறுதுணையாக தான் இருப்பார்கள்.


 

sri lanka


 
அவசர கால சட்டம் ஆகஸ்ட் 23 ஆம் தேதியுடன் நீக்கப்பட்டது போல  முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்திரையான நிகாப் மற்றும் புர்காவுக்கான தடையும் நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

 

sri lanka


 
மேலும் மதரஸாக்கள் (அரபுக் கல்லூரிகள்) பள்ளிவாசல்கள், காதி நீதிமன்றங்கள் மற்றும் ஹலால் விவகாரம் உள்ளிட்டவைகளுக்கு உரிய பாதுகாப்பினை நல்கிட வேண்டும். ஏப்ரல் 21 பயங்கரவாத நிகழ்விற்கு பிறகு ஏற்பட்ட வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
 

sri lanka


இலங்கையில் வாழும் தமிழர்களின் பேராதரவைப் பெற்றே தாங்கள் இலங்கையின் பிரதமராக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள். இலங்கைத் தமிழர்கள், தாங்கள் நீண்ட நெடுங்காலமாக சந்தித்து வரும் அரசியல் சட்டத்திற்குப் புறம்பான பாகுபாடு மற்றும் கட்டுப்பாடற்ற மனிதநேயமின்மை ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டு வருவார் என்று பெரிதும் நம்பியே தங்களுக்கு வாக்களித்தார்கள்.  தமிழர்கள் வாழும் பகுதிகளிலிருந்து ராணுவம் முழுமையாக திரும்பப் பெறப்பட்டு விடுமென்றும், ராணுவத்தினரால் ஆக்கிரமித்துக் கொண்டுள்ள, தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் வீடுகளை திரும்பப் பெற்று விடலாமென்றும், இனியும் தமிழர்கள் இரண்டாந்தரக் குடி மக்களாக நடத்தப்பட மாட்டார்கள் என்றும், சுயமரியாதையோடும், கண்ணியத்தோடும் கூடிய அமைதியான வாழ்வுக்குரிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுமென்றும், முப்பதாண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வரும் 13வது திருத்தம் நேர்மையான முறையில் அமலுக்குக் கொண்டு வரப்படுமென்பதும் என்றும், தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேறுமென்பதும் தமிழர்களின் தமிழர்கள் எதிர்பார்ப்புகளாக உள்ளன. அவற்றை தாங்கள் விருப்பு வெறுப்பின்றி நிறைவேற்றித் தரவேண்டும்.

 

sri lanka


 
இலங்கைத் தமிழர்கள் தொடர்பாக பிரதமர் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும்  நிறைவேறும்போது, பல்லாண்டுக் காலமாக தமிழர்கள் எதிர்கொண்டு வரும் எண்ணற்ற பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதில் ஒரு நல்ல ஆரம்பம் உண்டாகும்.
 
 


மேலும் இலங்கைக் கடற்படையினரால்  கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் விசைப்படகுகளையும், சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களையும் மனிதாபிமான முறையில் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். பல்வேறு சமூகங்களுக்கு இடையிலான வேறுபாடுகள் களையப்பட்டு மனிதநேயம் தலைத்தோங்கவும் மக்களுக்கிடையிலான உறவுகள் வலுப்படவும் பிரார்த்தனை செய்து நிறைவுச் செய்கிறேன்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மோடியின் வெறுப்பு பிரச்சாரம்; ஆக்சன் எடுக்குமா தேர்தல் ஆணையம்?- ஜவாஹிருல்லா

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Jawahirullah said Election Commission should take action against Modi hate campaign

இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் அனல் கக்கும் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். பிரதமர் மோடி தனது பிரச்சாரத்தில் வெறுப்பு அரசியலை உமிழ்வதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம். எல்.ஏ, "ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,  தனது பொறுப்பு மிக்க பதவியின் கண்ணியத்தையும் சிறப்பையும் சீர்குலைக்கும் வகையில் நஞ்சைக் கக்கி இருக்கிறார். அவர்கள் (காங்கிரஸ்) ஆட்சியில் இருந்தபோது, தேசத்தின் செல்வத்தில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்குத் தரப் போகிறீர்களா... மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லிம்களுக்குச்செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூடவிட்டுவைக்காது என்றெல்லாம் கேடுகெட்ட ஒரு மூன்றாம் தரப் பேச்சாளரைப் போல ஒரு நாட்டின் பிரதமர் பேசியிருப்பது இந்திய நாட்டையே உலக அரங்கில் வெட்கித்  தலைகுனிய வைத்துள்ளது. இதுவரை இந்தியாவில் ஆட்சி செய்த பிரதமர்கள் யாருமே இது போன்ற தரங்கெட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டதில்லை. தனது பத்தாண்டுக் கால ஆட்சியில் மக்களைக் கவரத்தக்கச் சாதனைகளைப் பேச மோடிக்கு ஏதுமில்லை.  

நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுகின்ற நிலையில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மட்ட ரகமான வெறுப்புப் பரப்புரையாளராக மாறியுள்ளார். குஜராத்தில் முதலமைச்சராக இருந்த போது அவரது உள்ளத்தில் உறைந்திருந்த  சிறுபான்மை மக்களுக்கு எதிரான அதிதீவிர குரோத வெறுப்புணர்வும் கலவர வெறியும் பிரதமரான பிறகும் சற்றும் கரையவில்லை என்பதை அவரது பரப்புரை வெளிப்படுத்தியுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளின் அடிப்படையில் மத வெறுப்பு பரப்புரை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. ஒரு பிரதமராக இவர் தேர்தல் நடத்தை விதிமுறையையும் பின்பற்றவில்லை.

நாட்டின் இறையாண்மை மற்றும் அரசியல் சாசனத்தின் சாராம்சத்தையும் மதிக்கவில்லை. ஒருபோதும் சிறுபான்மையினருக்கு எதிராக நாங்கள் இல்லை என்று ஊடகத்தில் விளம்பரம் செய்துவிட்டு, அப்பட்டமாக மதவெறுப்பு பரப்புரையை ஒரு பிரதமரே செய்திருப்பது அக்கட்சியின் அருவருப்பான சந்தர்ப்பவாதத்தை மக்களுக்கு உணர்த்தி உள்ளது. பிரதமர் பதவிக்கான கண்ணியத்தைச் சீர்குலைத்துள்ள பிரதமர் மோடிக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர் மீது இந்தியத் தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுத்து தனது நடுவுநிலையை நிரூபிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

இதை இந்தியத்தேர்தல் ஆணையம் மௌனமாகக் கடந்து போனால், அதன் நம்பகத்தன்மை உலக அரங்கில் கேள்விக்குறியாகிவிடும் என்பதையும் கருத்திற்கொண்டு விரைந்து நடவடிக்கை எடுத்திடவேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார் ஜவாஹிருல்லா.

Next Story

“ஜனநாயகமா? சர்வாதிகாரமா?” - கனிமொழி ஆவேசம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Kanimozhi obsession on modi and she questioned Democracy? Dictatorship? for lok sabha election

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் கனிமொழி, நேற்று (16/04/2024) ஶ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆழ்வார்திருநகரி பேரூராட்சியில் பொதுமக்களிடம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது, தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இந்தியா கூட்டணி சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி, “அம்மையார் ஜெயலலிதா ஒருமுறை சொன்னது போல் பரம்பரை பகைக்கான தேர்தல் தான் இது. சமூக நீதிக்கும் சமூகத்தின் அநீதிக்கும் இடையே நடக்கும் தேர்தல். ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய தேர்தல். ஜனநாயகமா? சர்வாதிகாரமா? என்பதை முடிவு செய்ய வேண்டிய தேர்தல் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஜனநாயகத்தின் மீது பா.ஜ.க.விற்கோ நரேந்திர மோடிக்கோ துளியும் நம்பிக்கை கிடையாது. 

பாராளுமன்றத்திற்கே வராத பிரதமர் என்ற பெருமை இருக்கிறது என்றால் பிரதமர் நரேந்திர மோடியையே சேரும். என்றாவது ஒருநாள் அவர் பாராளுமன்றத்தில் பேசுகிறார் என்றால் அவரது சாதனைகளையும் எதிர்க்கட்சிகளின் குறைகளையோ பேசுவதில்லை. யார் என்ன கேள்வி கேட்டாலும், முதலில் பிரதமர் மோடி, ஜவஹர்லால் நேரு கிட்ட சண்டை போடுவார். பெட்ரோல் விலை ஏன் ஏறியது எனக் கேட்டாலும், என்ன கேள்வி கேட்டாலும் ஜவஹர்லால் நேருவிடமிருந்து ஆரம்பிப்பார். எதிர்க்கட்சியினர் அவரை எதிர்த்து கேள்வி கேட்டதால், அனைவரும் வெளியேற்றப்பட்டோம்.

Kanimozhi obsession on modi and she questioned Democracy? Dictatorship? for lok sabha election

எந்த விவாதத்திலும் அவருக்கு நம்பிக்கை கிடையாது. பத்திரிகையாளர்களை அவர் சந்திப்பதில்லை. சமூக செயல்பாட்டாளர்கள் கேட்டால் அவர்கள் மீது வழக்கு. மலைவாழ் மக்களுக்காக தனது வாழ்நாள் முழுவதும் உழைத்த 92 வயது முதியவரைத் தீவிரவாதி என வழக்குப் போட்டு சிறையில் அடைத்தனர். தமிழகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பெயில் கிடையாது. பா.ஜ.க.வில் உள்ள வாஷிங்மெஷினில் அக்கட்சியில் சேருபவர்கள் சுத்தம் செய்யப்படுகிறார்கள். எதிர்க்கட்சியினரை சிறையில் போடுவார்கள்.

விவசாயிகள் டெல்லிக்குள் வந்து விடக்கூடாது என்று ட்ரோன் மூலம் கண்ணீர் புகைக்குண்டு, ரோட்டில் ஆணியை பதித்துக் கொண்டு விவசாயிகளைத் தடுக்கும் ஆட்சிதான் நரேந்திர மோடி ஆட்சி. மதத்தை வைத்து, ஜாதியை வைத்து மக்களை பிரிக்கக் கூடிய ஆட்சி. ஜிஎஸ்டி போட்டு சின்ன சின்ன கடைகள், சின்ன சின்ன வியாபாரிகள், சிறு, குறு தொழில்கள் என எல்லாத்தையும் நாசமாக்கி பலரைக் கடையை மூட வைத்த ஆட்சி பா.ஜ.க ஆட்சி.

தமிழகத்தில் ஜிஎஸ்டி வரியை எல்லாம் கொண்டு போய் ஒரு ரூபாய் வாங்கிக்கொண்டு 29 பைசா மட்டுமே தரப்படுகிறது. ஆனால், பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு 3 ரூபாய் முதல் 7 ரூபாய் என வழங்கப்படுகிறது. ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட வந்து எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. வெள்ளத்தில் வீடுகள் இடிந்த போது கவலைப்படவில்லை. ஆனால், கோவிலில் உண்டியலில் காசு போடாதீர்கள் தட்டில் போடுங்கள் என அறிவுரை வழங்குகிறார்.

தமிழகத்திற்கு வஞ்சனை செய்யக்கூடிய ஆட்சி பா.ஜ.க ஆட்சி. வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது இங்கு வராத மோடி, தேர்தல் வந்ததும் தமிழகத்தை சுற்றிச் சுற்றி வருகிறார். பா.ஜ.கவிற்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஓட்டுப் போட்டுவிடக்கூடாது. பா.ஜ.க கொண்டு வந்த சட்டங்களுக்கு ஆதரவாக வாக்களித்த அ.தி.மு.க.விற்கும் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

பெண்களுக்கு எதிராக குற்றங்களைப் புரியும் 44 பேர் எம்.பி.யாக பா.ஜ.க.வில் உள்ளனர்.  பா.ஜ.க எம்.பிக்கு எதிராகப் போராடிய மல்யுத்த வீராங்கனைகள் மீது வழக்குகள் போடப்பட்டது. தவறு புரிந்த அவர் மீது எந்த வழக்கும் போடவில்லை. ஹிந்தி படிக்க வேண்டும் என்று சொன்ன மோடி, தேர்தல் வந்ததும் தமிழ் படிக்க வேண்டும் என்கிறார்.  மக்களுக்கு எதிராக ஆட்சி செய்யக்கூடிய பாஜக புறக்கணிக்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். இந்த நாட்டுக்கு அவர்கள் தேவையில்லை என்பதை மக்கள் புரிய வைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.